இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பிரணதியோ வரூனுக்கு போன் செய்து வர வேண்டாம் என்று சொல்ல நினைத்தாள்... ஆனால் அங்கு சிக்னல் சுத்தமாக இல்லாததால் அவளால் வரூனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
செந்தில் பூசாரியை கூட்டிக் கொண்டு வந்தார்... "நீங்க வந்த நேரம் மழை பெய்து குளத்துல தண்ணி நிறைய இருக்கு.... பொங்கல் வைக்கறதுல இருந்து பூஜை பண்றது எல்லாத்துக்கும் அந்த குளத்து தண்ணி தான் எடுத்துட்டு வந்து செய்யனும்... தண்ணி இல்லாம வரண்டு இருக்கும் போது தான் இங்க இருக்க பம்ப்ல தண்ணி எடுத்துப்பாங்க...
இப்ப குளத்துல தண்ணி இருக்கறதால அங்கேயே தண்ணி எடுத்துக்கிட்டு வந்து பொங்கல் வைங்க... இப்போ உங்க மகன் மருமகளுக்காக தான் இந்த பூஜை செய்யப் போறதால அவங்களே தண்ணி எடுத்துட்டு வரட்டும்... பொங்கல் பானையை உங்க மருமகளே அடுப்பு மூட்டி வைக்கட்டும்...." என்று அந்த பூசாரி சொன்னார்.
ஒரு குடத்தை எடுத்துக்கிட்டு பூசாரி சொன்னது போல் கோவிலின் பின்புறம் கொஞ்சம் தூரத்தில் உள்ள அந்த குளத்துக்கு பூசாரி சொன்ன வழியாக சென்றனர் பிருத்வியும் யுக்தாவும்...
யுக்தா பொதுவாக அவளுக்கு ஏற்படும் பயத்தை வெளிக்காட்ட மாட்டாள்.. எதுவாக இருந்தாலும் அவள் பயம் மனசுக்குள்ளேயே தான் இருக்கும்... இந்த இடம் பார்க்க அழகாக இல்லையென்றாலும் யாரும் ஆட்கள் இல்லாமல் தனிமையாக அதுவும் பிருத்வியோடு தனியாக நடந்து போவதென்றால் அதை அவள் ரசிக்க வேண்டும்...
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
ஆனால் அதை ரசிக்க முடியாதபடி அவளை அங்கே பயமுறுத்தியது கருவேலஞ்செடிகளும்... புதர்களும் இருக்கும் அந்த இடத்தில் கண்ணுக்கு தட்டுப்படும் சில பாம்புகள்... ஏனோ அதைப் பார்த்தால் ஒரு அருவருப்பு, பயம் எல்லாமே அவளுக்கு வந்துவிடும்... ஏனோ உடலில் நடுக்கம் ஏற்படும்...
அப்படி பயத்தோடு நடந்துக் கொண்டிருக்க திடிரென்று ஒரு பாம்பை பார்த்த அவள்... அவளையும் அறியாமல் பிருத்வியின் கையை பிடித்துக் கொண்டாள்...
இந்த தனிமையில் யுக்தாவோடு இணைந்து நடந்துபோவதை பிருத்வி அதிசயமாக ரசித்துக் கொண்டு வந்தான்... இதில் அவளாக அவன் கையைப் பிடித்ததில் சந்தோஷப்பட்டான்... ஆனால் அவள் முகத்தில் உள்ள பயம் அவனுக்கு தெரிந்தது...
"யுக்தா என்னாச்சு.. ஏதோ பயப்பட்ற மாதிரி இருக்கு..."
"அது பிருத்வி... இங்க பாம்புங்க இருக்கு... அதான் கொஞ்சம் பயமா இருக்கு பிருத்வி.."
அவள் அப்படி சொன்னதும்... சிறுவயதில் கிண்டியில் உள்ள குழந்தைகள் பூங்காவிற்கு சென்றபோது பாம்பு பண்ணைக்கு வரமாட்டேன் என்று அவள் அடம்பிடித்ததும்.. அதனால் அங்கு போகாமலேயே திரும்பி வந்ததும் பிருத்விக்கு நினைவு வந்தது...
"இங்கப் பாரு ஆளுங்க நடமாட்டம் இருந்தா பாம்புங்க கிட்டல்லாம் வராது பயப்படாத..." என்று அவளுக்கு தைரியமூட்டினான்.
"இல்லை பிருத்வி பயமெல்லாம் இல்லை... இருந்தாலும் அதைப் பார்த்தா என்னமோ மாதிரி இருக்கு அவ்வளவுதான்..." என்றாள்.
பின் இருவரும் மௌனமாக நடக்க... கொஞ்சம் தூரம் போனதும் அங்கே ஆள் நடமாட்டம் இருந்தது... கொஞ்சம் வயல்வெளிகளும் தெரிந்தது... அங்கிருப்பவர்களிடம் குளம் இருக்கும் பகுதியை கேட்டு இருவரும் சென்றார்கள்... குளத்தை சுத்தி மரமும் செடிகளுமாக இருந்தது... குளக்கரையை அடைய ஒரு ஒத்தையடி பாதையில் செல்ல வேண்டியதாக இருந்தது... அந்த பாதையில் இருவரும் நடக்க இன்னும் கொஞ்சம் நெருக்கமாக ஒட்டி நடக்க வேண்டியதாக இருந்தது...
குளத்தில் தண்ணி எடுத்ததும்.. பிருத்வி அதை தூக்கி கொண்டு வர... யுக்தாவிற்கு அவன் கையை பிடித்து நடக்க முடியவில்லையென்றாலும் அவனோடு ஒட்டிக் கொண்டு நடந்து வந்தாள்... முதலில் பயத்தோடு வந்தாலும் இந்த நேரங்கள் அவளுக்கும் பிடித்திருந்தது..
தண்ணீர் கொண்டு வந்ததும் பொங்கல் வைக்கும் வேலை ஆரம்பித்தது... பிரணதியோ டென்ஷனோடு உட்கார்ந்திருந்தாள். யுக்தாவும் அவள் பதட்டத்தை கண்டு என்னவென்று கேட்டாள்.. அதற்கு பிரணதி ஒன்றுமில்லை என்று மறுத்துவிட்டாள்... எல்லா வேலைகளும் முடிந்து அபிஷேகம் ஆரம்பிக்க திரும்பவும் தண்ணீர் எடுத்து வரச் சொன்னார் பூசாரி...
"அம்மா நாங்க ரெண்டுபேரும் போய் எடுத்துக்கிட்டு வரோம்.." என்று பிருத்வி தயாராக அவர்கள் இருவரையும் மதியும் செந்திலும் அனுப்பி வைத்தனர்.. இந்த முறை இருவரும் சேர்ந்து தண்ணீர் எடுத்து வரவேண்டும் என்று பூசாரி சொல்லவில்லை என்றாலும் நாங்க எடுத்துக்கிட்டு வரோம் என்று பிருத்வி சொன்னதையும்... குடத்தை தயாராக எடுத்துக் கொண்டு யுக்தா நின்றதையும் பார்த்து சிரிப்பு தான் வந்தது... அவர்களுக்குள் எல்லாம் சரியாகும் நாள் வெகு தூரமில்லை என்று சந்தோஷப்பட்டனர் இருவரும்...