05. புத்தம் புது காலை - மீரா ராம்
அன்றே அவர்களுக்கு திக் என்றிருந்ததே… அது இத்தனை துன்பங்கள் நான் வாழ்வில் படப்போகிறேன் என்பதற்காகத்தானா?...
எனில் எதற்காக நான் அன்று சம்மதம் சொன்னேன் என யோசித்து யோசித்து எவ்வளவோ பார்த்தும் அதற்கான விடை மட்டும் சரயூவிடத்தில் கிடைக்கவே இல்லை…
காய்ச்சல் கொஞ்சம் குறைந்தது போல் இருக்கவும் மனம் பழைய நினைவுகளை தூக்கி மெல்ல அசைபோட ஆரம்பிக்க, அதிலிருந்து அவளும் கொஞ்சம் வெளிவர முயற்சித்தாள்…
சமையல் அறையை நோக்கி வந்தவளை எதுவும் சொல்லாமல் அமைதியாக பார்த்தாள் சரயூவின் வீட்டில் வேலை செய்யும் நாற்பது வயதைத் தொடப்போகும் விசாலம்…
“இந்த ஒருவேலை தான் நீ செஞ்சிட்டு இருந்த… இப்போ அதையும் என் தலையில கட்டிட்டல்ல… நல்லா இரும்மா நீ நல்லா இரு…” என தன்னை வேலை செய்ய விட்டுவிட்டாளே என்ற கடுப்பில் விசாலம் பொரிய,
“நீங்க வந்ததும் என்னை எழுப்பியிருக்கலாம் தான… நகருங்க… நானே செய்யுறேன்…” என்றபடி அவளருகில் வந்தாள் சரயூ…
“ஆமா நீ பெரிய மகாராணி… உன்னை வந்து எழுப்ப வேற செய்யணுமா நான்?... இருக்குற வேலை பத்தாதுன்னு இதுல இது வேறயா?...”
“நீங்க நகருங்க.. நான் தான் செய்யுறேன்னு சொல்லுறேனே…” என அவள் அழுத்தமாய் சொல்லவும்,
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“எதுக்கு நகரணும்?... திடீர்னு தம்பி வந்து நிக்கும்போது என்னை பொல்லாதவளா ஆக்குறதுக்கா?... ஒன்னும் தேவையில்லை… உன் வேலையை நீ போய் பாரு… தம்பி சொன்ன வேலையை நான் பார்த்துப்பேன்…” என்றாள் விசாலம் பட்டென்று…
அவள் சொன்னதை கேட்டதும் அதற்கும் மேல் அங்கே நிற்க வேண்டாம் என தோன்றிவிட, சரயூ அங்கிருந்து செல்லுகையில்,
“இதுக்குத்தான ஆசைப்பட்ட?... அனுபவிம்மா… நல்லா அனுபவி… போ போய் தூங்கு… எங்க திலீப் தம்பிக்கு இப்படியும் ஒரு பொண்டாட்டி… எல்லாம் திலீப் தம்பி நேரம்… வேற என்னத்த சொல்ல?...” என விசாலம் தனது புலம்பலை தொடங்க ஆரம்பிக்க, சரயூ தனதறைக்கு வந்துவிட்டாள்…
அறைக்கு வந்தவள், கட்டிலின் அருகில் உள்ள டேபிள் மீது இருந்த கணவனின் புகைப்படத்தை கையிலெடுத்தாள்…
பல பல நினைவுகள் தன்னைத் தாக்க, அவள் எதை எப்படி எடுத்து கொள்ள என புரியாது தத்தளித்தாள்…
கல்யாண வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்று போல் அமைவது கிடையாது தான்… எனினும், அவளுக்கு அமைந்திருக்கும் வாழ்க்கை இவ்வளவு வித்தியாசமாக அமைந்திருக்க வேண்டாம் தான்…
என்ன செய்ய அமைந்து விட்டதே என்றெண்ணி நொந்து கொண்டால், அடுத்து நடக்க போவதை யார் எதிர்நின்று சமாளிப்பது?...
அவள் தானே தைரியமாய் இருக்க வேண்டும்… இருக்கவேண்டும் என்பதை விட, இருந்தாக வேண்டும் என்ற கட்டாயமும் அவளை சுற்றி பின்னப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளாத அளவிற்கு அவள் ஒன்றும் முட்டாள் இல்லையே…
மாமனார் சண்முகமோ அதிகம் பேசாதவர்… என்ன என்றால் என்ன… அதற்கும் மேல் அவர் மருமகளிடம் பேசியதில்லை…
சுகன்யா, நாத்தனார் நிலையில் இருப்பவள்… அவளும் கல்யாணம் முடிந்து சென்றாலும், கொடுமைக்கார நாத்தனார் இல்லை தான்… ஒரளவிற்கு தோழி என்று சொல்லிக்கொள்ளலாம்… அதற்காக ஒட்டி உறவாடும் நெருங்கிய தோழிகள் என்று சொல்ல முடியாது…
அடுத்தது பிரசாந்த்… திலீப் தம்பி… அவனும் தேவைக்கு அதிகமாக பேசியதில்லை எனலாம்… அதிலும் அவன் இங்கே வருவதே கிடையாது… மும்பையில் தான் எப்போதும் இருப்பான்… வருடத்திற்கு ஒரு முறை வருவான் என்பதற்கும் உத்திரவாதம் கிடையாது… அப்படியே வந்தாலும் இரண்டு நாட்களுக்கு மேல் தங்கியதில்லை…
இந்த கொடுமையில் அந்த இரண்டு நாட்கள் அவன் வந்து தங்குவது, திலீப்பிற்கு பிடித்து தொலைக்காது..
அண்ணன் தம்பி என்று தான் பெயர்… அவனிடத்தில் கூட திலீப் உட்கார்ந்து அரட்டை அடித்து பார்த்ததில்லை என்பது தான் சரயூ அறிந்த உண்மையும் கூட….
மொத்தத்தில் குடும்பத்தில் யாருக்கும் கலகல உணர்வே கிடையாதோ என்ற எண்ணமும் அவளுக்குள் எழாமல் இல்லை…
குடும்பமாய் சேர்ந்து அவர்கள் பேசி அவள் பார்த்திட்டால் அது அதிசயம் தான்…
புகுந்த வீட்டில் மாமியார் இல்லாத குறையை தீர்த்து வைக்கவே விசாலம் இருப்பதாக உணர்ந்தாள் சரயூ..
எனினும் அவளின் மாமியார், விசாலம் போல் இல்லை துளியும்… ஆம், அவளைப் பெண் பார்க்க வருவதற்கு சில மாதங்கள் முன்னாடி தான் திலீப்பின் அம்மா தவறிவிட்டார்கள்…
திலீப்பின் வீட்டில் ரொம்ப காலமாய் வேலைப் பார்த்து வருபவள் தான் விசாலம்….
இரக்க குணம் நிரம்ப உள்ளவர் தான் திலீப் அம்மா… யார் வந்து உதவி என்று கேட்டாலும், உடனே பணம், காசு பார்க்காது உதவிடும் தாராள மனம் கொண்டவர் தான் திலீப் அம்மா…
அதனால் தான் என்னவோ கடவுள் அவரை சீக்கிரம் தன்பக்கம் எடுத்துக்கொண்டாரோ, என ஒரு சில சமயம் தோன்றியதுண்டு சரயூவிற்கு… மேலும், அவர் இருந்திருந்தால், திலீப்பும் இப்படி இருந்திருக்க மாட்டோரா, விசாலமும் தன்னிடம் இப்படி நடந்துகொள்ள மாட்டார்களோ என்ற நினைப்பும் அவளுக்கு அவ்வப்போது வந்து வந்து போகும்…
வந்து வந்து போய் என்ன பயன்?... அவள் மாமியார் இல்லையே அவளுடன் துணையாக… இதுவும் காலத்தின் ஒரு கட்டாய கோலமாக இருந்தால் யார் தான் என்ன செய்திட முடியும்?...