அமேலியா - 04 - சிவாஜிதாசன்
தீவிரவாதிகளால் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்ட இடத்தில் அமெரிக்க ராணுவனத்தினர் ஏராளமானோர் குவிந்திருந்தனர். பொதுமக்கள் நுழையாதபடி அவ்விடத்தை சுற்றி பலமான காவல் அமைக்கப்பட்டிருந்தது. வெடிகுண்டு விபத்தில் அந்த வீதியில் இருக்கும் வீடுகள் பல தரைமட்டமாக கிடந்தன. பெருமளவு உயிர் சேதங்கள்; உடல் பாகங்கள் துண்டு துண்டாகக் கிடந்தன. இரக்கமற்றவன் கூட நடுக்கமடையக் கூடிய காட்சிகள் அவை.
தூவானம் தூறிக்கொண்டிருந்தது. பாதுகாப்பு வேலியைத் தாண்டி நூற்றுக்கணக்கான மக்கள் கண்ணீரோடு தங்கள் சொந்தங்களுக்கு என்ன ஆனதோ என கதறி அழுது கொண்டிருந்தார்கள் சிலர் பாதுகாப்பைத் தாண்டி உள்ளே செல்ல முற்பட்டனர். அவர்களை காவல்துறையினர் தாக்கினர். இதனால் மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் கடுமையான வாக்குவாதங்கள் உருவாகி தள்ளுமுள்ளு உண்டாயிற்று.
மக்களின் கோபம் அதிகரித்துக்கொண்டே போனது. என்ன ஆனாலும் சரி, பாதுகாப்பு வேலியைத் தாண்டிவிட வேண்டும் என அனைவரும் ஆயத்தமானார்கள். அவர்களின் செயலைக் கண்ட ராணுவத்தின் உயரதிகாரி, "நீங்கள் அமைதியாக இல்லையென்றால் உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்" என மைக்கில் எச்சரித்தார். அதன் பின், கூட்டம் மெல்ல மெல்ல அமைதியானது.
விபரம் கேள்விப்பட்டு அமேலியாவின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு பதற்றத்தோடு ஓடி வந்தார்கள். வீதியே நிர்மூலமாகக் கிடப்பதைப் பார்த்து செயலற்று போனார்கள். பலியான உடல்கள் குப்பைகளைப்போல் போடப்பட்டிருந்ததைக் கண்டு தலையில் இடி இறங்கியதை போல் உணர்ந்தனர். முகமது யூசுப், தன் மகள் அமேலியா சென்றிருந்த அல் ஷீபாவின் வீடு இருந்த இடத்தை நோக்கினார். அப்படி ஒரு வீடு இருந்ததற்கான அடையாளமே அங்கு இல்லை.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
ஹகீம் அவ்விடத்திற்கு ஓடி வந்தான். அவனைக் கண்ட யூசுப் கதறியபடி அமேலியா எங்கே என விசாரித்தார். அவனால் பதில் கூற முடியவில்லை. தன்னுடைய செயல் தான் இந்த சம்பவத்திற்கு காரணமா என அவன் குற்ற உணர்ச்சியில் வார்தையற்று நின்றான்.
"அமேலியா நல்லாதான இருக்கா?" என்று அழுதபடி கேட்டார் ஃபாத்திமா.
ஹகீம் அழுதான். "அக்காவை பாட்டி வீட்டுல விட்டுட்டு வெளியே காத்திருந்தேன். பக்கத்து தெரு தாத்தா ஒருத்தர் நடக்க முடியாம நடந்து வந்துட்டு இருந்தாரு. அவரை கைத்தாங்கலா பிடிச்சு அவரோட வீட்டுல கொண்டுபோய் விட்டுட்டு வர போயிருந்தேன்" என்று அவன் கூறி முடித்தான்.
அவர்கள் கண் முன்னே ஓர் உடலைக் கொண்டுவந்து போட்டார்கள். அதை பார்த்த யூசுப் அதிர்ச்சியில் உறைந்து போனார். மார்புக்கு கீழே எந்த பாகமும் இல்லாமல் சிதிலமடைந்த அந்த உடலைக் கண்டதும் யூசுப் கதறி அழுதார். அல் ஷீபாவின் உடலே இப்படி கொடூரமாக இருக்கிறதென்றால் தன் மகளின் கதி என்ன ஆகியிருக்கும் என்பதை புரிந்துகொண்டார்.
அழுதபடி, பாதுகாப்பு வேலியைத் தாண்டி உள்ளே செல்ல முற்பட்டார். அவரை தடுக்க துப்பாக்கியின் பின் பகுதியால் பலமாக தாக்கினான் ராணுவ வீரன். அவர் மூக்கு உடைந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அவர் துடித்தபடி கீழே விழுந்து உட்கார்ந்தபடி அழுதார். அவர் தோள்களில் சாய்ந்தபடி ஃபாத்திமாவும் அழுதார்
தன் மகளின் விதி இப்படியா முடிய வேண்டும். இறக்கும் தருவாயில் தன் மகள் எப்படி துடிதுடித்து இருப்பாள். தன் மகளுக்கு இப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்று தானே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தேன். சிறு வலியைக் கூட தாங்கிக்கொள்ளமுடியாத என் மகளுக்கு அல்லாஹ் இப்படி ஒரு தந்தையை கொடுத்துவிட்டாரே என்று புலம்பியபடி கதறி அழுதார் யூசுப்.
ஹகீம் குற்ற உணர்ச்சியில் அழுதான் தான் தீவிரவாதிகளை சந்திக்காமல் இருந்திருந்தால் இங்கு ஒன்றுமே நடந்திருக்காது என்று மனதிற்குள் புழுங்கினான்.
இவையெல்லாம் எதுவும் தெரியாத அமேலியா பீரங்கியில் மயக்க நிலையில் படுத்துக்கொண்டிருந்தாள்.
அமெரிக்க ராணுவத்தினரின் நான்கைந்து பெரிய வண்டிகள் அங்கு வந்து நின்றன. சேதமடைந்த பீரங்கிகள், ஜீப்புகள் போன்ற வண்டிகள் கிரேன் மூலம் ஏற்றப்பட்டன. பின்னர், இறந்து போன அமெரிக்க ராணுவனத்தினரின் உடல்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.
வண்டிகள் சென்றவுடன் பாதுகாப்பு தளர்த்தப்பட்டது. மக்கள் இறந்து போன தங்கள் சொந்தங்களை கண்டு அழுதனர். எது தன் மகளின் உடல் என்று தெரியாத யூசுப் ஒரு பெண்ணின் உடலைக் கட்டிப் பிடித்து குழந்தையைப் போல் அழுது கொண்டிருந்தார். அவ்விடமே சோகங்களின் சொர்க்கபூமியானது.
ராணுவ முகாம் ஆழ்ந்த சோகத்தில் அமைதியோடு இருந்தது. இரவு நேரத்தில், ஓய்வெடுக்கும் ராணுவ வீரர்கள் சந்தோசத்தோடு சிரித்து பேசி மகிழ்ந்திருப்பார்கள். அக்காட்சி இன்று இல்லை. தங்கள் நண்பர்கள் சுமார் முப்பது பேர் தீவிரவாதிகளால் மாண்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உணவு இருந்தது, புசிக்க யாரும் முன்வரவில்லை.
கர்னல் ஜார்ஜ், பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு உத்தரவு பிறப்பித்துக்கொண்டிருந்தார்.
"இன்னைக்கு பாதுகாப்பு பலமா இருக்கட்டும். தீவிரவாதிகள் ஒட்டு மொத்தமா திரண்டு வந்து நம்மள தாக்கபோறதா செய்தி கிடைச்சிருக்கு அதே போல இன்னைக்கு வந்த சரக்கு கப்பலையும் தாக்க திட்டமிட்டு இருக்காங்க. இதுக்கெல்லாம் நாம இடம் கொடுக்ககூடாது. ம்ம் புறப்படுங்க"