வில்லியம்ஸின் முகத்தை கூர்ந்து நோக்கினார் கர்னல்
நான் இதுவரை எந்த குற்றமும் பண்ணியது இல்லை கர்னல் .அதனால கடவுளுக்கு ஒரு சவால் விட்டு இருக்கேன்.
என்ன அது?
நான் இறந்துட்டா மனிதர்கள் யாரும் என்ன தொடாமலே மிகப்பெரிய சாமதிக்குள்ள நான் தஞ்சம் புகணும்.
என்ன முட்டாள் தனமான கற்பனை இது. உன் காதலியோடு நல்லபடியா வாழப்போற நீ எதுக்கு கவலைப்படணும்.
"நான் கிளம்புறேன் கர்னல்" என்று கூறிய வில்லியம்ஸ் சில அடிகள் எடுத்து வைத்து கர்னலின் முகத்தை நோக்கினான். "உங்க மகன் இறந்ததுக்கு என்னுடைய வருத்தங்கள்" என்று கூறினான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்...
அவனது வருத்தத்தை ஏற்றுக்கொண்ட கர்னல், "உனது பிரயாணம் மகிழ்ச்சி நிறைஞ்சதா இருக்கட்டும் வில்லியம்ஸ்".என்று அவனுக்கு வாழ்த்துகளை சொன்னார்.
வில்லியம்ஸ் சிரித்தபடி தனது கட்டைவிரலை உயர்த்தி காட்டி, அவரிடம் விடைபெற்று அவனை அழைத்து செல்ல நின்றிருந்த ஜீப்பில் ஏறினான். வண்டி புறப்பட்டு சென்றது.
மிகப்பெரிய ராணுவக் கப்பல் கடல் மேடையில் மிதந்து கொண்டிருக்க, அதிலிருந்து ஆயுதங்கள், உணவு பொருட்களை நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அந்த ராணுவக் கப்பலைச் சுற்றி பல சிறிய கப்பல்களில் ராணுவ வீரர்கள் துப்பாக்கியோடு பாதுகாத்துக் கொண்டிருந்தனர்.
ராணுவக் கப்பலை தீவிரவாதிகள் தாக்க திட்டமிட்டிருப்பதாக செய்தி வந்ததிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் சுற்றளவுக்கு ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர். பல ராணுவ வண்டிகள் வருவதும் போவதுமாக இருந்தன.
நள்ளிரவை தாண்டியும் அவ்விடத்தில் இருக்கும் பரபரப்புக்கு குறைவில்லை. லேசான மழைத் தூறல், கடற் காற்றின் கடும் குளுமையில் ராணுவ வீரர்களின் உடல் சில்லிட்டது. வேலை செய்திருந்த பெரும்பாலான வீரர்கள் சோர்வாகிவிட்டனர். சிலர் அங்கே தீமூட்டி குளிர்காயத் தொடங்கினர். சிலர் புகைபிடிக்க தொடங்கினர்.
கப்பலின் கேப்டன் ஜாக்சன் தீவிரவாதிகளின் தாக்குதல் செய்தியைக் கேட்டதிலிருந்து பயத்துடனும் பதற்றத்துடனும் கப்பலில் சுற்றிக்கொண்டிருந்தார். கப்பலில் இருக்கும் பொருட்களை துரிதமாக இடமாற்றம் செய்துகொண்டிருந்த ராணுவத்தினர் அவரின் பார்வையில் சோம்பேறிகளாக தென்பட்டார்கள்.
'இவ்வளவு மெத்தனமாவா வேலை செய்யுறது' என்று தனக்குள்ளாகவே முணுமுணுத்துக்கொண்டார்.
"கேப்டன் ஜாக்சன் இப்படி ஒரு பயந்த பிறவியா இருக்கீங்களே. உங்களை பாக்கவே எனக்கு வருத்தமா இருக்கு" என்றான் ராணுவ வீரன் ஒருவன்
ராட்சத மின்விளக்கு வெளிச்சத்தில் அவன் முகம் தெளிவாக தெரிந்தாலும் மின்னலின் ஒளி அவன் முகத்தை மேலும் பளிச்சிட்டு காட்டியது.
மரணத்தை விட மரண பயம் ரொம்ப கொடுமையானது இளைஞனே. சோமாலியா கடற்கொள்ளையரிடம் சிக்கி இருக்கியா? உன் கண் முன்னாடி உன் கூட வேலை செய்தவர்கள் துடிதுடித்து இறந்து போனத பாத்திருக்கியா? தலைக்கு ஒரு விலை வச்சு, அதுக்கு தேதியும் குறிச்சு உயிரோடு இருப்போமா இல்லை உயிரை விடுவோமான்னு பயத்துல உறஞ்சிருக்கியா? கடைசில, கொல்ல முடிவெடுத்து உன் நெஞ்சுல இன்ச் இன்ச்சா கத்தியை உள்ள இறக்கும் பொழுது என்ன பண்ணுவ?
ராணுவ வீரரின் முகம் கூர்மையானது.
"துப்பாக்கி எடுத்து சுட்டுட்டா அஞ்சு நிமிஷத்துக்குள்ள உயிர் போய்டலாம். வலி ஒரே அளவுல இருக்கும். ஆனா கொஞ்சம் கொஞ்சமா உயிர் பிரியிற வலி, இனி நாம அவ்வளவுதான்னு உயிர் பயத்துல கத்தியிருக்கியா? இது அத்தனையும் நான் அனுபவிச்சிருக்கேன். என் நல்ல நேரம் ராணுவம் உள்ளே நுழைந்து சோமாலியா கடற்கொள்ளையர்களை சுட்டு என்ன காப்பாத்துச்சு. என் நிலமைல நீ இல்லை, வேறு யாரு இருந்தாலும் அந்த சம்பவத்தில் இருந்து பயந்துட்டேதான் இருப்பாங்க" என்று கூறிவிட்டு ராணுவ வீரனை கூரான விழிகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து கப்பலில் உள்ள தனது அறைக்கு சென்றார்.
சுமார் நான்கு மணி நேர பயண முடிவில், வில்லியம்ஸ் கடற்கரையை அடைந்தான். அங்கு நிலவிய குளிர் காற்று அவன் மனதிற்கு புத்துணர்வைத் தந்தது. நீண்ட நாட்களை சிறையிலையே கழித்து விடுவிக்கப்பட்ட கைதி எவ்வாறு உலகைக் காண்பானோ அவ்வாறு அந்த கடற்கரையை கண்டான். வண்டியில் இருந்து கீழே இறங்கி சிறிது நேரம் கடற்கரையில் அமர்ந்தான். காதலி சாராவின் நினைவு வந்தது. கூடவே துயரமும் வந்தது. கண்ணீரைத் துடைத்தான்.
சேதமடைந்த ராணுவ பீரங்கிகள் ராட்சத கிரேன் மூலமாக கப்பலின் மேல் மாடத்தில் இறக்கிவைக்கப்பட்டன. இறந்த ராணுவ வீரர்களின் உடல்களை, ராணுவ வீரர்கள் மரியாதையோடு தங்கள் தோள்களில் சுமந்தபடி கப்பலுக்குள் சென்றனர். பழுதடைந்த பீரங்கிகளை வீரர்கள் மேலோட்டமாக சோதனையிட்டனர். அமேலியா மயங்கிக் கிடந்த பீரங்கியினுள் சோதனை செய்த ஒருவன் அவள் மேல் விழுந்திருந்த போர்வையை எடுத்து பார்த்திருந்தால்.கதையே வேறு மாதிரியாக அமைந்திருக்கும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. அமேலியா இருக்கும் பீரங்கியை, கிரேன் சில நிமிடங்களில் கப்பலில் ஏற்றிவிட்டது.