தோட்டத்தில் சில்லென்ற காற்று உடலைத் தீண்டிச் செல்ல, அதை ரசிக்கும் நிலையில் இல்லை ஜெய்…
அவளின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து அவன் அங்கே காத்திருந்த போது, அவள் வரவில்லை… இப்போது எதேச்சையாக அவனும் அப்பக்கம் வர, அவன் கால்களும் தானாக அங்கு சென்றது…
இஷானும் தைஜூவும் சற்று நேரம் பேசட்டும் என கீழிறங்கி வந்தவளின் பார்வை எதேச்சையாக தோட்டத்தைப் பார்க்க, ஒருவேளை அவர் இங்கிருப்பாரோ என்ற எண்ணம் வர, புத்தியோ இல்லை என மறுக்க, மனமோ அவளை அத்திசையில் செல்ல ஆணையிட்டது…
கடைசியில் மனமே வென்றது என்பதை அங்கு சென்ற சில நொடிகளிலேயே தெரிந்து கொண்டாள் சதி…
மனமெங்கும் மகிழ்ச்சி பூக்கள் பூக்க, தன்னவனிடம் நின்று நிதானமாக பேசப்போகும் நிமிடங்களை நினைக்கையில் உள்ளம் பூரித்தது அவளுக்கு…
எங்கேயோ வெறித்த பார்வையுடன் நின்றிருந்தவன், அவளது கொலுசொலி கேட்க, அப்படியே நின்றான்…
அவளது நிழல், தன்னருகே சற்று தூரத்தில் தெரிய, அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான் அவன்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிந்து வினோத்தின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்...
படிக்க தவறாதீர்கள்...
கைகளை அவள் பிசைந்து கொண்டிருப்பது தெரிந்து,
“சொல்லு… எதுக்கு வர சொன்ன?...” எனக் கேட்டான் அவன்… அத்தனை நாளாய் போட்டுக்கொண்டிருந்த மௌனப்பூட்டை உடைத்தபடி…
அவன் பேசிவிட்டான் என்பதே உவகையாக இருக்க, மெல்ல மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு,
“நிஜமாவே உங்களுக்கு தெரியாதா?..” எனக் கேட்டாள் அவளும்…
“தெரியாது…” என அவனும் பட்டென சொல்லிவிட,
“சரி நானே சொல்லுறேன்…” என்றவள்,
“நான்… வந்து… உங்களை…” என சொல்ல ஆரம்பிக்க,
“தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காத…” என்றான் அவன்…
“தேவையில்லாத ஆசையா?... எது தேவையில்லாத ஆசை?...” என அவளும் சட்டென கேட்க
“நீ வளர்த்துக்கிட்டிருக்கியே… அதுதான்…” என்றான் அவனும் உடனேயே…
“உங்க மேல நான் வச்சிருக்குறது தேவையில்லாத ஆசை இல்ல… நான் உயிர்வாழத் தேவையான ஆசை… அது தெரியுமா உங்களுக்கு?...”
“தெரியவே வேண்டாம் எனக்கு எதுவும்…”
“அதுதான் ஏன்?...”
“விருப்பமில்லை…”
“நான் சொல்லப்போறதுல விருப்பமில்லையா?... இல்ல என் மேலயே விருப்பமில்லையா?...” என நேரடியாக அவளும் கேள்வியை முன் வைக்க, அவன் நிதானித்தான்…
“சொல்லுங்க… ஏன் அமைதியா இருக்கீங்க?...”
“………………..”
“பதில் சொல்லுங்க… பைத்தியமாட்டம் உங்களை காதலிச்சிட்டிருக்கேன்... மூச்சுக்கு முன்னூறு தடவை உங்க பேரை சொல்லிட்டிருக்கேன்… உங்களைப் பார்க்காத நாள் என் வாழ்க்கையிலே இல்லன்னு வாழ்ந்திட்டிருக்கேன்… இதை எல்லாம் நான் சொன்னாதான் உங்களுக்கு தெரியுமா?...”
“…………….”
“எதுக்காக இப்படி எங்கிட்ட இருந்து ஒதுங்கி போறீங்க?...”
“………………”
“எதுக்கு இப்படி பேசமாட்டிக்குறீங்க?...”
“………………”
“எதாவது பேசுங்க ப்ளீஸ்… இப்படி அமைதியா இருந்து கொல்லாதீங்க…” என்றவளின் குரல் லேசாக கம்ம, அதற்கு மேலும் பொறுக்காதவனாய்,
“உனக்கு ஒருதடவை சொன்னா புரியாதா?... இதோட இந்த பேச்சை விடு… என்னையும் உன் வாழ்க்கையில இருந்து எடுத்துடு….” என்றவன் தனது வார்த்தைகளை சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டு நின்றான்…
சற்று நேரம் கழித்து அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, “போயிட்டாள்...” என நினைத்தவனின் மனதிற்குள் வலித்தது மிக…
என்ன செய்து இந்த வலிக்கு மருந்திட என்று அறியாதிருந்தான் அவன்…
மெல்ல அதிலிருந்து வெளிவந்து அவன் கண் திறந்த போது அங்கு தெரிந்த அவளது நிழலை பார்த்தவன் திகைத்துப்போனான்…
சட்டென அவன் திரும்ப, அவன் கண்ட காட்சி அவன் உயிரை அப்படியே உறையச் செய்திருந்தது…
மூச்சுவிடவும் மறந்து போய் அவன் சிலையாகி இருந்தது சில விநாடிகூட இருக்காது… உடனேயே சுதாரித்து அவளருகில் அவன் சென்றான்…
ஆம்… அங்கே தன்னை நேசித்தவளின் உயிருக்கு ஆபத்தாய் நின்றிருந்த அந்த கொடியவனை நோக்கி நடந்தான் ஜெய் வேகமாய்…