09. புத்தம் புது காலை - மீரா ராம்
“ஹேய்… டாம்… இங்க வா…” என கார்த்திக் அழுத்தி கூப்பிட அது வாலை ஆட்டிக்கொண்டே அவனின் முன்னே சென்றது…
கண்ணை மூடிக்கொண்டிருந்த ஜானு மெல்ல விழி திறந்த போது, எதிரே அந்த நாய் அவன் பேசுவதற்கு ஏற்ப வாலை ஆட்டுவதையும் அவனிடம் குழைவதையும் கண்டாள்…
“கொஞ்ச நேரத்திற்கு முன்னால் அது என்னை மிரட்டியது என்ன?... இப்போது வாலை சுருட்டிக்கொண்டு நிற்பது என்ன?..” என பல்லைக்கடித்தவள்,
அவனை கடந்து செல்ல முயன்ற போது, அது மீண்டும் உர்ர்ர்ர்ர் என்றது…
“மூஞ்சப்பாரு… என்னைக் கண்டா மட்டும் இதுக்கு இளக்காரமா இருக்கும்போல…” என அவள் நாயை முறைக்க அதுவும் பதிலுக்கு அவளை முறைத்தது…
“டாம்… சும்மா இரு…” என அவன் அதட்ட, அது மீண்டும் அவனிடம் குழைந்தது…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...
படிக்க தவறாதீர்கள்...
“தேங்க்ஸ்…” என அவள் அவனிடம் கூறிவிட்டு நகர முயற்சித்த போது,
“அடுத்த தெருவில நாய் இருந்தா என்ன பண்ணுவீங்க?.. இப்படித்தான் சூ போன்னு கையை ஆட்டுவீங்களா சத்தமே வராம?...” என்ற அவனது குரலில் கேலி எக்கச்சக்கமாய் தெரிய, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள் அவள்…
“உங்ககிட்ட தான் கேட்குறேன்… சொல்லுங்க…” என்ற அவனது அழுத்தத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்…
“காப்பாத்தினதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்… நான் போகணும்… ஏற்கனவே லேட் ஆகிடுச்சு…” என அவள் முணக…
“தாராளமா போங்க… ஆனா கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு கிளம்புங்க…” என்றவன் நாயிடம் போ என சொல்ல அது ஓடிப்போனது வேகமாய்…
அது சென்றது தான் தாமதம் போல் நிம்மதி பெருமூச்சு விட்டவள், “நீங்க எப்பவாச்சும் இப்படி ஒரு நாய்கிட்ட தனியா மாட்டியிருக்கீங்களா?..” என அவள் மெதுவாக அவனைப் பார்த்து கேட்க,
“இல்லதான்… ஆனா கண்டிப்பா உங்களை மாதிரி வார்த்தை வராம எல்லாம் இருந்துருக்க மாட்டேன்… சத்தம் போட்டு கையை ஓங்கி விரட்டியிருப்பேன்… இல்ல கையில கிடைக்குறத வச்சு விரட்டியிருப்பேன்…” என்றான் லேசாக சிரித்தபடி…
“ஹ்ம்ம்… உங்க அளவுக்கு நான் தைரியசாலி இல்லதான்… அந்த நேரத்துல தெரியாத இடத்துல மாட்டிகிட்ட பயம் மட்டும் தான் இருந்துச்சு மனசுல… சூ போன்னு விரட்டணும்னு மனசு நினைச்சப்ப கூட வார்த்தை வரலையே…” என அவள் மெதுவாக தலையை ஆட்டி பேச, அவன் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது…
“சரி… வாங்க போகலாம்…” என அவன் சொன்னதும்,
“எங்க?....” என்றாள் அவள் பட்டென்று…
“வேறெங்க… உங்க வீட்டுக்குத்தான்….”
“அது… நான்… நான் போயிப்பேன்…”
“எப்படி?... இப்போ வந்தீங்களே?.... அப்படியா?...” என கேட்க
அவன் சொல்லிக்காட்டுகிறான் என்பது புரிய, “ஒரு தெருவுல இருக்குற நாய் என்னைப் பார்த்து குரைச்சா எல்லா தெருவுல இருக்குற நாயும் என்னைப் பார்த்து குரைக்குமா என்ன?...” என்றாள் அவளும் பொறுமையாக…
“கேட்க நல்லாதான் இருக்கு… ஆனா நிஜம் அப்படி இருக்குமா என்ன?...” என அவனும் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி கேட்க, அவள் பொறுமை இழந்தாள்…
“இப்போ உங்களுக்கு என்ன தான் சார் பிரச்சினை?.. என்னையும் போக விடாம ஏன் இப்படி புடிச்சு நிற்க வைக்குறீங்க?..”
அவளின் கோபம் அவனுக்கு சிரிப்பைத்தான் தந்தது…
அவனின் சிரிப்பைக் கண்டவள், “மூஞ்சியைப் பாரு… சிரிச்சு வெறுப்பேத்திகிட்டு…” என மனதிற்குள் திட்ட ஆரம்பிக்க
“என்னை திட்டுற மாதிரி தெரியுதே…” என அவனும் அவளின் முகத்தினை பார்த்தவாறே சொல்ல,
“அய்யய்யோ… அப்படி எல்லாம் இல்லங்க…” என்றாள் அவள் அவசரமாக…
“பார்த்தீங்களா… உங்க பதட்டமே சொல்லுது… நீங்க பொய் தான் சொல்லுறீங்கன்னு…” என அவனும் இருகைகட்டியபடி சொல்ல…
சற்று நேரம் அமைதியாக இருந்தவள், “நான் வீட்டுக்குப் போகணும்… ப்ளீஸ்… போக விடுங்க…” என அவள் கெஞ்சத்துவங்கினாள்…
“அதுக்குத்தான் அப்பவே கேட்டேன்… போகலாமான்னு…” என்றான் அவனும் நிதானமாய்…
சட்டென பெரிதான அவள் விழிகளை பார்த்தவன், “மெனக்கெட்டு என் சிஸ் என்கேஜ்மெண்டுக்கு வந்திருக்கீங்க… அப்போ பத்திரமா உங்களை வீட்டுல கொண்டு விடுறதும் என் கடமை இல்லையா?...” என அவன் கேட்க அவள் பதில் சொல்லவில்லை…
“பஸ் ஸ்டாண்ட் இங்க இருந்து கொஞ்ச தூரம் தான்… நாலு தெரு நடக்கணும்… அவ்வளவுதான்…”
“…………….”
“பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் வரேன் கூட துணையா… அப்புறம் நீங்க பஸ் பிடிச்சு போங்க… சரியா?...”
“…………..”
“போகலாமா இப்போ?..” என கேட்க, அதுவரை அமைதியாக இருந்தவள் சரி என்பது போல் தலையசைக்க அவனும் சிரித்தபடி முன்னே செல்ல, அவள் மெதுவாக அவனை பின் தொடர்ந்தாள்.. நடக்கும்போது இருவரும் பேசிக்கொள்ளவில்லை… பஸ் ஸ்டாண்ட் வந்ததும், அவள் முகத்தில் ஏற்பட்ட திருப்தியை சிரித்தபடியே பார்த்தான் அவன்…
“ரொம்ப தேங்க்ஸ் சார்…” என அவள் புன்னகைக்க,
“என் பேரு சார் இல்ல… கார்த்திக்…” என்றான் அவன்…
“ஹ்ம்ம்.. சரிங்க…” என அவளும் தலையாட்ட, அவள் செல்லும்பஸ் வந்தது…
வரேன்… என்ற சிறுதலைஅசைப்போடு அவள் செல்ல, “லூசுப்பொண்ணு…” என சிரித்தபடியே வீடு வந்து சேர்ந்தான் அவன்...