(Reading time: 16 - 31 minutes)

த்தனை நாட்கள் எந்த தடையும் இன்றி தன்  மனதை மறைத்தவளுக்கு இப்போது தயக்கமாகத்தான் இருந்தது.. அதற்கு காரணம் பிரிவுதான் !

ஆம் , அவன் அருகில் இருக்கும்போது தனது மனதை இயல்பாய் மறைக்க முடிந்தது அவளால். ஆனால், இப்போதோ அவனைப்பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது.பிரிவின் துயரில் ஆளே பாதியாய் இருந்தாள். அதுவும் கண்களில் ஜீவனே இல்லாமல் இருந்தாள். அவனை பார்த்தால் என்ன செய்வாள் அவள்? நல்ல தோழி என்ற நிலையில் இருந்து கை குலுக்கி வரவேற்பாளா? அல்லது முழுதாய் உடைந்து அவனை இறுக அணைத்துக் கொண்டு அவனுள் தோய்ந்திடுவாளோ ?

இதற்குத்தான் அவள் வரமாட்டேன் என்று மறுத்தாள். ஆனால் எத்தனை நாட்கள் ஓடி ஒழிய முடியும் ? இன்னொரு பக்கமோ அவளின் எண்ணங்கள் வேறு விதமாய் இருந்தது. என்றாவது ஒருநாள் தன்னையும் மீறி வெளிவந்துவிடும் நிலையில் தான் இருந்தது அவளின் காதல். அப்படி இருக்கும்போது அதை தானே அவனிடம் சொல்லி விட்டாள் என்ன ? கௌதம் சங்கடமாய் உணர்வானோ என்ற ஒரே கவலைத்தான் அவளுக்கு..! மற்றபடி கடவுளே வந்து சொன்னாலும் அவளை அவன் தவறாக எண்ணிவிட மாட்டேன். ஆக,மனதில் இருப்பதை சொல்லிவிட்டால் என்ன? அவன் அதை ஏற்பதும் ஏற்காமல் போவதும் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.. தன் மனதில் சுமக்கும் காதல் தனக்கே வெறும் சுமையாய் மாறி விடக்கூடாது அல்லவா? அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது தனது மனதை சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்தப்படி காரை ஏர்ப்போட்டை நோக்கி செலுத்தினாள்.

சகிதீபன், விஷ்வானிகா, கௌதம் மூவருமே கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தான் அந்த விமான நிலையத்தை அடைந்திருந்தனர். ஆனால் மூவருமே வெவ்வேறு பக்கமாய் சென்று கொண்டிருந்தனர். பல மாதங்களுக்குப் பிறகு, தாய்நாட்டை அடைந்த சகிதீபன் மனம் நிறைந்து சந்தோஷமாய் இருந்தான்.

தனக்கே உரிய இடத்திற்கு வந்துவிட்டோம் என்ற களிப்பு அவன் முகத்தில் தெள்ளத்தெளிவாய் தெரிந்தது. தன்னை அழைத்துச் செல்ல அபி வருகிறான் என்று தெரிந்தும் கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்லாமல் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தான் அவன்.

அம்மாவிடம் செல்லம் கொஞ்சம் சிறுமி,

பசியில் அழும் குழந்தை,

கண்களில் ஏக்கமும் நிறைந்த ஆடவர்கள்,

சிரிப்பையே விலைக்கு வாங்கிய பெண்கள் கூட்டம்,

கண்ணீர் முட்டும் விழிகள்,

இறுகிய அணைப்பு,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

ரகசியமான இதழ் ஒற்றுதல்,

உணர்ச்சியற்ற முகம்

இப்படி பற்பல சூழ்நிலைகளை ரசித்தவனின் கண்களில் தூரத்தில் இருந்து நடந்து வந்த விஷ்வானிகா தென்பட்டாள்.

“ வி…ஷ்…வா” பொறுமையாய் இதழ்களை அசைத்தான் அவன். அதை அவளை எட்டியதோ என்னவோ, ஒரு நொடி நடையை நிறுத்திவிட்டு அக்கம் பக்கம் பார்த்தாள் விஷ்வானிகா.. அவள் பார்வையில் இருந்து சகி கொஞ்சம் தூரமாய்த்தான் இருந்தான். தோளை அலட்சியமாய் உலுக்கி கொண்டவள், ஹெட்ஃபோனை கழட்டி வைத்தாள். ஒரு மூலையில் இரு சிறுவர்களும் ஒரு சிறுமியும் விளையாடும் காட்சியை கண்டதும் அவளுக்கு தங்கள் மூவரின் நியாபகம் வந்து ஒரு புன்முறுவலை உண்டாக்கி சென்றது. கைப்பையை துளாவியவள் அதே புன்னகையுடன் அந்த சிறுவர்களுக்கு சாக்லெட் தந்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

“ அட, என் தங்கச்சி விஷ்வாவா இவ? சாம்பவி பாட்டி கொடுத்த ட்ரேனிங் ஆ இதெல்லாம் ? முன்னாடியே தெரிஞ்சிருந்தால் இவளை எப்பவோ ஊட்டிக்கு பேக் பண்ணி அனுப்பி இருக்கலாமே.. அங்கத்தான் அந்த சம்பவம் நடந்ததுன்னு தானே இவளை அனுப்பாமல் இருந்தது எவ்வளவு தப்பாப் போச்சு?” என்று தனக்குள் நினைத்தவன், அவளிடம் எப்படி பேசலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.  சிறுவர்களிடம் பேசிக்கொண்டு  நிமிர்ந்தவள் யாரோ ஒருவர் மீது மோதி நின்றாள். பொதுவாக “சாரி” என்று முணுமுணுத்துவிட்டு போகும் அவள் இந்த முறை நிமிர்ந்து தான் இடித்தவனை பார்த்தாள். அவனின் முகத்தை பார்த்தவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. காரணம் பரிட்சயம்..! ஆம், பல நாட்கள் பழகிப்போனவன் போல பரிட்சயமாய் இருந்ததுஅவனது முகம்.

“மன்னிச்சிருங்க..பசங்கக்கிட்ட பேசிட்டே எதிர்ல வந்த உங்களை கவனிக்க தவறிட்டேன்” என்றாள் விஷ்வானிகா. “ உனக்கு பேசகூட தெரியுமா?” என்பது போல ஆச்சர்யமாய் விரிந்தன அவனின் விழிகள். இதழில் மென்னகையை தவழவிட்டு “ டேக் கேர்” என்றான் அவன். அவளும் மறுக்காமல் தலை அசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். ஒருமுறை திரும்பி பார்த்திருந்தால், அவன் தன்னையே பார்த்துகொண்டு நிற்பதை அறிந்திருப்பாளோ?

ஒருவழியாய் வந்தே விட்டான் கௌதம். தனக்காக ரஞ்சனி காத்திருப்பாள் என்ற எண்ணமே அவனை வேகமாய் இயக்கிக் கொண்டிருந்தது. லக்கேஜை தள்ளிக்கொண்டு அவன் அவளைத்தேட அவனின் வலது பக்கமாய் சகிதீபனும், இடது பக்கமாய் விஷ்வானிகாவும் நடந்து வந்துக்கொண்டிருந்தனர். அண்ணனும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்வையால் அளந்துகொண்டிருக்க அவர்களை தடுப்பது போல இடையில் நின்றான் கௌதம்.. அவனுக்கு நேரெதிரே வந்துக்கொண்டிருந்தாள் சதீரஞ்சனி. அவளை பார்த்தவனுக்கு என்னவோ வீடு வந்து சேர்ந்த உணர்வு..!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.