'ப்ரதர்... அப்படி எல்லாம் உங்களை தனியா விட்டுடுவோமா???' அவன் சட்டென திரும்ப அங்கே அழகாக புன்னகைத்தபடியே நின்றிருந்தான் விஷ்வா.
இந்த வார்த்தைகளை விஷ்வா என்ன நினைத்து சொன்னானோ தெரியவில்லை. ஆனால் அவற்றில் கரைந்து போனவனாகதான் நின்றான் பரத். விஷ்வாவின் கை தன்னாலே அவன் தோளை அணைத்துக்கொண்டது.
அங்கே இருந்த இருக்கையில் அவனையும் அமர்த்திக்கொண்டு அமர்ந்தான் விஷ்வா. அவன் முகத்தில் ஓடிக்கொண்டிருந்த வருத்த கோடுகளை படித்தபடியே சொன்னான் அவன்
'நான் அப்போவே நினைச்சேன். நீ முன்னாடியே யோசிச்சு இருந்திருக்கணும். இப்போ இப்படி உட்கார்ந்து என்ன பிரயோஜனம்...' என்றான் விஷ்வா.
ஒரு வேளை நடந்த எல்லாவற்றையும் விஷ்வா பார்த்து விட்டானா என்ன ??? சற்றே குழப்பத்துடன்....
'ம்??? 'என்னது???' என்றான் பரத்.
'இந்த ஏர்லைன்ஸ்லே ஏர்ஹோஸ்டஸ் எல்லாரும் கொஞ்சம் வயசானவங்கதான். என்ன செய்ய??? அதை புக் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிருந்திருக்கணும். இல்லை என்னையாவது கேட்டிருந்திருக்கணும்... இப்போ இப்படி சோகமா உட்கார்ந்து என்ன பண்ண..' விஷ்வா முகத்தை படு தீவிரமாக வைத்துக்கொண்டு சொல்ல..
சில நொடிகள் விஷ்வாவின் முகத்தையே பார்த்தவன் தன்னையும் மறந்து, தனது மன நிலையையும் மீறி, மலர்ந்து சிரித்து விட்டிருந்தான் 'எரும மாடு...'
அவன் சிரிப்புடன் இணைந்துக்கொண்டான் விஷ்வா 'ஒரு கப் காபி அடிப்போமா???
'இல்லடா வேண்டாம்...'
'ஃபிஃப்டி ஃபிஃப்டி... ரொம்ப நாள் ஆச்சு... ப்ளீஸ்...'
'சரி வாங்கிட்டு வா...'
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் காபியுடன் வந்தான் விஷ்வா. கையில் இருந்த காலி கப்பில் காபியை ஊற்றி அவனிடம் நீட்டினான்.
'ஃபிஃப்டி.... ஃபிஃப்டி...'
அழகான மென் நகை பரத்திடம். அவன் காபியை மெதுவாக சுவைக்க துவங்க...
'சீக்கிரம் குடிடா .... அம்மா வந்திட போறாங்க...' விஷ்வா அவசர குரலில் சொல்ல, சட்டென திரும்பினான் பரத்.
சின்ன வயதில் அவர்கள் இருவருக்கும் இடையில் வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்வு இது. பரத் எப்போதாவது அந்த வீட்டுக்கு செல்வது உண்டு. அவன் வருகை விஷ்வாவின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிடித்ததில்லை. அது ஏன் என அப்போதெல்லாம் இருவருக்கும் புரிந்ததும் இல்லை.
தனது அறையினுள்ளேயே கிடப்பான் பரத். அம்மா எதாவது சாப்பிட கொடுத்தால் அவளுக்கு தெரியாமல் பரத்தின் அறைக்கு அதை எடுத்துக்கொண்டு ஓடி வருவான் விஷ்வா.
'டேய்... இந்தா பாயசம்...'
'பாயசமா??? வேண்டாம்... அம்மா பார்த்தா திட்ட போறாங்க
அதெல்லாம் இல்லை நீ குடிக்கணும் ... உனக்கு பாதி எனக்கு பாதி ஃபிஃப்டி ஃபிஃப்டி. இந்தா ... என்னடா இவ்வளவு மெதுவா குடிக்கற.. சீக்கிரம் குடிடா... அம்மா வந்திட போறாங்க...' என்பான் விஷ்வா. இருவர் எண்ண அலைகளும் அந்த புள்ளியையே தொட்டு வர
இதழோர புன்னகையுடன் பரத்தை பார்த்து கண் சிமிட்டினான் விஷ்வா 'என்னடா ஃபிளாஷ் பேக்கா???
'அதெல்லாம் எதுவும் இல்லை...' அவன் உதடுகள் சொன்னாலும் பரத்தின் உள்ளம் கொஞ்சம் நெகிழ்ந்து தான் போயிருந்தது. காபியை முடித்த பிறகும் இருவரிடத்திலும் மௌனம். சில நிமிடங்கள் இப்படியே கரைய....
'சரி நான் கிளம்பவா...' வேண்டுமென்றே கேட்டான் விஷ்வா.
'ஏன்??? ஏன்??? ஃப்ளைட்டுக்கு இன்னும் கொஞ்சம் டைம் இருக்குடா...'
'ஆனா எனக்கு வேலை இருக்கே...' இது விஷ்வா
'சரி கிளம்பு...' என்றவன் சட்டென அவன் கையில் இருந்த கார் சாவியை பிடுங்கி தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.
இதுவும் அவனது சிறு வயது பழக்கம். விஷ்வா எப்போதாவது அவனை சந்திக்க சென்றால் கிளம்பும் நேரத்தில் அவன் எடுத்து செல்ல வேண்டிய முக்கியமான பொருள் எதையாவது எங்காவது ஒளித்து வைத்து விடுவான் பரத். அது கிடைக்கும் வரை இவன் நம்மை விட்டு கிளம்ப மாட்டான் என்று ஒரு நம்பிக்கை அவனுக்கு.
'சாவியை நீ பிடுங்கி வெச்சுகிட்டா நான் எப்படி கிளம்ப...'
'நடந்து போ...' என்றான் பரத் சாவியுடன் விளையாடிக்கொண்டே...
நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய பரத் அவன் கண் முன்னே வந்தது போல் தோன்றியது விஷ்வாவுக்கு. விஷ்வாவின் கரம் அவனை அணைத்துக்கொண்டது.
'ஏன்டா... மனசு சரி இல்லையா??? இங்கேயே இருந்திடேன் ரெண்டு நாள்... நானும் உன் கூட இருக்கேன்..' விஷ்வா இதமாக கேட்க...
'அய்யய்யோ...இந்த ஊரிலேயா... வாய்ப்பே இல்லை...' அபர்ணாவின் முகம் கண்முன்னே வந்து போக கண்களை இறுக மூடிக்கொண்டு சொன்னான் பரத்.