'வரப்போகிறாள்... இதோ வருகிறாள்...... அவன் தவிப்புடன் காத்திருக்க இரண்டு நிமிடங்கள் கழித்து அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள் அபர்ணா.
நிச்சியமாய்... சத்தியமாய் அப்படி ஒரு சூழ்நிலையில் அவளை சந்திப்பேன் என அவன் நினைக்க கூட இல்லை. கொஞ்சம் திகைப்புடன் அவளையே பார்த்தபடி அங்கேயே நின்று விட்டான் அவன்.
'எஸ்...' என்றாள் அவனை பார்த்து. அவன் முகம் அவளுக்கு அந்த பாடலை நினைவு படுத்தி இருக்க வேண்டுமோ என்னவோ???
'நான் பரத்... பக்கத்து வீட்டு மாடியிலே... என்னோட லெட்டர் ஒண்ணு இங்கே இருக்குன்னு..' அவன் தயக்கத்துடன் சொல்ல..
'ஆங்... ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் அபர்ணா...
சில நிமடங்கள் கழித்து ஈரக்கையை துடைத்தபடியே வந்தாள் அவள். அந்த லெட்டரை எடுத்து அவள் அவனிடம் நீட்ட... வாங்கிக்கொண்டவன்..
'வீட்டிலே யாருக்காவது உடம்பு சரி இல்லையா???' என்றான் மெல்ல.
அவள் முதல் முறை வந்த போது அவள் கையில் இருந்தது ஒரு பெட் பேன். நடக்க முடியாத யாருக்கோ அவள் உதவி செய்திருக்க வேண்டும் என அவனுக்கு புரிந்திருந்தது. அதை கையில் ஏந்திக்கொண்டிருந்த போதும் கொஞ்சம் கூட அறுவெறுப்போ முக சுளிப்போ இல்லாத அவளுடைய பாவம் தான் அவனை வியப்பில் தள்ளி இருந்தது.
'ஆமாம்... எங்க பாட்டி... எங்க அம்மாவோட அம்மா... வயசாச்சு நடக்க முடியாது..' என்றாள் அவள்.
'நீ.. நீங்க போய் ஏன் இதெல்லாம்... யாரவது ஒரு நர்ஸ் வெச்சுக்கலாம் இல்லையா???'
'ஏன்... நான் செஞ்சா என்ன??? அவங்களை பார்த்துக்கதான் நானும் எங்க அம்மாவும் இங்கே வந்திருக்கோம். ஒண்ணு நான் செய்வேன் இல்ல எங்க அம்மா செய்வாங்க. இப்போ அம்மா அப்பாவை பார்க்க போயிருக்காங்க. அதனாலே நான் செய்யறேன்' அவள் சொல்ல சொல்ல வியப்புடனே அவளை பார்த்திருந்தான் பரத்.
இதென்ன??? நான் ஏதோ பெரிய தியாகம் செஞ்சா மாதிரி ஒரு பார்வை பார்க்கறீங்க??? அவங்க என் பாட்டி. நான் சின்ன குழந்தையா இருக்கும் போது எங்க பாட்டி எனக்கு இதெல்லாம் செஞ்சிருக்க மாட்டாங்களா என்ன??? வெகு இயல்பாக அவள் கேட்க அப்படியே அவனது மனதில் ஒட்டிக்கொண்டாள் அவள். அவள் மீது நிறையவே மதிப்பும், மரியாதையும் கூட சேர்ந்திருந்தது.
'இன்னமும் இது போன்ற பாசமும், பந்தமும் இந்த உலகில் இருக்கிறதா என்ன???' ஆச்சரியம் அவனுக்கு. 'இவை எல்லாம் அழிந்தே விட்டதென நினைத்தேனே???' புதிதாய் ஒரு நம்பிக்கை அவன் மனதிற்குள் துளிர்த்த நாளும் அதுவாக இருந்தது.
விமான நிலையத்தில் அவள் நினைவுகளில் மூழ்கி கிடந்தவன் அங்கே வந்த ஏதோ ஒரு அறிவிப்பில் தன்னிலை பெற்றான். இப்போது அவனது கோபம் கொஞ்சம் தணிந்து போயிருந்தது. சற்று முன் நடந்தவைகள் மனத்திரையில் ஓடி மறைந்தன.
'நான் அருணிடம் அப்படி பேசி இருக்க கூடாதோ???' அடி மனதிலிருந்து புதிதாக ஒரு கேள்வி பிறந்தது. 'நான் அந்த விழாவில் பாடியது வரை அவன் அறிந்திருக்கிறான். எப்படிபட்ட ஆண் மகனுக்கும் இப்படி ஒரு சூழ்நிலையில் கோபம் வருவது இயல்புதானே???'
'ஆனால் அவள் கண்களில் கண்ணீரை கொண்டு வந்தானே அவன்???' இன்னொரு பக்கம் அங்கலாய்த்தது மனம்.
'கொடுத்திருக்கிறாளே!!! அவளை திட்டுவதற்கும், ரசிப்பதற்கும் என எல்லா உரிமைகளையும் அவனிடம் கொடுத்திருக்கிறாளே!!! இங்கே அவர்களுக்கு நடுவில் செல்வதற்கு நான் யாராம்???' 'அவன் என் மீது கை ஓங்க முயன்ற போது கூட என்னை தானே விலகி போக சொன்னாள். அவனை ஒன்றும் சொல்லவில்லையே???
என் காதல் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு போய்க்கொண்டிருக்கிறதா என்ன??? வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு அழுத்தம் பரவியது அவனுக்குள்ளே!!! காதல் ஒரு மனிதனை இப்படி எல்லாம் தோற்கடிக்குமா என்ன? அவனுக்கே புரியவில்லை.
தனிமை அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. வாழ்க்கையின் பல கட்டங்களில் பல சவால்களை தைரியமாக எதிர்க்கொண்டவன்தான் அவன். அந்த தைரியம் இன்று எங்கே போனது என்றே தெரியவில்லை. இந்த உலகத்தில் தனக்கென யாருமே இல்லாதது போல் ஒரு உணர்வு...
அந்த நொடியில்...சரியாக அந்த நொடியில் ஒலித்தது அவனது கைப்பேசி. அதை எடுத்து பார்த்தவனின் இதழ்களில் முறுவல். மன அழுத்தம் மெல்ல கரைந்தது. சட்டென ஏற்றும் விட்டான் அழைப்பை
'எங்கேடா இருக்கே பிளைட்லேயா???' எதிர்முனை கேட்டது.
'இல்லடா..'
'நல்ல வேளை... உன்னை பார்க்க ஓடி வந்தேன்... வெளியே வர முடியுமா... விசிட்டர்ஸ் லான்ஜ்லே இருக்கேன்....'
அடுத்த மூன்றாவது நிமிடத்தில் விசிட்டர்ஸ் லாஞ்சில் இருந்தான். துறுதுறுவென சுற்றிய பரத்தின் கண்களுக்கு அவன் தென்படவே இல்லை. சில நொடிகளில் அவன் தேடி வந்தவனின் குரல் அவன் செவிகளை அடைந்தது.