ஆனாலும் மீண்டும் இது இவளை காப்பாற்றும் முயற்சியே என்பதால் சினத்தை அடக்கி பேசிக் கொண்டிருந்தாள் இவள்.
அவள் சினத்தை அடக்கிக் கொள்ள இன்னுமொரு காரணமும் ஏற்பட்டிருந்தது அவளுள்….
என்ன நடக்கிறது என புரியும் முன்னும் இவளிடமிருந்து அவன் கைக்கு பறி போய் மீண்டும் திரும்பி வந்த வாளைக் குறித்து தன் மீதே உண்டாகி இருந்த அவமானமும்…..
பின்னே வீரன் எந்த சூழலிலும் தன் வாளை இழக்கலாமா…? அவளிடமிருந்து வாளைப் பறிப்பதொன்றும் அப்படி எளிதான காரியமில்லை என தெரியுமாதலால், அவன் மீது அச் செயலுக்காய் அவளையும் மீறி ஏற்பட்டிருந்த அபிமானமும்தான் அந்த மற்றொரு காரணம்….
அவள் தன்னை சமனப் படுத்திக் கொண்ட அந்த நேரத்தில் சிந்திப்பதன் அடையாளமாய் தன் இடக்கை கட்டைவிரல் ஆட்காட்டிவிரல் மற்றும் நடுவிரலால் நெற்றியை ஒரு முறை தேய்த்துக் கொண்ட அவனோ…
அந்த சிந்தனைக்கு ஊடாகவே சூழலை பார்வையால் துளாவியபடி இவள் கேள்விக்குப் பதில் கொடுத்தான்….
“இரவில் இணையோடு கலப்பதில்லை மின்மினிகள்…..மேலும் அந்த இரு ஒளியின் அளவுகள் வேறுபட்டாலும் தோன்றி மறையும் சலனங்கள் மாறுபாடின்றி ஒன்று போல் இருக்கின்றன……. ஆண் மின்மினி ஒளி உமிழ்ந்த பின் இரு மாத்திரை காலம் தாமதித்தே ஒளி உமிழும் பெண் மின்மினிகள்…. ஆக இங்கிருந்து பார்க்க அவற்றின் சலனம் மாறுபட்டு தோன்றினால்தான் அவை மின்மினிகள்…… .”
மின்மினி மனிதனாய் மாறி வந்து தன்னைப் பற்றி தானே அறிவிப்பது போன்ற அத்தனை துல்லிய தகவல் சொன்னான் அவன்….
“அப்படியானால் அவை இரண்டும் ஆண் பூச்சிகள் போலும்….” அவன் அறிவுச் செறிவு ஆச்சர்யம் செய்தாலும் அதைக் வெளிக்காட்டாமலேயே வாதிட்டாள் இவள்…..அவன் அந்த வெளிச்ச புள்ளிகளை இவர்களுடன் போர் தொடுக்க முயலும் எதிரிகளின் நடமாட்டமாய் பார்க்கிறான் என்பது இவளுக்கு புரிகிறதுதானே……
இவர்களுக்கு தற்சமயம் இருக்கும் ஒரே எதிரியான சேனர்கள் கடந்த போரில் தோற்றோடிய பின் மீண்டும் இவர்களுடன் போருக்கு வருவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை என்பது இவர்களது நம்ப தகுந்த ஒற்றர்களின் தகவல்…. அதையெல்லாம் அந்நியனான இவனிடம் சொல்ல முடியாதே…. ஆக அவன் வகையிலேயே மறுத்து வாதிட்டாள்.
“ஆம் ஆண் பூச்சிகள்தான்…..ஆனால் இரண்டு மட்டுமாய் தனியாய் வந்திருப்பதாய்தான் தோன்றவில்லை……” என தன் நினைவே சரியென்பது போல் இவள் வார்த்தைக்கு மறு உத்தாரம் கொடுத்த அவனோ இப்போது தன் புரிதலை விளக்கவும் தலைப்பட்டான்…
“ இரண்டு ஒளியின் சலனங்களும் ஒன்று போலிருக்கின்றன என்றால்…..இரண்டும் ஒரே விளக்கிலிருந்து பிறக்கின்றதாய் இருக்க வேண்டும்…….அதாவது ஒன்று விளக்கு என்றால் மற்றொன்று அதன் அருகில் இருக்கும் பாரசீக கண்ணாடி…. விளக்கின் ஒளி அதில் பட்டு எதிரொளிக்கிறது…..” அவன் விளக்க
அதை வைத்து அவளுக்கு புரிந்த விபரீதத்தை வினாவாக வினவினாள் ருயம்மாதேவி. “அதாவது சுற்றி ஒரு சிறு கூட்டம் அமர்ந்து எதையோ கலந்தாலோசித்திதுக் கொண்டிருக்கின்றனர்….. அவர்களது விளக்கு வெளிச்சம் இங்கு கோட்டைக்கு தெரிய கூடாதென ஒற்றை விளக்கு மட்டுமாய் வைத்து அருகில் ஒரு கண்ணாடியால் அதை தங்களுக்குள் மட்டுமாய் சிதற செய்கின்றனர் என சொல்லவருகின்றீரோ நீர்….?”
“ஆம் சர்வ நிச்சயமாக அப்படித்தான் தோன்றுகிறது……இவை ஒரு கூடாரத்திற்குள் நடக்கும் கரியமாயிருக்கும்…..சற்று அதிகமாய் இப்போது வீசிய காற்றில் ஏதோ காரணத்தினால் எதிர்பாரா விதமாய் கூடாரம் கழன்று போயிருக்கும்….” முழுவதுமாய் விளக்கியவன்
“இதற்கு மேலும் நாம் இங்கிருந்து தாமதிப்பது விவேகமல்ல…… பாரசீக கண்ணாடி வைத்திருப்பவர்கள் துருக்கியர்களாய் இருக்க வாய்ப்பு அதிகம்….என்னை கோட்டை தலைவனிடம் அழைத்துப் போ….” சற்று கட்டளைத் தொனி கலந்திருந்தது அவன் குரலில்…..இவளிடமிருந்து எதிர்ப்பிருக்கும் என்றும் அவன் எண்ணியிருக்கவில்லை…..
துருக்கியர் படையெடுப்பா…..? அவர்கள் கையாளும் போர் முறைகளை கேள்விப் பட்டிருக்கிறாளே…… இப்படி இரவில் அறிவிப்பின்றி போர்தொடுக்கும் வழக்கம் அவர்களிடையே பிரசித்தம்தான்……அந்த வகையில் இவனின் யூகம் சாதுர்யமானதும் சரியானதுமே….
ஆனால் கோட்டைத் தலைவனை இவள் இந்த வேஷத்தில் இப்படி அந்நிய ஆணோடு சென்று சந்திப்பதாவது….? தலைவனிடம் தன் அடையாளத்தை வெளியிட்டால் இவள் ஒரு ஆடவனை சந்திக்க மாறுவேடமிட்டு வந்தது போல் தோன்றிவிடாதா? அப்படி இவள் தன்னை வெளிப்படுத்தாமல் ஆணாகவே நாடகத்தை தொடரவும் முடியாது……அந்நிய ஆண் கோட்டைக்குள் எப்படி வந்தான் என கேள்வி வரும்… எதிர்பாராத படையெடுப்பு நெருங்கும் இந்நேரத்தில் விசாரணையின்றி எதிரியின் ஒற்றனாக கணிக்கப்பட்டு ஸ்தலத்தில் நிறைவேறும் சிரசேதம்…..ஆக இப்போதைய சூழலுக்கு இவள் வேறு எதாவது வழி காண வேண்டும்… இச்சிந்தனையில் இவள் தாமதிக்க……
சிந்தனாவசப்பட்டு நின்றவள் கரத்தை ஏதோ உரியவன் போல் உரிமையாய் பற்றிய அந்த அவனோ அவளை இழுத்துக் கொண்டு கோட்டையின் கீழ் பகுதி நோக்கி ஓடத் தொடங்கி இருந்தான்…..