வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 07 - வத்ஸலா
அவர்களை வாழ்த்தி விட்டு அறையை விட்டு வெளியே வந்திருந்தான் பரத். அவனை தொடர்ந்து வந்தான் விஷ்வா. கடந்த சில நிமிடங்களுக்குள் பல நூறு முறை அக்னி பிரவேசம் செய்து விட்டு வந்தது போல் இருந்தது அவனது உடலும் மனமும்.
'பிடிச்சிருக்குப்பா...' சொல்லியே விட்டாளே அவள் புலம்பியது அவனுள்ளம். இது என்ன தெரியாத விஷயமா என்ன? என்னை அவளுக்கு பிடிக்காது என்பது???
முன்பு ஒரு முறை ஒரு வேகத்தில் அவன் திருமணத்தை பற்றி பேசிய போது நிகழ்ந்தவை அவன் மனதில் வந்து போனது.. ஏதோ யோசனையுடன் தலையை இடம் வலமாக அசைத்துக்கொண்டான் பரத்.
அவன் தோள் அணைத்து விஷ்வா எதையோ சொல்ல முயல... சட்டென சுதாரித்து முகத்தில் பரவிக்கிடந்த அழுத்தங்களை துடைத்தெறிந்து புன்னகைதான் பரத்.
'எனக்கு ஒண்ணுமில்லை விஷ்வா. இப்போ என்ன ஆச்சு? உலகத்திலே லவ் ஒண்ணு தான் சந்தோஷமா??? சுத்தி பார் மரம். மழை, காத்து, ஸ்வீட்ஸ், குழந்தைகள், இசை, கவிதை, மெடிடேஷன்... இப்படி எத்தனை எத்தனை சந்தோஷம் நம்மை சுத்தி... பாரதி சொன்னா மாதிரி எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா...' என்றான் இதமான புன்னகையுடன். 'நான் சந்தோஷமாதான் இருப்பேன் விஷ்வா...
'எத்தனை அழகாய் நடிக்கிறான் இவன்???' யோசித்தபடியே அவனையே பார்த்திருந்தான் விஷ்வா 'எதற்காம் என்னிடம் கூட நடிக்கிறான்???' அவன் யோசித்து முடிப்பதற்குள் பதில் வந்தது பரத்திடமிருந்து
'விஷ்வா...' என்றான் கொஞ்சம் தழைந்த குரலில் 'ஒரு சின்ன ரிக்வெஸ்ட்... அபர்ணா வீட்டிலே யார்கிட்டேயும், எந்த சந்தர்ப்பத்திலேயும் என்னை பத்தி பேசிடாதே... தேவை இல்லாத குழப்பங்கள் எதுவும் வேண்டாம்... சரியா???'
ஒரு ஆழமான சுவாசத்துடன் சரியென தலை அசைத்தான் விஷ்வா.
'வரேன் பிரதர்...' கண் சிமிட்டி சிரித்து சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தான் பரத்
வெளியே மின்னல் வெட்டிக்கொண்டிருந்தது. தனது காரை கிளப்பிக்கொண்டு பறந்தான் அவன். பரத்தின் மனநிலை நன்றாக புரிந்திருந்தது விஷ்வாவுக்கு.
'தனியாக வீட்டுக்கு சென்று என்ன செய்வான் இவன்??? உறக்கம் வருமா என்ன??? இந்த மனநிலையில் தனிமையையும், இரவையும் சேர்த்து கொல்வது எப்படியாம்???' யோசித்தபடியே திரும்பிய மருத்துவனின் கண்களுக்கு தென்ப்பட்டது பரத்துக்கான தற்போதைய மருந்து!!!
அதே நேரத்தில் அங்கே சென்னையில்...
இந்த பெண்களை பெற்றவளுக்கு உயிர் பதறிக்கொண்டிருந்தது. அண்ணன் அஷோக் இன்று காலை தான் மும்பை கிளம்பி சென்றிருக்க... விபத்து பற்றிய செய்தி கேட்டவுடன். அம்மாவை விட்டுவிட்டு அப்பாவும் மகளும் பெங்களுர் கிளம்பி விட்டிருந்தனர்.
'எல்லாரும் அங்கே போய் கூட்டமா நிக்க வேண்டாம். அதான் விஷ்வா இருக்கான் இல்ல. அங்கே போயிட்டு உனக்கு போன் பண்றேன்' எளிதாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டார் அப்பா.
மாலையிலிருந்து ஐந்தாவது முறையாக அழைத்த அம்மாவின் அழைப்பை ஏற்றார் அவள் அப்பா.
'அஸ்வினிக்கு ஒண்ணுமில்லை... நல்லா...இருக்கா கண் முழிச்சிட்டா இன்னும் ரெண்டு நாள் ஹாஸ்பிடல்லே இருக்கணும்.... அதுக்கு அப்புறம் ஊருக்கு வரோம்... நீ தைரியமா இரு...'
'இப்போ பேசுவாளா அஸ்வினி?.' குரலில் இருந்த கவலை இன்னமும் மாறவில்லை.
'ரொம்ப டயர்டா இருக்காமா.. அவ... நாளைக்கு காலையிலே பேச சொல்றேன்... ரொம்ப கவலை படாதே ஒண்ணுமில்லை..' என்றவர் அபர்ணாவையும் அருணையும் பார்த்தபடியே சொன்னார் 'உனக்கு ஒரு சந்தோஷமான ... உன் பெரிய பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் வந்திடும் போலிருக்கே...' மகளின் இதழ்களில் புன்னகை.
'கல்யாணமா??? என்ன திடீர்ன்னு... யார் மாப்பிள்ளை??? புரியலை எனக்கு. சொல்லுங்க... என்ன விஷயம்...' ஆர்வம் தொற்றிக்கொண்டது அவரிடம்.
'அதெல்லாம் ரெண்டு நாளிலே நேர்லே வந்து சொல்றேன். அதுவரைக்கும் நீ இதை பத்தியே யோசிச்சிட்டே இரு... '
'ப்ளீஸ்... இப்போ சொல்லுங்களேன்... '
'அதெல்லாம் முடியாது. நேர்லே வந்துதான்... வெச்சிடறேன்...' சிரித்தபடியே துண்டித்தார் அழைப்பை.
அம்மாவிடமும் சந்தோஷ புன்னகை. மெல்ல திரும்பி அவர் ஜன்னல் வழியே பார்க்க மழை தூர துவங்கி இருந்தது. மெலிதாக கேட்டது இடி சத்தம். சட்டென மனம் பழைய நினைவலையை தொட்டு திரும்பியது. ஒரு நொடி பரத்தின் நினைவு வந்து போக... அவன் விழாவில் பாடியதும் நினைவில் ஆட...
'மழை மட்டும் வரட்டும் அப்புறம் உங்க பொண்ணுதான் என் பொண்டாட்டி... அதை யாராலும் மாத்த முடியாது பார்த்துடுவோம்' அவன் முன்பு ஒரு முறை சொன்னது காதில் ஒலிக்க.....
'ஒரு வேளை இவன்தான் மாப்பிளையாக இருக்குமோ???' என்ற எண்ணம் வராமல் இல்லை அம்மாவுக்கு!!!.