16. அனல் மேலே பனித்துளி - ரேணுகா தேவி

என்ன சொல்ல ஏது சொல்ல
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெளிய சொல்லாம என் வெட்கம் தள்ள
சின்ன சின்ன ஆச
உள்ள திக்கித் திக்கிப் பேச
மல்லிகப்பூ வாசம்
கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்து பார்க்க
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க
புத்தம் புது வாழ்க்க
என்ன உன்னோட சேர்க்க
என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
சொல்லாமல் கொள்ளாமல் நெஞ்சோடு காதல் சேர
மூச்சு முட்டுதே
இந்நாளும் எந்நாளும் கை கோர்த்துப் போகும் பாதை
கை கோர்த்து போகும் பாதை
கண்ணில் தோன்றுதே
சொல்லாத எண்ணங்கள்
பொல்லாத ஆசைகள்
உன்னாலே சேருதே
பாரம் கூடுதே
தேடாத தேடல்கள் காணாத காட்சிகள்
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே
சிவந்த கன்னங்கள் மேலும் சிவக்க தன் தோழிகளின் கிண்டல்களில் அடிவயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சியின் உணர்வினை உணர்ந்தாள் மது.
அவளின் சந்தன வர்ண தேகத்திற்கு மெருகூட்டும் மங்களமான மஞ்சள் நிறத்தில் இளம் பச்சை வர்ணம் கலந்த தங்க சரிகைகள் இழையோடும் அழகிய பட்டுடுத்தி மஞ்சள் பூசிய முகம் நாணம் கொண்ட சிவப்பில் திவ்யா மற்றும் பைரவியின் கைவண்ணத்தில் தங்கத்தில் செய்த சிலையென மின்னினாள் மது.
மனம் முழுதும் மதியின் கையினால் மங்கள நாண் பூட்டும் கணத்திற்காக காத்திருந்தது. எத்தனை அலங்காரம் செய்தாலும் காதலித்தவனின் கைப்பிடிக்கும் பெண்ணின் முகத்தில் தோன்றும் ஒரு வித பெருமையும் கர்வமும் அவள் அழகை கூட்டியது. அவளை பற்றி கேலி பேசிக்கொண்டிருந்த திவ்யா மெல்லிய ஆரஞ்சு வர்ண பட்டில் தாய்மை அடையப்போகும் பொலிவுடன் சுற்றி வந்தாள். நேற்று தான் அது உறுதி செய்யப்பட்டிருந்ததால் மனைவியை விட்டு பிரிய மனமின்றி அது வேண்டுமா இது வேண்டுமா என சரண் அவளையே சுற்றி வர மதுவிற்கு இணையாக அவளின் முகமும் வெட்கத்தில் போட்டியிட்டது. இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து கேலி செய்து கொண்டிருந்த பைரவியை காணும் போதெல்லாம் முரளியின் நிலையோ அதை விட மோசமாக இருந்தது. தன் காதலை பைரவியிடம் தெரியப்படுத்தி இதுவரை அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவள் பார்க்கும் பார்வையில் இருப்பது என்னவென்று புரியாமல் பச்சை நிற தேவதையாக சுற்றி வரும் பைரவியின் பின்னேயே பவி ஜூஸ் வேண்டுமா காப்பி வேண்டுமா என்று கேட்டபடி அலைந்து கொண்டிருக்க, டேய்ய்ய் என் லூசு புருஷா என அவனை மனதில் செல்லம் கொஞ்சினாலும் வெளியே முறைப்பதை போல காட்டி கொண்டு அவனை வெறுப்பேற்றிக்கொண்டிருந்தாள் பைரவி.
மனம் நிறைந்த புன்னகையுடன் சிவசண்முகமும் மங்களமும் அய்யர் கேட்பதையெல்லாம் எடுத்து வைப்பதும் சீர்வரிசைகளை சரிப்பார்ப்பதும் என ஓடிக்கொண்டிருந்தனர். மகளின் திருமணம் நிச்சயம் ஆன சந்தோசத்தில் பத்து வயது குறைந்திருந்தது இருவருக்கும். மாப்பிளை வீட்டு சார்பில் கந்தச்சாமியும் அபிராமியும் எல்லாம் செய்ய, வாசலில் நின்று வருவோரை வரவேற்று கொண்டிருந்தனர் பாலசண்முகம் மற்றும் சக்திசண்முகம் இருவரும் அவரவர் மனைவியருடன். மதியின் சகோதரர்கள் பந்தி சரிபார்க்க அவர்களின் மனைவிகள் அவர்களின் உறவினர்களை கவனிப்பதும் அபிராமி கேட்பதை எடுத்து கொடுப்பதும் என ஓடிக்கொண்டிருந்தனர்.
ரகு மதியின் அறையில் இருந்து அவனை கலாய்ப்பது மட்டுமே தன் பணி என அதை சிறப்பாக செய்து கொண்டிருந்தான். அன்றைய நிகழ்வின் ஹீரோ மதியோ பட்டுவேஷ்டி பட்டு சட்டையில் ரோஜா படத்தில் வரும் அரவிந்த்சாமியை போல பளிச்சென்று இருந்தான். அவன் மனமெல்லாம் மதுவிடம் இருக்க எப்படியாவது அவளை பார்க்க துடித்து கொண்டிருந்தது. எப்போதடா வெளியே வரச்சொல்வார்கள் என்று வாயிலை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். அவனுடன் இருந்தவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் மதுவை பற்றிய கேள்விகளுக்கும் மகிழ்ச்சியும் பெருமிதமும் வெட்கமும் மின்ன பதில் சொல்லியபடி வாசலை பார்த்து அமர்ந்திருந்தவனை கண்டவர்களுக்கு தோன்றியது யார் சொன்னது வெட்கம் என்பது பெண்களின் சொத்து என்று.