அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, துக்கம் தொண்டையை அடைத்தது, வார்த்தைகள் வெளிவராமல் தொண்டைக்குழியில் சிக்கி நிற்க , கம்மிய குரலில் பேசினாள்.
"என்கிட்டே பேச மாட்டிங்களா மதி? உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லையா ? “-மது
“….”
எதற்குமே அவனிடம் பதில் இல்லை. அவளுக்கு இதற்கும் மேல் என்ன செய்வதென்று புரியவில்லை. என்ன சொல்வதன்று புரியாமல் ஒரு கணம் குழம்பியவள் திவ்யா கூறியதைப்போல நம் தவறுக்கு தானே பரிகாரம் செய்ய வேண்டும் என்று உணர்ந்தே இருந்தாள். ஆனால் அவன் தன்னிடம் பேசாமல் இருக்க என்ன காரணம் என்று புரியவில்லை. அவனுக்கு நிச்சயம் தன் மேல் கோபம் இல்லை என்று தெரிந்தது. சரி காரணம் எதுவானாலும் பேச வேண்டியதை பேசிட வேண்டும் என்று முடிவுடன் எச்சிலை விழுங்கி கொண்டு பேசினாள்.
"சாரி மதி நான் செஞ்சது எவ்வளவு பெரிய தப்புனு எனக்கு புரியுது. அது உங்களை எவ்வளவு வருத்தப்படுத்திருக்கும்னு....என்னை மன்னிச்சிடுங்க ". ஐ லவ் யு சோ மச் மதி. உங்களை விட்டுவிலகனும்னு நான் நினைச்சது மிகப்பெரும் தவறு. அது நான் உங்களுக்கு மட்டும் செய்த துரோகம் இல்லை நம் காதலுக்கும் சேர்த்து செய்தது. நீங்க இல்லாம என்னால இருக்க முடியாதுனு இப்போ புரியுது. ஆனா அப்படி ஒரு முடிவை நான் எடுக்க எனக்கு என்னுடைய அனுபவமின்மை, உணர்ச்சி வசப்பட்டு எடுத்த முடிவு இதல்லாம் காரணமாயிருக்கலாம். ஆனா அதெல்லாம் சொல்லி என்னுடைய தவறை நான் நியாயப்படுத்தலை. ஆனா நீங்க எ ன்னோட பேசாம இருக்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்களை விட்டு விலகி நின்னாலும் என் மனசு முழுதும் நீங்க தான் இருந்திங்க. இப்போ பக்கத்துலயே இருக்கோம் ஆனா நீங்க என்னைவிட்டு விலகி நிக்கறீங்க. அது தான் ஏன்னு புரியல? என் மேல உங்களுக்கு கோபம் இல்லை வருத்தம் தான்னு தெரியும். ஏன் மதி என்கிட்ட பேச மாட்டேங்கிறீங்க." என்று கண்களில் வழியும் நீருடன் அவள் முடிக்க இங்கு மதியின் முகத்தில் புன்னகை அரும்பியிருந்தது.
அவன் எதிர்பார்த்தது நடந்ததால் தோன்றிய புன்னகை அது. யாரொருவரின் சமாதானப்படுத்தலிலும் அவள் இந்த திருமணத்தை ஏற்க கூடாது. அவளின் இந்த காதல் அது அவளின் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவள் மனமார உணர வேண்டும். அவனின் அருகாமைக்கு அவள் மனம் எவ்வளவு ஏங்கி தவிக்கும் என்பதை அவள் உணர வேண்டும்.அப்படி உணர்ந்தாள் மட்டுமே இந்த காதலை அடைய எந்த கஷ்டத்தையும் ஏற்கலாமே தவிர எந்த ஒரு கஷ்ட சூழ்நிலையிலும் இந்த காதலை பிரியும் எண்ணம் வரக்கூடாது என்பதை அவள் உணர்வாள் என்று மதிக்கு ஏற்பட்டிருந்த ஒரு விருப்பம், முடிவு எல்லாம்..
இப்போது முதல் முதலாக தான் காதலை தெரிவித்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு தன் காதலுக்கு வாய்மொழியாய் பதில் சொல்லும் தன் காதலியின் பேச்சை அவளின் காதல் பகிர்வை அவன் மகிழ்ச்சியுடனே அனுபவித்தான் என்று தான் சொல்ல வேண்டும். என்னதான் அவளின் காதலை அவன் உணர்ந்திருந்தாலும் அந்த உணர்வினை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவளுடன் சேர அவன் முயற்சிகளை மேற்கொண்டாலும் இன்று அவள் வாய்வழி கேட்ட "ஐ லவ் யு மதி" என்ற வாக்கியம் அவனை வானில் பறக்க செய்தது. அவனிடமிருந்து பதில் வராமல் போக என்ன செய்வதென்று தெரியாமல் மனம் கொண்ட தைரியம் இழக்க கட்டுப்படுத்த இயலாமல் கண்களில் கண்ணீர் கரைபுரள மெல்ல விசும்ப தன் ஒரு கையால் வாயை மூடி அழுகையை அடக்க பிரயத்தனப்பட்டாள் மது. அவளின் விசும்பல் கேட்டதும் அதற்கும் மேல் மதிக்கு தன்னை கட்டுப்படுத்த இயலவில்லை எவ்வளவு முயன்றும்.
"மதும்மா போதும் அழுதது.. கேளுடா உனக்கு என்ன கேக்கணுமோ இப்போ கேளு." -மதி
அவளும் ஒரு நீண்ட மூச்சை எடுத்து கொண்டு அவனிடம் கேட்டாள்.
"நீங்க ஏன் என் கூட பேசாம இருந்திங்க மதி ?" -மது
"நான் உன்கூட பேசாம இருந்தப்போ உனக்கு கஷ்டமா இருந்துச்சா மது" -மதி
"ரொம்பவே... அப்போதான் நான் எவ்வளவு பெரிய தவறு செய்தேன்னு எனக்கு புரிஞ்சுது.. அதுக்காகத்தான் அது புரியணும்னு தான் அப்படி பண்ணுனீங்களா?" -மது
"இல்லைடா நிச்சயமா அதுக்காக இல்லை. எனக்கு வாரிசு வேணும்னு உன் காதலை வேண்டாம்னு வெச்சே என் குடும்பம் வேதனை படும்னு உன் காதலை வேண்டாம்னு சொன்ன. ஆனா உனக்கு எது தேவைன்னு உனக்கு புரியல. சரண் உனக்கு என் மேல காதல் இல்லைனு சொன்னப்பவே எனக்கு அது உண்மை இல்லைனு தெரியும். ஏன்னா எனக்கு நம் காதல் மேல இருந்த நம்பிக்கை. ஆனா உன் காதல் மேலே உனக்கு எப்படி நம்பிக்கை இல்லாமல் போய்டுச்சு...உனக்கு எனக்கு நம்ம ரெண்டு பேருக்கும் உண்மையான சந்தோஷம் நம் வாழ்க்கையின் உண்மையான ஜீவன் நம் காதல்னு உனக்கு புரியணும்னு நெனச்சேன். நான் உன்னை விட்டு கொஞ்சம் விலகி நின்னா உனக்குப்புரியும்னு தோனிச்சு...அதனால தான். ஆனா அந்த சில நாட்களிலேயே கண் முன்னாடி இருக்கற உன்கிட்ட பேசாம இருக்கறது ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்போதான் நீ எனக்காக எவ்வளவு கஷ்டப்படறானு எந்நாளும் உணர முடிஞ்சுது." – மதி