இரவு முழுதும் தூங்காமல் விழித்ததற்கான எந்த விதமான சோர்வும் இல்லை மதுவிடம். இறக்கை கட்டி பறந்தது மதுவின் மனது. அந்த துள்ளல் வெளியிலும் தெரிய ஓடி திரிந்தாள் வீடு முழுதும். பின் வந்த நாட்களில் மூன்றில் ஒரு பகுதி நேரம் மட்டுமே கையில் போன் இல்லாமல் சுற்றியது. எதையெல்லாமோ பேசினார். பேசிக்கொண்டே இருந்தனர். சின்ன சின்ன ஊடல்கள் கூடல்கள் என்று நேரம் செல்ல இருவருக்கும் நிச்சயதார்த்த ஏற்படு தொடங்கியது. மதுவிற்கு நிச்சய மோதிரம் எடுக்க வேண்டும் என்று கூறி மதுவை அழைத்து செல்ல மதி வந்தான். ஆனால் எங்கே அவனுடன் தனியே சென்றால் முத்தம் கித்தம் என்பனோ என்று பயந்து அளவு மோதிரத்தை கொடுக்க அவன் முறைக்க அவனை பார்த்து யாருக்கும் தெரியாமல் பழிப்பு காட்டிவிட்டு ஓடினாள்.
இரு வீட்டினரும் பரபரப்புடன் நிச்சய வேலைகளை செய்தனர்.
நிச்சயதார்த்த நாளும் வந்தது. அழகிய லெகெங்கா சோளியில் மதுவும் அதே நிற ஷெர்வானியில் மதியும் அமர்ந்திருக்க இருபுறமும் அவர்களை சுற்றி அவர்களின் குடும்பத்தார் அமர்ந்திருக்க எல்லோர் முன்னிலையிலும் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர். அதன் பிறகு அய்யர் நிச்சய பத்திரிகை படிக்கும் முன்பு எந்த தேதியில் திருமணம் வைக்கலாம் என்று அய்யரிடம் சில முகூர்த்தங்களை கேட்க அவரும் அடுத்து இரு மாதங்களில் இருவரின் நட்சத்திர பொருத்ததுடன் கூடிய சில மூகூர்த்தங்களை குறித்து கொடுத்த்தார். எல்லாம் கூடி வரும் இரு மூகூர்த்தங்களை தேர்தெடுத்தவர்கள் மதுவிடமும் மதியிடமும் அவர்கள் இருவருக்கும் எந்த நாள் சவுகரியம் என்று கேட்க, "உங்கள் விருப்பப்படி எந்த நாளாகினும் சரி என்று கூறினாள் மது. மதியிடம் கேட்க அவனோ "எனக்கு இந்த இரண்டு நாட்களும் சவுகரியமில்லை " என்றான்.
எல்லோரும் அவனை கேள்வியாக நோக்க மதுவுக்கும் ஆச்சர்யம் தான்.
"ஏம்ப்பா என்ன பிரச்சனை " கந்தசாமி
"இல்லைப்பா அம்மா மாமா அத்தை அது வந்து என்னனா ... " - மதி
"எதுவா இருந்தாலும் சொல்லுங்க மாப்பிளை " -சிவசண்முகம்
"இல்லை இது என்னமோ அரேஞ்ட் மேரேஜ் மாதிரி இருக்கு... எனக்கு லவ் பண்ண கொஞ்சம் டைம் வேணும். அதனால ஒரு ஆறு மாசத்துக்கு அப்பறம் கல்யாணத்தை வெச்சுக்கலாமா " என்று கேட்க கூடியிருந்த அனைவரும் வாய்விட்டு சிரிக்க மதுவிற்க்கோ வெட்கம் பிடுங்கி தின்றது,"இவருக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை " என்று மனதிற்குள் திட்டியவள் தலையை நிமிர்த்தினாள் இல்லை.அருகில் இருந்த திவ்யாவும் பைரவியும் செய்யும் கேலி ஒரு புறம் என்றால் மற்றவர்களின் முகத்தை எப்படி பார்ப்பது என்று வெட்கம் ஒருபுறம் என்று போராடி கொண்டிருந்தாள் மது.
"டேய்ய்ய் ...நீ லவ்பண்ணுடா ஆனா ஆறு மாசம் எல்லாம் முடியாது வேணா ஒரு மூணு மாசம் தாறோம். சரியா...சம்மந்தி உங்களுக்கும் ஒகே தான " -கந்தசாமி
"சரிப்பா" -மதி
"சரிங்க சம்மந்தி " சிவசண்முகம்
ஒருவழியாக அய்யரும் மூன்று மாதத்திற்கு பின் வரும் முதல் முகூர்த்தத்தை குறித்து கொடுக்க அந்த நாளை உறுதி செய்து நிச்சய பத்திரிகை வாசிக்க பட்டது.
மதுவின் பெற்றோர் மனம் பூரித்திருந்தது. அந்த சந்தோசத்துடனேயே மங்களம் உறங்கி விட, அவர் உறங்கிய பின் மதுவின் அறைக்கு வந்தார் சிவசண்முகம்.
"மதும்மா " -சிவசண்முகம்
"அப்பா வாங்கப்பா "-மது
"என்னம்மா இன்னும் தூங்கலையா " -சிவசண்முகம்
"இல்லைப்பா தூக்கம் வரலை " என்ற மகளை சந்தோசத்துடன் பார்த்தார் சிவசண்முகம் . காலையில் முடிந்த நிச்சயதார்த்த கலாட்டாக்களுடன் மகளின் முகத்தில் இருந்த அந்த பூரிப்பு இதுவல்லவா ஒவ்வொரு தந்தையின் கனவும். எங்கே தன் மகளுக்கு இப்படி ஒரு வாழ்வு அமையாதா என்று எத்தனை நாட்கள் வருந்தினார்.
"என்னப்பா அப்படி பாக்கரிங்க" -மது
"ஒன்னும் இல்லைம்மா.. உனக்கு இப்படி ஒரு சந்தோசமான வாழ்க்கை கிடைக்கணும்னு தான் நானும் அம்மாவும் கனவு கொண்டோம்." -சிவசண்முகம்
மெல்ல அவரின் தொழில் சாய்ந்து கொண்டாள் மது.
"கடவுள் நமக்கு இப்படி ஒரு பிரச்சனை வருனு தெரிஞ்சு தான் இந்த மாதிரி ஒரு குடும்பத்தை நமக்கு உறவாக்கினானோ என்னவோ.. ஏதோ ஜென்மத்தில் நான் செஞ்ச பாவம் உன் தலையில் விழுந்துடுச்சேன்னு கவலைப்பட்டேன்மா. ஆனா இப்போ அந்த கவலை போய்டுச்சு " என்று கூறி மகளின் தலையை ஆதரவாக தடவினார்.