“அதெல்லாம் தரமுடியாதுண்ணா… நீ இன்னிக்கு எங்க ரெண்டு பேர் மேத்ஸ் கிளாஸையும் கிண்டல் பண்ணிட்ட , ஸோ உனக்கு ஸ்வீட் கிடையாது. எங்களை மாதிரி சின்சியர் ஸ்டூடண்ட்ஸ் உனக்கு கிடைக்க சான்ஸே இல்ல அப்படித்தானே என்ன அனி?” ரூபனைப் பார்த்து கண்சிமிட்டியவாறு அனிக்காவிடம் கேட்க,
“நீ சேம்சைட் கோல் போடறியா? உனக்கும் ஸ்வீட் கட் தான்” என்றுச் சொல்லி கொஞ்ச நேரம் வளவளத்துக் கொண்டிருந்தவர்களை கையோடு ஃபேக்டரியின் உள்ளேக் கூட்டிச் சென்றவன் ஒரு சில விசயங்களை விளக்கினான்.
இன்னிக்கு உங்க ரெண்டு பேருக்கும் வேலைக்க முதல் நாள் இல்லையா…. அதான் நான் உங்க ரெண்டு பேரையும் சீக்கிரம் வரச் சொன்னேன். இப்போ கொஞ்ச நேரத்தில ஷிஃப்ட் ஆரம்பிச்சிடும். நாளையிலிருந்து நீங்க ரெண்டு பேரும் வேணும்னா கொஞ்ச நேரம் கழிச்சும் வரலாம்” என்றான் புன்னகை முகமாகவே,
“நீங்க எந்த டைம் வருவீங்க அத்தான்?” என
“நான் எப்பவும் சீக்கிரம் வந்திடுவேன், லேபர்ஸ் எல்லோரும் நல்ல ஆட்கள். மேனேஜரும் ரொம்ப பொறுப்பானவர்தான். ஆனால், நான் இருந்தா அவங்களுக்கு வேலைச் செய்யுறப்போ, மெஷின்ல இல்ல வேற எதுவும் எதிர்பாராத பிரச்சினைகள் வந்தா சட்டுன்னு எதுவும் தேவையான முடிவுகள் எடுக்க நல்லாயிருக்கும் அதான்.”
ஜீவனுக்கு தன்னுடைய படிப்புக்கேற்ற விஷயம் என்பதால் பல்வேறு நுணுக்கமான விஷயங்களை ரூபனுடன் சுவாரசியமாக பேசியவாறு சென்றுக் கொண்டிருந்தான். அனிக்கா அவர்கள் பேச்சில் இடையூறுச் செய்யாமல் நின்று விட்டிருந்தாள். நின்ற இடத்தினின்று பேக்டரியை சுற்றி அவள் கண்கள் சுழன்றன, பார்வையிட்டன. அவளுக்கு ரூபனின் இந்த கோணம் வித்தியாசமாக இருந்தது. சில வருடங்களிலேயே அவன் அடைந்துள்ள உயரம் பிரமிக்கத் தக்கது என்று நினைத்துக் கொண்டாள். அதற்கு அவனுடைய ஈடுபாடும், ஆர்வமும் தான் காரணமாக இருக்கும் என்று இங்கு வந்த ஓரிரு மணித் துளிகளிலேயே உணர்ந்தாள்.
தன்னுடைய வேலையைக் குறித்துப் பேசும்போதெல்லாம் அவன் கண்களில் தெரித்த அந்த ஒளி, அவன் கம்பீரம், சாதனையாளர்களுக்கே உரித்தான பெருமித உணர்வு தன்னுடைய துறையை சுவாசமாய் நேசிப்பவர்களுக்கு எந்த உயரமும் சாத்தியம் தான் என்று அவளுக்குத் தோன்றிற்று.இடையிடையே ஏதோ அவள் எண்ணத்தில் இடறிற்று. யாரோ அவள் மனக் கண்ணில் தோன்றிய உணர்வு.
தந்தை மற்றும் அண்ணனின் அலுவலம் அவள் சென்றிருக்கின்றாள் தான் பளிங்கும் கண்ணாடியுமாய் உயர்தரமாய் இருக்கும் அந்த அலுவலகத்தையும், சற்றே பழைய கட்டிடத்தில் அமைந்திருந்த இந்த ஃபேக்டரியையும் ஏனோ மனம் ஒப்பிட்டுப் பார்த்தது. அந்நேரம் தம்பியோடு உரையாடியவாறு அந்த பெரிய, விஸ்தாரமான இடத்தில் அமைந்திருந்த பல்வேறு பெரிய மெஷின்களையும் அவற்றைக் குறித்த விபரங்களைச் சொல்லியவாறு திரும்பி வந்துக் கொண்டிருந்த ரூபனின் அமைதியான புன்னகையில் தன்னையும் அறியாமல் அவள் கண்கள் நிலைத்தது.
அவனைப் பார்க்கும் போதெல்லாம் மறுபடியும் நினைவில் ஏதோ நிரடியது. யாரையோ ஞாபகப் படுத்தியது. யாரென்று வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள் அவளுக்கு நினைவிற்கு வரவில்லை. மறுபடி அந்த இடத்தை பார்வையிட்டாள். மிகப் பெரிய விஸ்தாரமான இடம்தான். பெரிய பெரிய மெஷின்கள் இருந்தன. பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்களும்,பெண்களுமாக போதே பேக்டரி வொர்க்கர்ஸ் ஒவ்வொருவராக வந்துக் கொண்டிருந்தனர். ரூபனைப் பார்த்ததும் மரியாதையான ஒரு தலையசைப்பு, அல்லது வணக்கம் தெரிவித்தனர். மகிழ்ச்சியாகவே அவன் பதிலுக்கு தலையசைத்துக் கொண்டான்.
யாரும் யாருக்கு உத்தரவு பிறப்பிக்காமலே தானாக வேலையை ஆரம்பித்தனர். இயந்திரகதி என்பது இதுதானோ? எனத் தோன்ற ஆரம்பித்தது. சீரான மெஷின்கள் சப்தத்தில் தொடர்ந்து வேலை ஆரம்பித்தது. ஒவ்வொரு இடமும் மறுபடி போய் சிறிது நேரம் ஒவ்வொருவரிடமும் நின்று பேசிக்கொண்டு நகர்ந்தான். ஜீவனை அறிமுகப் படுத்தினான் போலும் அனைவரும் ஜீவனுக்கு மரியாதையான வகையில் புன்னகை செலுத்தி பேசிக் கொண்டனர்.
தன்னை அறிமுகப் படுத்தவில்லையே என்று நினைக்கும் போதே ஜீவன் அங்கேயே வேலை மும்முரத்தில் நின்று விட இவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். யாரோ அவனை அழைக்க திரும்பி நின்று பேசியவனைக் கவனித்தாள். மறுபடி நினைவில் ஏதோ நிரடியது, கவனித்தாள் அவளுக்கு ஏதோ நினைவு வந்தார்ப் போல இருந்தது.
வீட்டில் அப்பாவும் அண்ணனும் செய்வது ஒரே வேலைதான் என்றாலும் அப்பா காண்பித்த வழித்தடத்தில் நடந்து வந்தவன்தான் கிறிஸ். அவன் நிறைய நேரங்களில் தந்தையிடம் அறிவுரை கேட்பதையும், ஒரு சில முடிவுகள் எடுப்பதில் திணறுவதையும் கண்கூடாக பார்த்திருக்கிறாள்.அதே நேரம் அப்பாவோடு அலுவலகம் செல்கையில் அவர் வீட்டில் எவ்வளவு தான் எளிமையாக குடும்பத்தோடு அன்பில் குழைந்தவராக காணப் பட்டாலும், தன்னுடைய அலுவலகம் வந்துச் சேர்ந்ததும், அங்கே ஆளே மாறிப் போனவராக காணப் படுவார். அவருடைய ஆளுமைத் தன்மையும், சிரிப்பும், தோரணையும் அவளை வெகுவாக வசீகரிக்கும். தான் நிலை நிறுத்திய சாம்ராஜ்யம் இது என்னும் பெருமிதம் அவர் கண்களில் தெரிக்கும்.