27. புத்தம் புது காலை - மீரா ராம்
ஜானவியின் வீட்டில்,
என்ன செய்து நடக்கப்போவதை மாற்ற என்று தவித்துக்கொண்டிருந்தாள் ஜானவி…
“அப்பா… நான் சொல்லுறதையும் கொஞ்சம் கேளுங்கப்பா…”
அவள் குரல் தழுதழுத்து ஒலிக்க,
“எல்லாம் கேட்டாச்சு… இனி நாங்க சொல்லுறதை நீ கேளு…”
கட்டளையாய் வெளிவந்தது ஜானவியின் அம்மாவின் வார்த்தைகள்…
“அப்பா… அம்மாகிட்ட சொல்லுங்கப்பா… ப்ளீஸ்ப்பா…”
அவள் கெஞ்சுதல் காதில் கேட்டும் கல்லாய் நின்றாய் அவளைப் பெற்றவர்….
“இவ்வளவு நாள் பொறுத்துக்கிட்டீங்க தான… இன்னும் கொஞ்ச நாள்ப்பா…”
அவள் அவரை சமாதானம் செய்ய முயல, அதற்கு எந்தவித அசைவும் காட்டாமல் இருந்தார் அவர்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
கண்களில் கண்ணீர் நிறைய, அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் ஜானவி..
தனதறைக்கு வந்து கதவை சாத்திக்கொண்டவளுக்கு மனதின் பாரம் தாங்கவில்லை கொஞ்சமும்…
அந்த நேரம் பார்த்து அவளுக்கு போன் செய்தாள் ஜனனி…
“ஜானு…. என்னடி இன்னைக்கு லீவா?...”
“…….”
“ஹே… உங்கிட்ட தான் கேட்குறேன்… எதுக்குடி லீவு?...”
“……..”
அவள் அமைதி ஜனனிக்கு கலக்கத்தை கொடுக்க,
“ஜானு… என்னாச்சு?....” என்று கேட்டதும், மளமளவென்று அழுதாள் ஜானவி…
“ஹே… என்னாச்சுடா?... எதுக்கு அழற இப்படி?...”
ஜனனி பரிதவிப்புடன் கேட்கவும், அனைத்தையும் அவளிடத்தில் கொட்டி தீர்த்தாள் ஜானவி…
கேட்டவளுக்குள் துக்கம் மலை என உயர, ஜானவியைத் தேற்ற முயற்சித்தாள்…
“அழாத… அடுத்து என்ன பண்ணுறதுன்னு பார்க்கலாம்…”
“என்ன பார்க்க இனி?... எல்லாம் முடிஞ்சது…”
சொல்லிவிட்டு விரக்தியாக புன்னகைத்தவளின் மீது ஏனோ கோபம் உண்டானது ஜனனிக்கு…
“இப்படி எல்லாம் பேசுறத முதல்ல நிறுத்து ஜானு…”
“ம்ம்ம்…”
“அப்பா அம்மா இடத்துல இருந்து யோசிச்சுப்பாரு… அவங்களும் பாவம் தான…”
“நான் இல்லன்னு சொல்லலையேடா…”
“உன் கையில அவங்க ஆசைப்பட்ட மாதிரி ஒரு வேலை இருந்துருந்தா, இந்த அளவுக்கு போயிருக்காது தான?...”
“இல்ல ஜனனி… வேலை மட்டும் கிடைச்சிருந்தா எப்பவோ அவங்க கடமையை முடிச்சிருப்பாங்க… அது தெரிஞ்சு தான நான்…..”
அடுத்து சொல்லப்போனவள், சட்டென தன் வார்த்தைகளின் மீது கவனம் பதித்து, நிறுத்திக்கொண்டாள்…
அந்த சிறு இடைவெளியே போதுமானதாய் இருந்தது ஜனனிக்கு, ஜானு எதையோ மறைக்கிறாள் என்று…
“நான் உங்கிட்ட ஒன்னு கேட்பேன்… நீ மறைக்காம பதில் சொல்லுவீயா?...”
“நீ என்ன கேட்கப் போறன்னு எனக்கு தெரியும் ஜனனி… ப்ளீஸ்… விட்டுடு….”
“இல்ல ஜானு… இதுக்கு மேலயும் பொறுமையா போறதுல அர்த்தம் இல்லன்னு நினைக்குறேன்…. என்னை நிஜமாவே நல்ல ஃப்ரெண்டா நீ நினைக்குறது உண்மைன்னா இப்ப நீ உண்மையை சொல்லணும்… சொல்லு…”
ஜனனி அழுத்தம் திருத்தமாக கேட்க, சிறிது நேரம் மௌனமாக இருந்த ஜானவி, பின் இதுநாள் வரை தான் மறைத்து வைத்திருந்த உண்மையினை ஜனனியிடம் தெரியப்படுத்தினாள்…
ஜானுவை திட்ட வாயெடுத்தவள், பின் என்ன நினைத்தாளோ, அமைதியாக இருந்தாள்…
திட்டிதான் ஆகப்போவது என்ன?... அடுத்து நடக்கப்போவதை பார்ப்பது தானே உத்தமம்…
யோசித்தபடியே ஜானவியிடம், “சார் கூப்பிடுறாங்க… இரு கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன்…” என சொல்லிவிட்டு அவளின் பதிலை கூட எதிர்பார்க்காது போனை கட் செய்தாள் ஜனனி…
போனை கட் செய்தவள், அடுத்து அழைத்தது அர்னவிற்குத்தான்…