09. நிர்பயா - சகி
"நீங்க சுப்ரியா ஃப்ரண்டா?"-எதிரில் அமர்ந்திருந்தவனிடம் வினவினான் ஜோசப்.
"இல்லை சார்..!நான் அவளை காதலித்தேன்!"
"எத்தனை வருஷமா?"
"எட்டு வருஷமா சார்!ஸ்கூல் படிக்கும் போதே லவ் பண்ணோம்!அதுக்கு அப்பறம் நான் பி.பி.ஏ படிக்க கல்கத்தா போயிட்டேன்!ஒருநாள் கூட என் கூட பேசாம இருக்க மாட்டா!வீட்டில பேசி கல்யாணத்துக்கு சம்மதம் எல்லாம் வாங்கினோம்!எனக்கு ஜாப் பெங்களூர்ல!அவ படிப்பு இந்த வருஷத்தோட முடியுது!அன்னிக்கு ராத்திரி எங்க எதிர்காலத்தை பற்றி சந்தோஷமா பேசிட்டு இருந்தோம்.அடுத்த நாளிலிருந்து அவக்கிட்ட இருந்து போன் வரலை!நான் பண்ணாலும் ரெஸ்பான்ஸ் இல்லை!அடுத்த ஒரு வாரத்துல அவ செத்துட்டான்னு..."-அவன் சகிக்க முடியாமல் அழுதான்.
ஜோசப்பின் கண்களில் கண்ணீர் பெருமளவு திரண்டிருந்தது.
பிரிவின் வலி அறிந்தவன் தானே அவனும்!!
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
"அவ ரொம்ப நல்லவள் சார்!ஒரு பட்டாம்பூச்சியை பிடித்தா கூட அதுக்கு வலிக்குங்க பிடிக்காதீங்கன்னு அழுவா!ரொம்ப மென்மையானவள்!ஒரு முள் குத்தினாக்கூட வலி தாங்க மாட்டா!அவளுக்கு இந்த மாதிரி மரணம் வரும்னு எதிர்ப்பார்க்கவே இல்லை.அவ இல்லாம இனி என்ன பண்ண போறேன்னு தெரியலை!"
"சரி..ரிலாக்ஸ் விஷ்வா!நீங்க கிளம்பலாம்!"-அவன் எழுந்தான்.
"என் சுப்ரியாவை கொன்றவங்களை விடாதீங்க சார்!என் மனசு கொதிக்குது!அவங்களுக்கான தண்டனையை தயவுசெய்து வாங்கி கொடுங்க சார்!"
"சுப்ரியா என் தங்கச்சி மாதிரி!ஒரு அண்ணனா என்ன செய்யணுமோ நான் அதை செய்வேன்.தைரியமா போங்க!"
"தேங்க்யூ!"-வெளியேறினான் விஷ்வா.
ஜோசப்பின் மனதில் துணுக்கம்!!
அவன் ஆராயும் பாதை சரிதானா என்ற எண்ணம்!
"இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன் அவள் காணாமல் போயிருக்கிறாள்.காதலித்தவனும் இரண்டு வாரங்களுக்கு முன் தான் அவள் பேசியதாய் கூறுகிறான்.அவள் படித்தது சென்னையில்!!அதுவும் விடுதியில் தங்கி படித்திருக்கிறாள்.
அவள் இறந்த காலம் அவளுக்கு விடுமுறை சமயம்!அதனால்,இங்கு வந்திருக்கலாம்!அவள் சரீரம் இருந்ததோ நடு வனத்தில்,அதுவும் வெளியே செல்லும் வழி மறக்கும் வனத்தில்.எனில்,உதகையை கரைத்து குடித்தவன் தான் இப்பணியை செய்ய இயலும்.அவளின் உறவுகளும் உதகையில் இல்லை.நண்பர்களுக்கும் எதுவும் தெரியவில்லை.அவள் கைப்பேசி மலையடிவாரத்தில் கிடந்திருக்கிறது!"-அவன் கண்களை இறுக மூடினான்.
"யோசி!யோசி!"-அவன் மனக்கண்ணில் தெளிவாய் தெரிந்தது மலையடிவாரத்தில் இருந்த பங்களா!!சட்டென கதவை திறந்தான்.
"அந்த இடத்திலிருந்து அந்த வனம் 13 கி.மீ.தொலைவில் உள்ளது.அப்படியென்றால் அவள் துன்புறுத்தப்பட்ட இடம் அந்த பங்களாவுமாக இருக்கலாம்!"-உடனடியாக தனது பைக் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அரை மணி நேர பயணத்தில்,அந்த பங்களாவை அடைந்திருந்தான் அவன்.
அது ஒரு பாழடைந்த பங்களா!சில நேரங்களில் ஆவிகள் நடமாடும் பங்களா என்றும் பலரால் அழைக்கப்படுகிறது.
பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.அவன் மூச்சுக்காற்று அவனுக்கே தெளிவாக கேட்டது.
உள்ளே கும்மிருட்டு!!தனது கைப்பேசியில் டார்ச்சை உயிர்பித்தான்.
ஒரே துர்நாற்றம் அடித்தது.
சில அடிகள் சென்றிருப்பான்.ஒரு நீண்ட கயிறு தொங்கி கொண்டிருந்தது.
ஒருவேளை யாரேனும் தூக்கில் தொங்கி இருப்பர்.அதைக்கண்டு கொள்ளாமல் நடந்தான்.
ஒரு அறைக்கதவை திறக்க,'தொப்'என்று குதித்து ஓடியது அந்த பூனை.அதையும் மதிக்காமல் நடந்தான்.
சிறிது தூரத்தில் தெரிந்தது அந்த உடைந்த நிலைக்கண்ணாடி,அதில் ஒரு பெண்ணின் கை தடம் குருதியால் பதிந்திருந்தது.அதனை நெருங்கியவன் உற்று நோக்கினான்.சில நொடிகள் அதையே உற்றுப் பார்த்தான்.திடீரென்று ஒரு கல்லை எடுத்து அக்கண்ணாடியை நொறுக்கினான்.அதிலிருந்து குருதி நிறைந்த ஒரு துண்டை எடுத்து சேகரித்தான்.மீண்டும் பயணம் தொடர்ந்தது.ஒரு பெண்ணின் கிழிந்த வஸ்திரம் பரவி இருந்தது.அதிலும் இரத்த வாடை!!!
அடுத்ததாக,கை வளைகள் நொறுக்கப்பட்டிருந்தன.
குருதி உரைந்த ஒரு கூர்மையான ஈட்டி இருந்தது.அதை படம் பிடித்துக் கொண்டான்.அடுத்த சில அடிகளில்,ஒரு கத்தி அதில் சில சதைத்துண்டுகள் அழுகி போயிருந்தன.ஜோசப்பின் கண்கள் கசிந்துருகின.மனதில் அவ்வளவு கோபம்!எங்கோ வெறித்தப்படி அதையும் படம் பிடித்தான்.அடுத்த சில அடிகளில்,மனித பற்கள் சிதறி கிடந்தன.தனது கைக்குட்டையால் அதில் ஒன்றை சேகரித்துக் கொண்டான்.
இன்னும் சில மணி நேரம் ஆராய்ந்து வெளியே செல்ல திரும்பியவனின் கண்களில் தட்டுப்பட்டது அது.அது ஒரு கைப்பேசி!!குழம்பியப்படி அதன் அருகே சென்றான்.அது நன்றாக நொறுங்கி இருந்தது.ஒருவேளை இதுவும் பயன்படலாம் என்ற எண்ணத்தில் அதையும் சேகரித்துக் கொண்டான் அவன்.