இன்னும் என்னென்னவோ புலம்பினான். காதல் இப்படித்தான் படுத்தும் போல என எண்ணிக் கொண்ட ஜீவனுக்கு ரூபனை அன்றிரவு சமாதானப் படுத்தி தூங்க வைப்பதற்க்குள்ளாக போதும் போதுமென்றாயிற்று.
அனிக்காவை அவன் காதலிக்ககூடாது என்கிற காரணம் நாளாக நாளாக வலுவிழந்து பிசு பிசுத்து போனதாக அவனுக்கு தோன்றிக் கொண்டிருக்கின்றது. இவ்வளவு அன்பு செய்கின்ற ஒருவன் தன் தோழிக்கு கணவனாக வர தகுதியானவன் தான் என்று தான் அவன் மனம் ஒப்புக் கொள்ள ஆரம்பித்து விட்டிருந்தது. ஆனால், எந்த விதத்திலும் அவளை சம்மதிக்க வைக்க அவன் வலியுறுத்தக் கூடாது என்கிற எண்ணம் மட்டும் தற்போது அவனிடம் உண்டு. அவளாக தன் அண்ணனை விரும்பினால் பார்க்கலாம்.
அனிக்கா ஒன்றாகச் சேர்ந்து பணி புரிவதாக இருந்த நாள் முதலாக அவனுடைய அதிகப் படியான கவனம் இருந்தும் ரூபனைக் குறித்து அவன் தவறாக எண்ணும் படி ஒன்றுமே நிகழவில்லை. அனிக்கா ஆஃபீஸிற்கு வந்துக் கொண்டிருக்கும் இந்த ஆறேழு மாதங்களில் ரூபன் அனாவசியமாக அவளிடம் எதையும் பேசியதாகவோ, வக்கிரப் பார்வையையோ, வலுக்கட்டாயமான தொடுகையையோ அவன் காணவில்லை.
மதியம் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடும் பொழுது மட்டும் அவர்களிடையே விளையாட்டுப் பேச்சுக்கள் கலகலக்கும். பெரும்பாலும் ஜீவன் , அனிக்கா சண்டையில் அவன் மூக்கை நுழைக்காமல் அமைதியாக பார்த்து சிரித்துக் கொண்டிருப்பான். அவனை நோக்கி வீசும் கமெண்டுகளுக்கு மட்டும் சளைக்காமல் அனாயாசமாய் பதிலளிப்பான். பேசத் தெரியாதவன் போல் இருப்பவன் இவன் தானா? என மற்ற இருவர்கள் வாயடைக்கும் படி இருக்கும் ரூபனின் பதில்கள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
“அய்யோடா நீங்க இவ்வளவு பேசுவீங்களா அத்தான்?” என்று ஒவ்வொரு முறையும் அனிக்கா விழிவிரிக்கும் போது ரசனையாய் அவள் முகத்தை வருடி சிரிக்கும் அவன் கண்கள். சிரித்து சிரித்து கடக்கும் அந்த மதிய நேரம் மூவருக்கும் மிகவும் விருப்பமானது.
ஷைனி புதிய ஃபேக்டரி ஆரம்பித்த முதலிரண்டு மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து வந்து அடிக்கடி ரூபனை வேலையில் தொந்தரவுச் செய்துக் கொண்டிருக்க, அவனோ அதனைக் கண்டுக் கொள்ளாமல் இருந்தான். அதைப் பார்த்து ஜீவனும் அனிக்காவுமே மிகவும் கடுப்பாகினர்.
ஓரிரு முறை ஷைனி ரூபனுடன் தனியாக பேசிக் கொண்டிருந்தாள். ஃபேக்டரியில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எண்ணுகின்ற ரூபன் வொர்க்கர்ஸ் கவனம் ஈர்க்கும் விதமாக பர்சனலான விஷயங்கள் எப்போதுமே பேசிக் கொள்வது இல்லை. அது ஜீவனோ , இல்லை அனிக்காவோ யாரகவும் இருக்கட்டும். ஆனால், ஷைனியின் தொல்லை மட்டும் அவனளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.
ரூபனுடன் அடிக்கடி ஃபோனிலும் பேசிக் கொண்டிருந்தாள் போலும், போனில் பேசுவது நேரில் வருவது என்றிருந்த நேரம் ஒரு நாள் ஃபேக்டரிக்கு அவள் வந்தவுடன் ஜீவனிடம் வேலையை ஒப்படைத்தவனாக ஷைனியை காரில் அழைத்தவனாக எங்கோ சென்றான். பார்த்துக் கொண்டிருந்த இவ்விருவருக்கும் காரணம் தான் புரியவில்லை.
அப்படி என்னதான் பேசுவாளோ? இப்போது எதுக்கு அவளோடு வெளியே போகணும்? என்று உள்ளூர அனிக்காவிற்கு பொருமல் எழுந்தது. என்னதான் நடந்துக் கொண்டிருக்கிறது? என்று தெரிந்துக் கொள்ள வேண்டுமே என்கிற ஆவல் மனதை அரித்தாலும் அதை அறிந்துக் கொள்ள வாய்ப்பில்லாது போயிற்று.
வேலை வேலையென்று ஓடுபவனிடம் நீ ஷைனியோடு எங்கே போனாய்? என்ன பேசிக் கொள்ளுவீர்கள்? என்று கேட்பது அபத்தமாக இருக்குமோ என்று தயங்கினாள். அன்று இருவரும் வெளியே சென்றவர்கள் தான் அதற்கு பின்னே ஷைனி ஆஃபீஸிற்கு வரவும் இல்லை. அவள் முன்பு போல ரூபனுக்கு ஃபோன் செய்வது போல தோன்றவுமில்லை.
அவளுக்கு அப்படி என்னதான் ஆயிற்று? என்று எண்ணியவளுக்கு பதில் ஓரிரு மாதங்களுக்கு பின்னர் கிடைத்தது. வழக்கமான மதியச் சாப்பாட்டு அரட்டை நேரம்…
“அண்ணா , நேற்று ஷைனி மேரேஜ் இன்விடேஷன் வந்துச்சு பார்த்தியா?”
“இல்லியே, அப்படியா நல்ல விஷயம் தானே”
“அப்படியா? அதெப்படி…..? ஆச்சரியமாய் கேட்டாள் அனிக்கா…
“ஏன் உனக்கு எதுக்கு இவ்வளவு ஆச்சரியம்?’ கேட்டது ரூபன்.
“உங்க மேல அவங்களுக்கு இன்ரெஸ்ட் இருந்துச்சில்ல…..” மனதில் இருந்தது வந்தே விட்டது அனிக்காவின் வாயிலிருந்து……
ஜீவனுக்கு அனிக்கா இப்படிக் கேட்டதில் ஆச்சரியமே பிறர் பர்சனல் விஷயத்தில் அவ்வளவாய் ஆர்வம் காட்டாதவள் ரூபன் விஷயத்தை இவ்வளவாய் கவனித்திருக்கிறாளே? என்கிற எண்ணம் தான்.
ஸ்கூலில் மற்ரவர்கள் குறித்து வம்பு பேசுகிற பெண்களிடம் பேசாமல் அவள் ஒதுங்கி நிற்பதை அவன் பார்த்திருக்கிறான். எப்போதிருந்து இவள் இப்படி மாறினாள்? நாம் தான் சில நாட்களாக அவளைக் கவனிக்காமல் இருந்து விட்டோமோ?
அவள் கேட்பதற்காகவே காத்திருந்தவன் போல ரூபனும் கடகடவென ஒப்பிக்க ஆரம்பித்தான்.