“பில்லி எங்க இருக்க” போனில் சித்தார்த் அழைக்கவும் லைப்ரரியில் இருந்து வெளியில் வந்தாள் அபூர்வா.
“நான் எய்ம்ஸ்ல இருக்கேன். கொஞ்சம் ரெபரன்ஸ் தேவைப்பட்டது. முடிச்சிட்டேன். ஹாஸ்டல் போய் ட்ரஸ் பேக் செய்து எடுத்துட்டு வரேன் சித்து”
“சரி நான் அங்க வரேன்” சொன்னவன் அவள் லைப்ரரியில் இருந்து ஹாஸ்டல் வருவதற்குள் அங்கு வந்து சேர்ந்தான்.
அதிகாலையில் லக்ஷ்மியை ஏர்போர்ட் கொண்டு விட சென்ற சித்தார்த் முக்கிய வேலை இருக்கு வர நேரமாகும் என்று குறிப்பு எழுதி வைத்திருந்தான்.
“நேரமாகும்ன்னு சொன்ன. அதுக்குள்ள வந்துட்ட”
“உன்கிட்ட முக்கியமா கொஞ்சம் பேசணும்”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
“வீட்டுக்கு போகலாமா. நான் போய் ட்ரஸ் எல்லாம் பேக் செய்துட்டு வரேன் சித்து. சரி நீ சாப்பிட்டியா. இரு மெஸ் திறந்திருக்கான்னு பார்க்கிறேன். இல்லைனா நெஸ்கபே போலாமா”
“அபி. இப்போவே பேசணும். அங்க உக்காரலாம் வா” அந்த ஹாஸ்டல் வளாகத்தில் வண்ண மலர்கள் நிறைந்த புல்வெளியில் போடப்பட்டிருந்த பெஞ்சை காட்டவும் அவள் அவனோடு சென்று அங்கே அமர்ந்தாள்.
காலை ஒன்பது மணி என்பதால் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவிகள் அவசர அவசரமாக கல்லூரி சென்று கொண்டிருந்தனர்.
பொதுவாக எதாவது ஜாலியாக கமன்ட் செய்தும் சித்தார்த் எதையும் கவனிக்காமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.
“சித்து...என்னாச்சு” அவனது சிந்தனையைக் கலைத்தாள் அபூர்வா
அவளது கரத்தினை தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.
“பில்லி”
“என்ன சித்து. ஏன் ஒரு மாதிரி இருக்க. என்னாச்சுடா”
“இத்தனை வருஷமா நம்ம பந்தத்துக்கு ஒரு பேர் தேவைப்படல. யாருக்கும் எந்த விளக்கமும் சொல்லணும்னு அவசியம் எற்படல. ஏன் நாமலே அதை பத்தி யோசிச்சதும் இல்ல. இட் வாஸ் அண்டர்ஸ்டுட் பியான்ட் வோர்ட்ஸ்”
“.....”
“இப்போ என்னால முழுமையா எதையும் சொல்ல முடியாது. ஆனா....” மேற்கொண்டு அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பினான்.
முன்தினம் யேசுதாஸ் அவனிடம் கேள்வி கேட்டதில் இருந்து அவன் மனம் மிகுந்த குழப்பம் அடைந்தது.
“அவர் கேட்டதில் தவறேதும் இல்லை. ஒரு வகையில் சரியும் கூட. ஆனால் ஹொவ் டு சால்வ் இட்” எப்படி யோசித்தும் அவனுக்கு விடை தெரியவில்லை.
அபூர்வாவிடம் முழுவதையும் சொல்லவும் முடியாது. ஆனால் அவளைத் தவிர வேறு யாரும் அவன் சஞ்சலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கவும் முடியாது.
அந்த மனநிலையில் மேற்கொண்டு எதுவும் சிந்திக்க திராணியற்று அவளிடம் அடைக்கலம் புகுந்தான் சித்தார்த்.
தனது கைகளைப் பிடித்திருந்த அவன் கரங்களை இறுகப் பற்றினாள் அபூர்வா. அவன் கண்களை சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள்.
பின் மெல்ல அவள் கூறியதைக் கேட்ட சித்தார்த் அதிர்ச்சியோ ஆச்சரியமோ அடையவில்லை. .
அதன் பின் அவனது செல்வாக்கினை பயன்படுத்தி காரியங்களை மளமளவென செய்து முடித்து அவளை வீட்டில் விட்டு விட்டு யேசுதாஸ்ஸை தொடர்பு கொண்டான்.
“எல்லாம் எடுத்து வச்சுட்டியா” அவள் ஜெனீவா செல்ல பேக் செய்து கொண்டிருந்த போது வீட்டிற்கு திரும்பிய சித்தார்த்தின் முகம் தெளிந்து காணப்பட உள்ளுக்குள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் அபூர்வா.
காலையில் அவன் சோர்ந்து இருந்தது அவள் மனதில் ஆழமான வலியாக ஊடுருவியது.
“உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” தந்தை பாடுவது தான் அப்போது அவள் காதில் ஒலித்தது.
“சித்து இந்த மாதிரி இதுக்கு முன் எப்போவுமே இருந்தது இல்ல. எதையோ இழக்கக் கூடாது ஆனா இழந்திருவோமோ, எதையோ நிறைவேற்றனும் ஆனா நிறைவேற்ற முடியாம போயிருவோமோ அப்படின்னு தவிக்கிறான். சொல்ல முடியாத ஒண்ணுன்னு வேற சொல்றான். ஹி நீட்ஸ் எ நேம். டாடி நான் இப்போ என்ன செய்யணும்” கண் மூடி தனது தந்தையைத் தான் கேட்டாள்.
“சித்து உன்ன பத்திரமா பாத்துக்குவான் பூக்குட்டி” விஜயகுமார் இறுதியாக அவளிடம் சொன்ன இந்த வார்த்தைகள் அவரின் குரலாய் அவளின் ஆழ் மனதில் ஒலித்தது.
தான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்தவள் அவனிடம் அதைச் சொன்னாள்.