'எல்லாம் சரி ஆகிடும் பரத்... கல்யாணத்துக்கு அப்புறம்..' அவள் கொஞ்சம் இறங்கிய குரலில் சொல்ல..
பதில் மொழி சொல்லவில்லை அவன். 'நீ என் தேவதையடி கண்ணம்மா.. சரியாகிவிடும்... நம் திருமணதிற்கு பிறகு எல்லாம் சரியாகிவிடும்..' சொல்லிக்கொண்டான் தனக்குள்ளே..
இன்னும் இரண்டு நாட்கள் கடந்திருந்தன.
அபர்ணாவின் வீட்டில் சொந்தங்கள் பந்தங்கள் கூட ஆரம்பித்திருந்தன. கிண்டல்களும், கேலிகளும், சிரிப்புகளும் சந்தோஷங்களும் எங்கும் நிறைந்திருந்தன.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
குறித்து வைத்திருந்த திருமண நாளுக்கு முதல் நாள் காலை!!!
தங்களது திட்டத்தை அழகாக செயல் படுத்தி இருந்தனர் பரத்தும், அஸ்வினியும். அருண் அபர்ணாவை தொடர்பு கொள்ள முடியாத படி அவளது கைப்பேசியை தனது வசம் வைத்துக்கொண்டாள் அஸ்வினி.
நினைத்தை சரியாக நடத்திவிட்டான் பரத். ஆனால் அடி மனதில் ஒரு உறுத்தல் மட்டும் அவனை படாத பாடு படுத்திக்கொண்டே இருந்தது.
'எப்படி நிமிர்ந்து பார்க்க போகிறேன் என் கண்ணம்மாவை!!!'
அன்று மாலை திருமண வரவேற்பு ஏற்பாடு ஆகியிருக்க, அன்று மதியம் பெண் வீட்டார் மண்டபத்தை அடைந்திருந்தனர்.
விஷ்வா மாலையில் வருவதாக சொல்லி இருந்தான். காலை முதலே பரத்துடனே இருந்தாள் அஸ்வினி. மதிய நேரத்தில் அவனுடனே மண்டபத்தை அடைந்தாள் அவள்.
'வாங்க மாப்பிள்ளை சார்..' என்றாள் உள்ளே நுழையும் முன். 'நியாயமா ஆரத்தி எடுத்து கூப்பிடணும். ஆனா இப்போ அதுக்கு வழியில்லை. ஸோ... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வலது காலை எடுத்து வைச்சு உள்ளே வாங்க அவள் சிரிப்புடன் ரகசிய குரலில் சொல்ல,
பெரிய புன்னகை எல்லாம் இல்லை அவனிடத்தில்!!! 'நான் ஏமாற்றுகிறேன்!!! என் கண்ணம்மாவை ஏமாற்றுகிறேன் என கூவிக்கொண்டே இருந்தது அவன் உள்ளம்.
'வாங்க உங்க ஆளை... பார்க்கலாம்..' சற்றே தயங்கி நின்றவனை கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு அபர்ணாவின் அறைக்குள் நுழைந்தாள் அஸ்வினி.
அங்கே அபர்ணாவின் கைகளில் மருதாணி கோலங்கள் வரைந்துக்கொண்டிருந்தனர் தோழிகள். அந்த தோழிகளுடன் இருந்தாள் அபர்ணாவின் உயிர் தோழி ப்ரியாவும்!!!
அன்று நகைக்கடையில் பார்த்த பிறகு இன்றுதான் பரத் பார்க்கிறான் அபர்ணாவை!!! மிக எளிமையான அலங்காரத்தில் திருமண களையில் இன்னுமாக மெருகேறிய முகத்துடன் அபர்ணா!!!
'ஹாய்.. கல்யாணபொண்ணு குட் ஆஃப்டர் நூன்..' இது அஸ்வினியின் உற்சாக குரல்.
பதிலுக்கு சின்னதாக புன்னகைத்து விட்டு விழி நிமிர்த்தி பரத்தை ஏறிட்டாள் கல்யாண பெண்!!
ம்ஹூம்!!! இயலவில்லை!!! அவளை நேராக பார்க்க முடியவேயில்லை அவனால்!!! அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் வெகு இயல்பாக தனது கைப்பேசிக்குள் நுழைத்துக்கொண்டான் பார்வையை.
'ஹேய்... இந்த மெஹந்தி டிசைனோட சேர்த்து மாப்பிள்ளை பேரையும் கையிலே எழுதிடுவோமா??? அவர் பேரென்ன அருண்தானே..' ஒரு தோழி வெகு இயல்பாக கேட்க
'ஹேய்... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அதெல்லாம் ஓல்ட் ஃபேஷன்' அவசரமாக பாய்ந்தாள் அஸ்வினி.
'இருங்க அபர்ணா பதில் சொல்லட்டும். அவ இஷ்டம்தானே..' என்றாள் அந்த தோழி விடாமல்.
'நான்தான் சொல்றேன் இல்ல வேண்டாம்னு. கேட்க மாட்டீங்களா???' அஸ்வினி சுள்ளென வெடிக்க அபர்ணாவின் பார்வை பரத்திடமிருந்து அஸ்வினியிடம் தாவியது. எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள் அஸ்வினி.
'நீ என்ன சொல்றே அபர்ணா..' தோழி அபர்ணாவை கேட்க
'அதுதான் வேண்டாம்னு சொல்றாங்களே.. வேண்டாம் விடு...' நிதானமான குரலில் சொன்னாள் அபர்ணா.
அவள் பார்வை மறுபடியும் பரத்திடம் வர சலனமே இல்லை பரத்திடம். அவன் பார்வை கைப்பேசிக்குள் ஆழமாய். இன்னும் ஆழமாய்!!!
அடுத்த ஒரு மணி நேரம் கடந்திருக்க அஷோக் மணமேடையில் மணமக்களின் பெயரை ஒட்டிக்கொண்டிருந்தான்.
'நான் ஹெல்ப் பண்ணட்டுமா அஷோக்..' ஏதோ ஒரு உந்துதலில் அருகில் அவனருகில் வந்து விட்டான் பரத்.
அபர்ணாவின் பெயரை அழகாய் ஒட்டியாகி விட்டது!!! 'அபர்ணா வெட்ஸ் ...... ' அருண் பெயரை அங்கே பதிக்க வேண்டும்!!!
மனசாட்சி ஒரு புறம் அழுத்திக்கொண்டிருக்க, விரல்கள் நடுங்குவது போன்றதொரு உணர்வில் 'ஏ' என்ற எழுத்தை அவன் கையில் எடுத்துக்கொண்டு திரும்ப அங்கே அவன் பின்னால் அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் அபர்ணா!!!
நான்கு கண்களின் திடீர் சங்கமம்!!! சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை அவன்!!!! மொத்தமாக தடுமாறிப்போனான் பரத்!!! ஆனாலும் விழி அகற்ற முடியவில்லை அவனால். தாறுமாறாக துடிக்கிறது அவன் இதயம். மெது மெதுவாக அவள் கண்களில் சேருகிறது கண்ணீர்!!!