25. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

“Chillzee Readers அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! பெண்ணாய் பிறந்ததை பெருமையாக உணர்கிறேன்! என்னை பெருமையாக உணர வைத்தது அப்பா, கணவன், மகன் என கடவுள் கொடுத்த விலை மதிக்க முடியாத உறவுகள் தான்! இதே போல பெண்களின் உணர்வுகளை மதிக்கும் மனம் உலகின் ஒவ்வொரு ஆணிற்கும் வர வேண்டும் என்ற வேண்டுதலோடு இந்த அப்டேட்டை கொடுக்கிறேன்"
புதிர் 25
புதிரே! உயிர்ப் புதிரே!
என் இளமை குழப்பும் புதிரே!
“கங்கிராட்ஸ்!!!!”
பில்லியன் டாலர் ஒப்பந்தம் தன் கண் முன்னே கையெழுத்தாவதைப் பார்த்த பூரிப்பில் அருகே இருந்த ஆர்யமனிடம் மனம் நிறைந்த புன்னகையுடன் சொன்னாள் கோகிலா!
ஆம், கோகிலாவை படிகளில் ஏற விடாது, லிஃப்ட்டில் தன்னுடன் மீட்டிங்கிற்கே கூட்டி வந்தவன்... யாரும் அவளைப் பற்றி கேள்வி எழுப்பும் முன்னே,
“பேப்பர் ஒர்க் அவங்க செய்தது தானே! ஏதாவது அமென்ட்மென்ட் இருந்தா, செய்து கொடுக்க வசதியா இருக்கும்.”
என்று சொல்லி தன்னருகே அமர்த்தியும் இருந்தான். அவனுக்கு மறுப்பு சொல்லவில்லை என்றாலும், சீனியர்கள் இருக்கும் பொழுது, அவளை அங்கே வந்தது மீட்டிங் குழுவில் இருந்தவர்களுக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை தான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ரேவதி சிவாவின் "வரத்தினால் பெற்ற சாபம்" - சமூக பார்வைக் கொண்ட தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாக விதிமுறைகளில் மாற்றங்கள் தேவை என்றதும், சொற்ப நிமிடங்களில் மடமடவென்று செய்து கொடுத்த கோகிலா, ஆர்யமனின் செயலை அத்தனை பேருக்கும் நியாயப்படுத்தி்னாள்! தன்னால் அவனுக்கு ஒரு தலைகுனிவு வந்து விடக் கூடாது என்ற உந்துதலும் அவளை இப்படி செயல்பட வைத்தது எனலாம்!
“ரிலாக்ஸ்டா பண்ணு!”, அப்பொழுதும் அவன் அக்கறை வார்த்தைகள் செவியைத் தீண்டி உருக வைத்தது அவளை!
திருத்தம் செய்யப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை மனதிற்குள் ஜெபித்துக் கொண்டிருந்தவள், அது நடந்தேறியதும் வேகமாக அவனுக்கு வாழ்த்து தெரிவிக்கவும்,
அவளைப் பார்த்தவன்,
“பப்பி இருந்தா சக்சஸ் தான்!”, என்றான் வெகு நிதானமாக! அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம்!
அந்த வெற்றியை விட அவன் பப்பியை உச்சரிக்கும் பொழுது மொத்த முகமும் பிரகாசிப்பதை கண்ட கோகிலா மேலும் மலர்ந்து ஏதோ பேச வர... அதற்குள் யாரோ இவனை அழைக்க அதன் பின் இருவரும் பேசுவதற்கு சந்தர்ப்பம் அமையவில்லை!
ஒப்பந்தம் கையெழுத்தானதும், அடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து விட்டு குழுவினர் கலைந்தனர்.
வெளிநாட்டு பிரதிநிதிகளை வழி அனுப்பும் பொறுப்பை மார்க்கெட்டிங் ஆபிசரிடம் கொடுத்து விட்டு கிளம்பிய ஆர்யமனுக்கு தலை வலித்தது!
காலையில் விரதம்! மதியம் இலை தழை உணவு! அதையும் பிஸ்னஸ் பேசிக் கொண்டே சரியாக சாப்பிடவில்லை! அடங்கா பசி தலை வலியை உண்டு செய்திருந்தது!
தன் அலைபேசி வழியாக டீயை ஆர்டர் செய்தவனுக்கு அஞ்சனாவின் நினைவு!
‘இந்த நேரம் டீ குடிச்சு இருப்பாளா?’
மணியைப் பார்த்தான். இப்படி எல்லாம் யோசனை வர வாய்ப்பே கொடுக்க மாட்டாள் அவள்! ஒரு தும்மல் வந்தால் கூட அவனுக்கு அழைத்து சொல்லி விடுவாள்! அவளை சமாளிக்க தனி அலைபேசியே வைத்திருக்கிறான்.
மீட்டிங்கிலோ... பிஸியாக இருக்கும் சமயங்களில் மட்டும் தான் அதை ஆஃப் செய்து வைப்பான்.
அவன் அலைபேசியை ஆஃப் செய்து இருந்தாலும், அஞ்சனாவின் அன்றைய அப்டேட் சில நிமிடத்திற்கு ஒரு முறை போட்டோவாகவோ.. வாய்ஸ் மெசேஜாக அவனுக்கு வந்து சேர்ந்து விடும்.
அவள் வைக்கும் ஒரே கண்டிஷன் வீடு திரும்பவதற்குள் அதை எல்லாம் அவன் அறிந்து தெளிந்திருக்க வேண்டும்! வீட்டிற்கு சென்றதும் அவள் வைக்கும் “quiz” ற்கு தயாராக செல்லும் வழியில் ஹெட்போன் போட்டு எல்லா வாய்ஸ் மெசேஜ்களையும் கேட்டுக் கொண்டே போவான்!
இது போல நாள் முழுதும் மீட்டிங்கில் கழிந்த நாட்களும் உண்டு. ஆனால், மனது கேட்காது! ஒரு முறையாவது அவளிடம் பேசி விடுவான்.
இன்று இதுவரை அதை செய்யவே இல்லை! தன் வெற்றியைச் தன்னை விடவும் அதிகமாக கொண்டாடப் போவது அவள் தான்! நினைத்த மாத்திரத்தில் அவளிடம் பேசி விட எழுந்த தவிப்பை... அதை விட பெரிதாய் எழுந்த குற்ற உணர்வு செய்ய விடாமல் தடுத்தது!
‘எவ்வளவு பெரிய விஷயத்தை அவளிடம் மறைக்கிறே’, என்று குற்றம் சாட்டிய மனதை எதிர் கொள்ள முடியாமல்..
கழுத்தை இறுக்கி இருந்த டையை சற்று தளர்த்தி... நெடிய மூச்சொன்றை விட்டு தன் சேரில் சாய்ந்து கண் மூட...
மெல்ல மெல்ல அவன் சுவாசத்தில் கலந்திருந்த லாவண்டர் வாசம் அஞ்சனாவை பற்றிய யோசனைகளை பின்னுக்குத் தள்ள.... அவன் கை தானாக பாக்கெட்டில் இருந்த கடிதத்தை எடுத்து பிரித்தது...
இமைகளை பிரித்தவனின்... கண் முன்னே விரிந்தது முத்து முத்தாய் கொட்டிக் கிடந்த அவனை காதலில் தள்ளிய அழகு! தமிழின் அழகு! - உயிர், மெய், உயிர்மெய் என!