“இவன் எதுக்கு இப்போ இப்படி ரியாக்ஷன் தர்றான்?” என ப்ரியா குழம்பியிருக்க, “பொண்ணு வந்துருச்சு” என எங்கிருந்தோ கேட்டது. அப்போதுதான் அந்த இடத்தை கவனித்தாள் ப்ரியா. அவர்கள் நின்றிருந்தது, ப்ரியாவின் வீட்டின் கேட்டிற்கு இரு அடிகள் முன்பு. அவள் வீட்டில் இருந்த அனைவரும் வாசலில் நின்றிருந்தனர்.
“ப்ரனிஷ், எங்கேடா போய்ட்ட?” எனக் கேட்டபடி அவனிடம் வர அடியெடுத்து வைத்த யாதவ், அவன் பின்னால் நின்ற ப்ரியாவைக் கண்டு குழப்பத்துடன் நின்றான்.
“அடப்பாவி!! என்னை வீட்டுக்கே கொண்டுவந்துட்டியா… உன்னை!!” என பல்லைக் கடித்தாள் ப்ரியா.
அதே நேரம் “ப்ரியா!!” என்ற ஒரு கோபக்குரல் இருவரது செவிகளையும் வந்தடைந்தது. திடுக்கிட்டு அவள் சத்தம் வந்த இடம் நோக்கித் திரும்ப, அங்கே ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தார் ப்ரியாவின் தந்தை.
தந்தையைக் கண்ட ப்ரியாவின் நிலைமை சிங்கத்தின் முன்பு நிற்கும் ஆட்டைப் போல இருந்தது. அவரிடம் இருந்து தன்னை மறைத்துக்கொள்வதற்காக ப்ரனிஷின் பின் தஞ்சமடைந்தாள் அவள். அவளது அந்த செய்கையே அவரை சினமடையச் செய்ய, “இங்கே வா” என அழைத்தார்.
அவரது குரலும் அதில் இருந்த உணர்ச்சியும் அவளை ப்ரனிஷின் பின்னிருந்து வெளிவரச் செய்யவில்லை. சாப்பாடு ஊட்ட வரும் தாயிடம் இருந்து மறைந்து கொள்ள எவ்வாறு குழந்தை சோஃபாவின் பின் மறைந்து நிற்குமோ அதே போல், ப்ரனிஷை தன்னை அப்போது தந்தையிடம் இருந்து மறைக்கும் ஒன்றாகவே கண்டாள். தான் அர்த்தராத்திரியில் ஒரு ஆடவனின் பின் நிற்கிறோம், அதுவும் தந்தையின் முன். இது எதுவும் அவள் கருத்தில் பதியவில்லை. அந்த சமயத்தில் அவளுக்குத் தெரிந்தது தந்தை மட்டுமே. அங்கே போனால் திட்டு உறுதி. அவரைப் பார்த்தால் அடியும் விழுவது உறுதி. அந்த எண்ணமே அவளை ப்ரனிஷின் பின்னிருந்து நகரவிடாமல் செய்தது. ப்ரனிஷ் செல்லச் சொல்லியும் முடியாதென மறுத்து அவன் பின்பே நின்றாள்
இதற்குள் உள்ளிருந்து மற்றவர்களும் வர, என்ன செய்வதென்று தவித்துத் தான் போனான் ப்ரனிஷ். அவனுக்கு இந்த நேரத்தில் ப்ரியாவை அவனுடன் பார்த்தால் ஏதேனும் தப்பாக எண்ணுவார்கள் எனத் தெரிந்தே இருந்தது. அவன் ஒன்றும் அந்த அளவுக்கு அறிவிலி இல்லையே!
அதற்குள், ப்ரியாவிற்கு நிச்சயம் செய்த சஞ்சயும் அவன் பெற்றோரும் உள் அறையில் இருந்து வர, தர்மசங்கடமான சூழ்நிலை நிலவியது அங்கே. ப்ரியா ப்ரனிஷின் பின் நிற்பதையும், அவள் கையில் இருந்த பையையும் கண்ட சஞ்சயின் தந்தையின் கண்கள் கூர்மையடைந்தது. சஞ்சயோ, ஒரு கோபத்துடன் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
கைலாசநாதனிடம் திரும்பிய அவர், “என்ன சம்பந்தி, உங்க பொண்ணு உங்ககிட்டே கூட சொல்லாம கூட மாப்பிள்ளை பார்த்துட்டா போல?” என்றார் இளக்காரமாக. அந்த வார்த்தைகளைக் கேட்ட கைலாசநாதன் தன் நெற்றிக்கண்ணைத் திறக்க ஆயத்தமாக, ப்ரியா விலக மாட்டாள் என்பதை அறிந்த ப்ரனிஷ், அவளது கையைப் பற்றி முன் நிறுத்தப் போனான்.
ஆனால், ப்ரியாவோ, தானே அவனை விலக்கி முன் வந்து நின்றாள். ‘இப்போவாவது சீரியஸ்னஸ் புரிஞ்சுதே இவளுக்கு’ என நினைத்து பெருமூச்சு விட்டான் ப்ரனிஷ். பாவம் அவன். அரை நொடிக்கும் முன் பயந்து நடுங்கியவள், இப்போது தைரியலட்சுமி தன்னுள் புகுந்துகொண்டதுபோல் நிற்பதற்குப் பின்னால் ஏதேனும் சூது இருக்கும் என்று அறியவில்லை.
அதனாலேயே, தன்னை கூறு போடும் சத்தியுள்ள அந்த சொற்களை ப்ரியா கூறப்போகிறாள் என அறியாமல் நின்றிருந்தான் ப்ரனிஷ்.
ப்ரனிஷின் முன் நின்ற ப்ரியா, ஒரு முறை அங்கிருந்த அனைவரையும் கூர்ந்து பார்த்தாள். கோபத்தைக் குத்தகைக்கு எடுத்ததுபோல் இருந்த அவள் தந்தையின் அருகில் பதட்டத்துடன் நின்றிருந்தார் அவள் தாய். அவர்களின் பின்னே அவளது பெரியப்பா, பெரியம்மா, அருள், யாதவ், வர்ஷினி போன்றவர்கள்; அவர்களோடு, இன்னும் சில உறவினர்கள். கைலாசநாதனையும் பவானியையும் விட்டு சிறிது தள்ளி நின்றிருந்தது சஞ்சயின் குடும்பம். அவர்களிடமிருந்து பார்வையை விலக்கிய ப்ரியா, தன் பின்னே இருந்த ப்ரனிஷை நோக்கினாள். இங்கே என்ன நடக்குமோ என கவலையுடன் இருந்தான் ப்ரனிஷ்.
“என்னை மன்னிச்சுடு ப்ரனிஷ். எனக்கு வேறு வழி தெரியலை” என மானசீகமாக மன்னிப்பு வேண்டியவள், ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டு, எதிரில் இருந்த அந்த கூட்டத்தை நோக்கிக் கூறினாள். “எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு இதில் விருப்பமில்லை. நான் ப்ரனிஷைத் தான் விரும்புறேன்”
ப்ரியாவின் வார்த்தைகள் சொல்லம்புகளாக உருமாறித் தாக்க, அந்த இடத்தில் ஒருமுறை இறந்தே போனான் ப்ரனிஷ், அங்கிருந்தவர்களின் பார்வைகளால். “இத்தனை நாளா எங்ககூட இதை மனசுல வெச்சுட்டுதான் பழகினாயா?” எனக் கேட்காமல் கேட்டது அவர்கள் கண்கள்.
“இல்லை… இவள் பொய் சொல்றா” என சத்தமாஅக உரைத்தான் ப்ரனிஷ்.