அதுக்கு எதற்கும் ஒரு வார காலம் எனக்கு தேவை, பேசாம டிஸ்சார்ஜ் ஆனதும் அனியை இங்கே கொண்டு விட்டுற சொல்லுங்க. நான் அதுக்கப்புறமா செய்ய வேண்டியது என்னன்னு பார்க்கிறேன். ஒரு வாரம் முடிஞ்சதும் பார்க்கலாம் என பட்டுக் கத்தரித்தார் போல பேசவும் அன்னையையும் அழைத்துக் கொண்டு அமைதியாக அத்தையிடம் விடைப் பெற்று தீபன் கீழறைக்கு வந்தான்.
ராபினை கையில் தூக்கிக் கொண்டவன் மனைவியோடு புறப்பட விழைந்தான். அந்த வீட்டில் அப்போது உற்சாகமாக இருந்த ஒரே ஒரு குட்டி ஜீவனான ஹனி மட்டும் டாட்டாக் காட்டி அவர்களுக்கு விடையளித்தாள்.
அதன் பின்னர் கிறிஸ்-ம் தாமஸ்-ம் எவ்வளவோ கூறியும் ரூபனுடைய பிடிவாதமே வென்றது. அனிக்காவை தன்னுடைய வீட்டிற்கே அதுவும் தன்னுடைய அறைக்கே கூட்டி வந்திருந்தான். அவளுக்கு தேவையான அனைத்தையும் பார்த்துக் கொண்டான். அக்கம் பக்கத்தினர் யாருக்கும் எதுவும் விபரம் தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.
முதலில் பேச்சுக் கொடுக்காமல் தவிர்த்து வந்த தாமஸ் ஒரு வாரம் கழிந்ததும் ரூபன் கூறியவாறு அனைத்தையும் செய்ய சம்மதித்தார். உடல் நலக் குறைவினால் , மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருந்த அனிக்கா உறக்கமும் விழிப்புமாக நாட்களைக் கடந்திருக்க, இந்திராவின் கவனிப்பில் ஓரளவு தேறியிருந்தாள்.
அதுவரைப் பதில் கொடுக்காது இழுத்தடித்துக் கொண்டிருந்த தாமஸ், தன் வீட்டினரையும் அனிக்காவைப் பார்க்க அனுமதித்து இருக்கவில்லை. அவரது சம்மதம் தெரிந்த பின்னரே நிச்சயத்திற்கான உடைகள் எடுப்பதற்காக சாராவையும், பிரபாவையும் அனுப்பி வைத்தார்.
ஏறத்தாழ ஒரு வாரம் கழித்து நிச்சயத்திற்கான உடைகள் எடுப்பதற்காக இந்திராவுடன் சேர்ந்து செல்ல அங்கு வந்திருந்த அம்மாவையும்,அண்ணியையும், ஹனியையும் பார்த்த அனிக்கா அழுது கரைந்தாள். அவளைத் தேற்றவே வெகு நேரமானது. இன்னமும் அண்ணனையும், அப்பாவையும் பார்க்காத ஏக்கம் அவளில் இருந்தது.
அவர்கள் தன் மீது கோபமாகவும் வெறுப்பாகவும் இருப்பார்கள் என்றெண்ணி அவளுக்கு மிகுந்த மன வேதனையாக இருந்தது. அதனை விட அதிகமாக பாதித்தது ரூபனின் ஒதுக்கம் தான்.
அவனறையில் அவன் வீட்டில் தான் அவள் இருக்கின்றாள். ஆனால், அவன் அவளிடம் இதுவரை பேசவில்லை. பார்த்து பார்த்து அவளுக்காக ஒவ்வொன்றாகச் செய்கிறான். அவளுக்கான உடைகள், மருந்து மாத்திரைகள், ஹாஸ்பிடல் கூட்டிச் சென்று அவளுடைய தற்போதைய உடல் நிலைப் பற்றிக் கேட்பது என்று ஒன்றிலும் குறை வைப்பதில்லை. ஆனால், அவளும் வித விதமாக முயற்சி செய்கிறாள் தான் இது வரை அவளிடம் தானாக வந்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. தானாக பேசினாலும் முகத்தைக் கூட பார்க்காமல் பதில் சொல்லி விட்டு நகர்ந்து விடுகின்றான்.
என்னச் செய்து இவனைப் பேச வைப்பது? என்றெண்ணியவளாக பகல் முழுக்க தூங்கி எழுந்ததில் நடு ராத்திரி தூக்கம் வராமல் எழுந்தவள் தண்ணீர் குடிக்க கிட்சென் பக்கம் சென்றாள்.
அங்கே இருட்டுக்குள் நடமாடுவது யார்? கிட்சன் ஸ்விட்சைத் தட்டி விட எழுந்த ஒளி வெளிச்சத்தில் எதிரில் தன்னை மோத வந்து தன்னை நிலைப் படுத்தி நிற்கும் உருவத்தைக் கவனிக்கலானாள்.
களைத்துச் சோர்ந்த நிலையிலும் கண்ணைக் கவருபவனாய் அவள் கண்ணாளன் அவளெதிரில் நின்றுக் கொண்டிருந்தான்.
நீ என் கண் அவன்
நீ என்னவன்.
உனைக் காணும் நாட்களுக்காய்
பல நூறு ஆண்டதனை
தவமாக கழித்திருந்தேனோ- இல்லை
பசி தூக்கம் தான் மறந்து
உனையே தினம் நினைந்து
உலகத்தின் கோ அவனிடம்
உனையே நிதம் யாசித்திருந்தேனோ?
நீ என் கண் அவன்
நீ என்னவன்.
பிரண்ட்ஸ், ஒரு வழியாக ஃபிளாஸ்பேக் நிறைவுப் பெற்று விட்டது என்பதை மிக மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். கதையின் போக்கில் எங்கேயாவது எதுவும் விடுபட்ட மாதிரி இருந்தால் தயைக் கூர்ந்து தெரிவியுங்கள். நன்றி.
தொடரும்
{kunena_discuss:970}