சட்டென சரயூவின் கையை பிடித்தவன், “இப்போ வரியா? இல்லையா சரயூ?”
கடுமையான கிரணின் கேள்வியில் அதிர்ந்தவள், “இது என்ன கேள்வி?” அதே கடுமையோடு பதில் கேள்வி கேட்டுவிட்டு தன்னோடு வந்தவர்களிடம், “வாங்க போலாம்” என்றாள்.
கிரணிடமிருந்து தன் கையை விடுவித்தவள், ஜெய்யிடம் கண்ணசைவில் விடைபெற்று நடந்தாள்.
அவளை கவனித்திருந்த கிரண், மீண்டும் ஜெய்யை கண்களால் எரித்தான்.
அதை அசட்டை செய்து தன் தோள்களை குலுக்கியவனின் இதழ்கள் எள்ளலோடு வலைந்தன.
இவனை இப்போவே அடித்து கொன்றால் என்ன?
அத்தனை பேரின் முன் ஜெய்யோடு அடிதடியில் இறங்கி தன்னை தாழ்த்தி கொள்வது முட்டாள் தனமென்று புத்தி எடுத்துரைக்க அவசரமாக அங்கிருந்து வெளியேறினான் கிரண்.
இஸ்கான் சென்றடைந்ததும் தன்னை போட்டியில் ஈடுபடுத்தி, ஜெய்யின் மீதான கோபத்தை மனதின் ஓரத்துக்கு தள்ளி வைத்தான்.
விஷ்ணுவின் பத்து அவதாரத்தையும் மிக அழகாக தங்களின் நடனத்தில் வெளிபடுத்தி எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு, போட்டியில் முதல் பரிசையும் பெற்றனர்.
அன்று மாலை, போட்டியில் பரிசு பெற்ற ஆனந்தத்தில் பதிந்திருந்த புகைப்படங்களை சரயூவும்
காலை இனிதாக நடந்து முடிந்திருந்த ஆதர்ஷ்-ப்ரியா திருமணத்தின் புகைபடங்களை ஜெய்யும் பகிர்ந்து கொண்டனர்.
கிரணும், சரயூவின் மீதான ஜெய்யின் காதலை பற்றி கௌதமிடம் சொல்லியிருந்தான்.
“விடு மச்சா! ஒரு அழகான பொண்ணு இருந்தா, நாலு பேரு ட்ரை பண்ணுவாங்கல்ல. அதே மாதிரிதா இந்த சஞ்சயும். நீ ரிலாக்ஸா இரு மச்சா!”
தலையை இட வலமாக ஆட்டிய கிரணின் முகம் இறுகியிருந்தது.
“இப்படி தலையாட்டினா என்னடா அர்த்தம்?”
“நீ சொன்ன மாதிரி இல்லை, இந்த சஞ்சய். மண்டபத்துல நான் அவனை முறைச்சேன்டா. பதிலுக்கு அவன் என்னை பார்த்து சிரிச்சான். அங்கேயே உண்டு இல்லைனு செய்திருக்கனும்”
“ஹேய்…என்னடா சொல்லுற?!” பதறினான் கௌதம்.
“எதுக்குடா இப்படி பதறுர? நீ, எனக்கு ஃப்ரெண்டா இல்லை அவனுக்கு ஃப்ரெண்டா?” என்று ஆக்ரோஷமான கிரண், நண்பனின் சட்டையை பிடித்திருந்தான்.
சட்டையிலிருந்து கிரணின் கையை எடுத்தவன், “அமைதியா இரு கிரண்! நீ கேட்டது, உனக்கே அபத்தமாயில்ல. கொஞ்ச நேரம், நான் சொல்றத பொறுமையா கேளு. உனக்கு தெரிஞ்ச வரைக்கும், சரயூ அவனை காதலிக்கலை. இந்த சமயத்துல நீ, சஞ்சயை அடிச்சி… அந்த பரிதாபத்துல சரயூக்கு அவன் மேல காதலை வரவச்சுடாத”
நட்புக்கு மதிப்பு கொடுக்கும் கௌதம், கிரணின் செயலை பெரிது படுத்தாமல் அவனுக்கு உதவினான். சூழ்நிலையை மிகவும் சாமர்த்தியமாக கையாள வேண்டுமென நண்பனுக்கு பல அறிவுரைகளை வழங்கினான்.
அதில் ஒன்று சஞ்சயிடம் பேசி பார்ப்பது.
அது நினைவுக்கு வரவும், உடனடியாக கைப்பேசியில் சஞ்சயை அழைத்தான்.
“ஹேலோ!”
“………..”
சஞ்சயிடம் பேசுவதற்காக அழைத்தாலும், இப்போது பேச பிடிக்காமல் மௌனமானான் கிரண்.
“ஹேலோ…. ஹேலோ! யாரு பேசறது?”
சஞ்சயின் குரலை கேட்டதும், அன்று, அவன் சரயூவிடம் பேசியதும், விழிகளில் வழிந்த காதலுடன் நின்றிருந்ததும் அநாவசியமாய் நினைவுக்கு வந்து இவன் கோபத்தை கிளறியது.
“கிரண் பேசுறே”
“………..”
இப்போது மௌனமாவது ஜெய்யின் முறையாயிற்று.
சுற்றிவலைக்காமல் விஷயத்துக்கு வந்தான் கிரண்.
“சரயூ, எனக்கு வேணும்! நீயா ஒதுங்கிட்டினா நல்லது”
யாரிடமிருந்து யார் விலகுவது?! கொதித்தெழுந்த கோபம் தலைக்கேற
“இல்லைனா…” என்று பல்லை கடித்தான் ஜெய்.
“இல்லைனாலும் ஒன்னும் பிரச்சனையில்லை. சரயூ, உன்னை காதலிக்கலைனு எனக்கு நல்லாவே தெரியும்! அவளை எப்படி என் பக்கம் திருப்பனும்னு, அதை விட நல்லா தெரியும்” ஆணவமாக வந்தது கிரணின் பதில்.
“முடிஞ்சா, முதலில் அதை செய்டா!” என்றான் எள்ளலாக.
ஜெய்யின் எள்ளலில் தூண்டிவிட பட்ட கிரண்
“என்னை சாதரணமா நினைக்காத… உன்னை இல்லாம செய்திடுவேன்டா” உரக்க கத்தியிருந்தான் கிரண்.