“உன்னால முடிஞ்சத செஞ்சுக்கோ” மிகவும் பொறுமையாக சொல்லியவன் கைப்பேசியை அணைத்திருந்தான்.
ஜெய் தன்னை அலட்சிய படுத்தி, அழைப்பு துண்டித்தது கிரணின் தன்மானத்தை சீண்டிவிட்டது. எரிமலைக் குழம்பாய் பொங்கிய ஆத்திரத்தில், கிரண், அருகிலிருந்த நிலைக் கண்ணாடியை தன் கையால் அடித்து நொறுக்கினான்.
கிரணின் அழைப்புக்கு பின், தன்னால் முடிந்த வரை ஜெய், அவனை தவிர்த்திருந்தான். அதையும் தாண்டி ஒருவரையொருவர் பார்த்து கொள்ள நேர்ந்தபோதெல்லாம், கிரண், தீப்பொறி பறக்கும் கோபப் பார்வையால் ஜெய்யை எரிப்பதும்.. எள்ளலை அள்ளி தெளிக்கும் பார்வையும், இதழோர வலைவைவும் கிரணுக்கு பரிசாக்குவதும் ஜெய்யின் வழக்கமானது.
அன்று வடிவுடன் கோவிலுக்கு சென்றதால், காலேஜுக்கு இரண்டு மணிநேரம் தாமதமானான் ஜெய். நண்பர்கள் இருக்குமிடத்தை தெரிந்து கொண்டு, அவர்களிடம் வந்தவனின் புருவங்கள் முடிச்சிட்டன.
சோகமே உருவமாய் அமர்ந்திருந்தாள் சரயூ. வேதிக்கின் முகமும் அதை பிரதிபலித்தது. ரூபினும் சௌம்யாவும் எதையோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தனர்.
‘கிரண் ஏதாவது? ச்சே அப்படி இருக்காது. அவனோட டார்கெட் நான்தா. அப்போ வேற என்ன?’
நண்பர் கூட்டத்தை நெருங்கியவன், “என்னாச்சு சரூ? ஏன் எல்லாரும் இப்படியிருக்கீங்க?”
புருவங்கள் உயர கேள்வியோடு நின்றிருந்த ஜெய்யை ஏறிட்ட அனைவரின் பார்வையும் சரயூவிடம் திரும்பியது.
அவர்களின் பார்வையைத் தொடர்ந்த ஜெய், சரயூவின் பதிலுக்காக காத்திருக்க.. அவளோ தன் வலது கையை நீட்டினாள்.
ஜெய் புரியாமல் முழிக்க, உதவினான் வேதிக் “இதுதா பிரச்சனை” என்று அவளின் கையைச் சுட்டினான்.
காயமெதுவும்…? அவளின் கையை ஆராய்ந்தான். வெய்யிலில் தகதகத்த பொன்னிறக் கரம், எப்போதும் போல் இவன் மனதைக் கவரத் தவறவில்லை.
இந்த கையை பிடித்து கொண்டு, கடைசி வரை அவளுக்கு துணை வர துடிக்கும், தன்னை ஏற்பாளா?! தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்பதும் சரியாக பிடிபடாத நிலை. இவர்களிடையே ஏற்பட்டிருந்த சிறு பிரிவுக்கு பிறகு, ஆதர்ஷ் திருமணத்தில், இவனுக்கான அவளின் தவிப்பு, ஏக்கம், வேல் விழிகளின் வேதனையும் காதலை பறைசாற்றியது. அதே சமயம் இன்றும் தோழி என்ற வட்டத்துக்குள் மட்டுமே நின்றிருக்கும், இவனிடமான அவளின் பழக்கங்கள்.
இப்படி இரு வேறு நிலைகளில் இருப்பவளை எண்ணி ஒருபுறம் கவலை எழுந்தாலும்.. மறுபுறம், அவளின் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் இவனுக்கான காதல், சில நேரங்களில் வெளிவந்து, இவன் மனதை வருடிச்செல்கிறது. இவன் அறிந்த அவளின் ஆழ்மனதை, அவள் அறிந்து கொள்ளவில்லையே?
அவளுக்கே அவளை தெரியாத இந்த நிலையில், முழுதாக மலர்ந்திராத தங்களின் காதலுக்கு எதிரியாகி இருக்கும் கிரணை நினைத்தவனுள் எல்லையில்லா கோபம் எழுந்ததது. சரயூ தன் பக்கம் இருக்கும் வரை, கிரணால் ஒன்றும் செய்ய முடியாது என்பது சர்வ நிச்சயம். அது கொடுத்த தைரியத்தில் தான் கிரணிடம் சவால் விட்டிருந்தான்.
அவள் தன் மீதான காதலை உணர வேண்டுமே! அதற்கான இவனின் முயற்சிகள் எல்லாவற்றயும் தோற்கடித்திருந்தாள் சரயூ.
வார்த்தகளில் சொல்லுவது காதல் என்பதையும் தாண்டி, அது உயிருக்குள் உணரப்படும் ஒன்று! அவளுக்குள் புதைந்திருக்கும் காதல், அவள் உயிரை தொடும் வரையில் பொறுமையாக இருக்க முடிவெடுத்தான் ஜெய்.
தன் முடிவினால் கொண்ட மௌனம் வாய்மொழிக்கு மட்டுமே; இவனின் காதலை விழிகளிலும் செயல்களிலும் உரக்க சொல்லுவதை வாடிக்கையாக்கியிருந்தான்.
தன்னுடைய செயல்களும் காதல் பார்வைகளும் மற்றவர்களுக்கு புரிந்தளவு கூட சரயூவிற்கு புரியாதது, இவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. இன்னும் என்ன செய்து, இவளை எப்படி சமாளிப்பது என்ற மலைப்பு, ஜெய்யிடமிருந்து பெருமூச்சாக வெளியேறியது.
“கைக்கு ஏதும் அடிபட்ட மாதிரி தெரியலையே சரூ” என்றவன் இன்னமும் அவளின் கையை ஆராய்ந்து கொண்ருந்தான்.
இவனுக்கு இது தெரியவில்லையா?
மனம் சோர்ந்தவள், “போ சஞ்சு!” கையை தன்னிடமாக திருப்பி கொண்டாள்.
‘இவள் முகம் எதுக்கு இப்படி மாறுது?’ தவிப்பு நிறைந்த குரலில், “சரூ! என்ன? என்னாச்சுனு சொன்னாதான தெரியும்”
“மக்கு மச்சா! சரயூ கையிலிருந்தத நீ பார்க்கலையா?” என்ற ரூபினை முறைத்தான் ஜெய்.
‘முறைக்கிறானே! நமக்கு தானே ஆப்பு வைப்பான்!’ அவனருகில் சென்று ரகசியமாக, “இப்படி சரயூவோட ஃபீலிங்க்ஸ் புரிஞ்சிக்காம இருந்தா, அவளுக்கு உன் மேல லவ் வராது மச்சா”