வசந்த் அமைதியாக நின்றான்.
"இந்த ஓவியத்துல கொஞ்சம் கூட உயிரோட்டம் இல்லை"
"நம்ம கம்பெனிக்கு வரஞ்சி கொடுக்கிற ஓவியர் தான் வரைஞ்சது"
"அது தெரியுது வசந்த். இப்போ நீ என்ன சொல்ல வர? அவரு வரஞ்சி கொடுத்தாரு அதை என்கிட்டே கொடுத்துட்ட. உனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைனு சொல்லவரியா?"
"அப்படி இல்லை சார்"
"வேற எப்படி? நான் என்ன எதிர்பாக்குறேன்னு ஓவியர் கிட்ட சொன்னியா?"
"சொன்னேன் சார். ஆனா அவரு, இப்படி இருந்தா தான் ஓவியம் நல்லாயிருக்கும்னு சொல்லுறாரு. நான் எவ்வளவோ சொன்னேன் அவர் கேக்கவே இல்லை"
"வசந்த். நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது. நாளை மறுநாள் நான் எதிர்பார்த்த ஓவியம் எனக்கு கிடைக்கணும்"
வசந்த்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
"உனக்கே தெரியும் விளம்பரத்துல.இந்த ஓவியம் எவ்வளவு முக்கியமானதுன்னு. அதை சாதாரணமா காட்டினா மக்கள் மனசுல பதியுமா? நான் சொன்னதை செய்"
"ஓகே சார்"
"ஜெஸ்ஸி உனக்கு கொடுத்த ஒர்க் முடிச்சிட்டியா இல்லை எக்ஸ்கியூஸ் கேக்க போறியா?"
"முடிச்சிட்டேன் சார்" என கூறி தனது கைப்பையில் இருந்து சில போட்டோக்களை எடுத்து அவரிடம் கொடுத்தாள் ஜெஸிகா.
"இந்த இடங்கள் எல்லாம் நம்ம சூட் பண்ண வசதியான இடம். முடிவு உங்க கையில"
"குட் நீ என்னை டிஸப்பாயிண்ட்மென்ட் பண்ணல" என வசந்தை ஒருமுறை முறைத்துவிட்டு லிப்டில் ஏறி மேல் மாடியை நோக்கி சென்றார் டைரக்டர்.
வசந்த் கவலை மிகுந்த மூச்சை வெளியேற்றினான். .
"கவலைப்படாத வசந்த். நீ ஓவியர்கிட்ட திரும்பவும் முயற்சி பண்ணு"
"அது வேஸ்ட். அந்த ஆளுக்கு நாம எதிர்பாக்குறது போல வரைய தெரியல"
"அப்போ என்ன செய்ய போற?"
"வேற ஒருத்தர வரைய சொல்ல போறேன்"
"யாரு?"
"அமேலியா"
"உனக்கென்ன பைத்தியமா?"
"அவ வரைஞ்சு ஓவியத்தை நீ பார்த்தது இல்லை. அதான் இப்படி பேசுற"
"வசந்த் இது ஒண்ணும் விளையாட்டு இல்லை"
"நானும் விளையாடலை ஜெஸ்ஸி. அவ இந்த ஓவியத்தை வரைஞ்சதுக்கு அப்புறம் நீ சொன்ன வார்த்தைகளை நினச்சு வருத்தப்படுவ"
"ஜெஸ்ஸி உன்னை டைரக்டர் வர சொன்னார்" என டைரக்டரின் அசிஸ்டன்ட் அழைத்தான்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் டைரக்டரின் அறையில் இருந்தாள் ஜெஸிகா.
"இந்த வீட்டு ஓனரைப் பார்த்து பேசி முடிச்சிடு ஜெஸ்ஸி" என ஒரு போட்டோவை ஜெஸ்ஸியின் முன்னால் நீட்டினார் டைரக்டர்.
அதை வாங்கிப் பார்த்த ஜெஸிகாவிற்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது.
அந்த புகைப்படத்தில் இருந்தது ஜானின் வீடு.
தொடரும்...
{kunena_discuss:983}