தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 02 - மது
AT THE END OF INFINITY
“ஹர்ஷவர்தன் சிங் ராத்தோர், பிரின்ஸ் ஆப் ராத்தோர் ராயல் ஃபேமிலி, ஜெய்பூர்”
இதைக் கேட்டதும் பாண்டே முகத்தில் அதிர்ச்சி, பயம், நடுக்கம் அனைத்தும் ஓர் கலவையாய் குடிகொண்டன.
ராஜஸ்தான் மண்ணில் இன்றும் பல ராஜபுத்ர அரச குடும்பங்கள் நிலைத்திருக்கின்றனர்.
ஜோத்பூர், மேவார், பிகானர், சித்தூர் சாம்ராஜ்ய வம்சாவளிகள் இன்றைய காலகட்டதிற்கேற்ப பல தொழில்களில் கால் பதித்து இருப்பினும் ராஜவம்சத்தின் பாரம்பரியத்தைப் போற்றி பாதுகாத்து வந்தனர்.
ஜோத்பூர் அரச வம்சாவளியை சேர்ந்த ராத்தோர் குடும்பத்தினர் பெரும்பாலோர் பல தலைமுறைகளாக ஜெய்பூரில் வசித்து வந்தமையால் அவர்கள் ராத்தோர் ராயல் ஃபேமிலி ஆப் ஜெய்பூர் என்றே குறிப்பிடப்பட்டனர்.
அரச குடும்பம் என்ற பாரம்பரியம் மட்டுமன்றி ராத்தோர் குடும்பத்தினரில் பலர் தேசிய அரசியலில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள். சிலர் தொழில் சாம்ராஜ்யத்தில் கொடி கட்டிப் பறப்பவர்கள்.
பாண்டே .ராத்தோர் ஆப் ஜெய்பூர் என்ற பெயரைக் கேட்டதும் அச்சம் கொண்டதன் காரணம் ஹர்ஷா குடும்பத்தினரின் அரசியல் பின்புலம் மற்றும் அதிகார பலத்தை அவர் நன்கு அறிந்திருந்தார்.
அதே சமயம் ஹர்ஷவர்தனோ இன்னமும் ஆச்சரியம் அகலாமல் ஹரிணியை விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“மிஸ்டர் பாண்டே. கொஞ்ச நேரத்தில் உங்க அலட்சியம் அதிகாரம் எல்லாமே இருந்த இடம் தெரியாம ஓடி போயிருச்சு பார்த்தீங்களா. இவ்வளவு தான் உங்க மதிப்பு. உங்களை விட பலம் குறைந்தவர்களிடம் நீங்க காட்டிய அதிகாரம் உங்களை விட பலம் நிறைந்தவர்கள் முன் எடுபடாமல் போயிருச்சு இல்லையா... இதுவே உங்களிடம் உண்மை இருந்திருந்தா உங்களிடம் நியாயம் இருந்திருந்தா அந்தக் கடவுளே வந்து முன்னாடி நின்னாலும் எந்த சலனமும் இல்லாமல் இருந்திருப்பீங்க. இல்லையா”
அவள் கூறக் கூற பாண்டே தலை கவிழ்ந்தார்.
“அந்த தொழிலாளிக்கு உரிய உதவித் தொகை குடுங்க. இது போல அசம்பாவிதம் உங்க ரிலேடிவ் ஃபேக்டரியில் ஏற்படாம இருக்க பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க சொல்லுங்க. இதை செய்து முடிக்கும் போது உங்கள் மேலேயே உங்களுக்கு நன்மதிப்பு ஏற்படும். உங்கள் சிரம் தானாகவே உயர்ந்திடும்”
மீண்டும் மீண்டும் மன்னிப்பு வேண்டி தனது சகாக்களை அழைத்து கொண்டு அங்கிருந்து விரைந்து புறப்பட்டார் பாண்டே.
மருத்துவமனை நிர்வாகியும் அவர்களை பின் தொடர ஹர்ஷாவை நோக்கித் திரும்பினாள் ஹரிணி.
“என்ன ஹரி. இவ்வளவு ஆச்சரியம்”
அவன் எதுவும் பதில் உரைக்கவில்லை.
அவன் கண்கள், அவன் முகம், அவன் மௌனம் அவளுக்கு ஆயிரமாயிரம் கதைகள் சொல்லின.
அவள் அவனது கரங்களை மெல்லப் பற்றினாள். அதற்காகவே காத்திருந்தது போல அவன் அவளது கரத்தினை இறுகப் பற்றிக் கொண்டான்.
“டைம் ஆச்சு நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வரேன்” அவன் கரத்தைப் பற்றியபடியே அவனையும் உடன் இழுத்துச் சென்றாள்.
“நான் முடிச்சிட்டேன் ஹனி. நீ ஒரு தரம் செக் செய்துட்டு வா. சர்ஜரி இன்னிக்கு பிரவீன் பிரணவ் அண்ட் டீம் செய்ய சொல்லிட்டேன். இட் வாஸ் அ லாங் டே. லெட்ஸ் கோ ஹோம்”
“சரி நான் முடிச்சிட்டு வரேன். வெயிட் செய்”
“இல்ல நான் முன்னாடி போறேன். நீ முடிச்சிட்டு வா”
ப்ரேக்ஃபாஸ்ட் செய்து வை என்று சொல்லலாம் என்று நினைத்தவள் அவனது மனநிலையை அறிந்து சொல்லாமல் விடுத்தாள். இன்று அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் அவன் மிகவும் நெகிழ்ந்திருந்தான்.
அந்த மருத்துவமனையின் வளாகத்திலேயே அங்கு பணிபுரிந்தவர்களுக்கு குடியிருப்பு வசதி செய்யப்பட்டிருந்தது. சொசைட்டி அபார்ட்மண்ட்ஸ் போல அங்கே பூங்கா, பொழுது போக்கு அம்சங்கள், விளையாட்டுக் கூடங்கள், சிறு காய்கறி பல்பொருள் அங்காடி என சகல வசதிகளும் இருந்தன.
இதற்கான ஓர் குறைந்த தொகையை பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்துக் கொண்டாலும் இத்தனை வசதிகள் கொண்ட குடியிருப்பு மற்றும் அருகிலேயே சிறந்த பள்ளி என இருந்தமையால் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடும் முனைப்போடும் பணிபுரிந்தனர்.
அந்த வாளகத்தில் சற்று தனியாக இரு காட்டேஜ் அமைப்பு வீடுகள் இருந்தன. தனித்தனி வீடுகள் என்ற போதிலும் இரு வீடுகளுக்கும் பொதுவான தோட்டம், லான், கார் பார்க்கிங் மற்றும் வீட்டை சுற்றி உயிர்வேலி அமைக்கப் பட்டிருந்தது.