இவள் அவனை அழைக்க எத்தனித்த நேரம் “ஹனி” என்றபடியே இவளை நோக்கித் திரும்பினான்.
“ஹனி”
“ஹ்ம்ம்”
“எனக்கு என்ன கேக்கணும்ன்னு தெரியல. என்ன தெரிஞ்சுக்கணும்ன்னும் புரியல. அது பாண்டே கிட்ட சொன்னியே”
அவள் புரிந்து கொண்டாள். அவன் எதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான் என்று அவளுக்குப் புரிந்து போனது.
“யூ ஹாவ் லிவ்ட் டூ இட் பை யுவர்செல்ஃப் பிரின்ஸ் ஹர்ஷவர்தன் சிங் ராத்தோர்” மிக மிக இனிமையான அழகான ஓர் புன்னகை அவள் இதழ்களில். இதைச் சொல்லும் போது அவள் முகம் பெருமையிலும் பூரிப்பிலும் மீண்டும் மீண்டும் முங்கி முங்கி குளித்து ஒளிர்ந்ததாய்.
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் அதன் பாவனையிலும் அவள் சொல்லிய அந்த ஒற்றைச் சொல்லிலும் மாலைச் சூரியன் மறைந்து போகவில்லையோ என்று எண்ணும் வண்ணம் பிரகாசம் கொண்டான்.
‘தவத்தை அவள் புரிந்து வரத்தை எனக்கு அளித்துக் கொண்டிருப்பவள். வேராய் அவள் இருந்து பூமாலையை எனக்கு சூட்டிக் கொண்டிருப்பவள். மழையாய் அவள் பொழிந்து என் செழிப்பில் மகிழ்ந்து போகிறவள். எனது கர்வம் இவள். எனது பெருமை இவள். இப்பிறவியின் எனது பயனும் இவளே’
அவன் மனதில் இக்கணம் தோன்றிய எண்ணங்களை வெளிபடுத்த அவன் வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்த போது அவனுக்குத் தெரிந்த அனைத்து மொழிகளும் ஒரு சேர பின் வாங்கின.
ஆனாலும் அவளுக்கு அவன் குரல் மீட்டும் ஒலியின் மொழி தேவைப்படவில்லை. அந்த விழிகளின் ஒளியே அவன் மனதின் எண்ணங்களை அவளுக்கு வாசித்துக் காட்டிவிட்டது.
இன்று இவளே எனது கர்வம் என்று ஆராதனை செய்பவன் தானா அன்று திமிர் பிடித்தவள் என்று நிந்தித்தான். இன்று இவளே எனது பெருமை என்று போற்றுபவன் தானா அன்று அலட்சியத்தை அவள் மீது தெளித்தான்.
முடிவிலியை நோக்கி ...
{kunena_discuss:1137}