தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 03 - மது
AT THE END OF INFINITY
பதினாறு ஆண்டுகளுக்கு முன்
“அவன் நிஜமாவே பிரின்ஸா கவி”
“அப்புறம் என்ன பொய்யாவா சொல்றேன். நார்த் பொண்ணுங்க பூராவும் இதே பேச்சா தான் இருக்காங்க”
“காலேஜ் ஸ்டார்ட் ஆகி த்ரீ மந்த்ஸ் ஆச்சே இப்போ எப்படி வந்து ஜாயின் செய்தான்” சங்கீதாவிற்கு பெருத்த சந்தேகம்.
“சங்கீ அவன் தில்லில இருந்து ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்திருக்கானாம். அங்க இருந்து சென்னைக்கு ஏன் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வரணுமோ தெரில”
“ஹ்ம்ம் இங்க எந்த பிரின்சஸ் இருக்கான்னு தேடி வந்திருக்கானோ” ரேவதி பெருமூச்சு ஒன்றை விட்டபடியே கன்னத்தில் கை வைத்து கனவுலகம் செல்ல
“நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம். நாளைக்கு அனாடமி அஸச்மென்ட் இருக்கே யாருக்கும் ஞாபகம் இல்ல போல” அந்த அறையின் சொந்தக்காரி ரஞ்சனி அங்கே கொட்டமடித்துக் கொண்டிருந்த தன் வகுப்புத் தோழிகளை எப்படி கிளப்புவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
சென்னையின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரி ஒன்றின் மாணவியர் விடுதியின் ஓர் அறையில் தான் இந்த அதி திவீர மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அன்று மாலையில் சாரலாய் சிணுங்கிய மழை சிறிது நேரம் அடை மழையென பூமியினை ஆலிங்கனம் செய்து முடித்து பூந்தூறலாய் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது.
மழையின் முத்தத்தில் சிலிர்த்து கொண்டிருந்தன அங்கிருந்த மகிழ மரத்தின் இலைகள்.
சிறிது நேரம் மழையிலும் அதன் அழகிலும் லயித்திருந்த ஹரிணி மெல்ல ஜன்னலோரம் சாய்ந்து அமர்ந்து கையில் இருந்த சிட்னி ஷெல்டனின் ‘நத்திங் லாஸ்ட்ஸ் ஃபார் எவர்’ நாவலில் மூழ்கிப் போயிருந்தாள்.
“ஹரிணிணிணி” சங்கீதா உரக்க அழைக்க மெல்ல நிமிர்ந்து அங்கிருந்த அனைவரையும் ஓர் புரியாத பார்வை பார்த்து வைத்தாள்.
“இவ எந்த கிரகத்துல இருந்துடி வந்திருக்கா. நாம எல்லாம் எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிகிட்டு இருக்கோம். எதையும் காதுல வாங்கிக்காம அவ பாட்டுக்கு நாவல் படிச்சிட்டு இருக்கா. எப்படி தான் இவளோட இருக்கியோ ரஞ்சு” ரேவதி அலுத்துக் கொள்ளவும் ஹரிணி என்ன ஆச்சு என்று சைகையிலேயே தன் அறைத்தோழி ரஞ்சனியிடம் கேட்டாள்.
“ஹரிணி அங்க என்ன ரஞ்சு கிட்ட சைன் லாங்குவேஜ் பேசிகிட்டு இருக்க. இப்போ நாங்க எல்லோரும் இங்க எதை பத்தி பேசிகிட்டு இருந்தோம்னு தெரியுமா உனக்கு”
அவர்கள் ஹர்ஷவர்தன் என்று புதிதாக சேர்ந்திருக்கும் பையனைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து இருந்தாள் ஹரிணி. வரும் போது ஆடிடோரியம்ல பார்த்தோமே அந்த பையன் தானோ என சிந்தனை வயப்பட்டாள்.
அன்று மாலையில் நூலகம் சென்று விட்டு திரும்பி வரும் போது சட சடவென பெரிய பெரிய நீர் சொட்டுகள் விழ அவசரமாக அருகில் இருந்த கல்லூரியின் பொன்விழா அரங்கத்தின் வாயிலில் தஞ்சம் புகுந்தாள்.
மழை!!!
அவளுக்குப் பிடித்தமான வெகு சிலவற்றில் முக்கியமானது மழை. மழை வந்தது என்றால் அவள் மனம் ஓர் மோனநிலையைத் தழுவிக் கொள்ளும். ஒரு சில கணங்கள் தான் எனினும் எந்த வித சிந்தனைகளின் ஓட்டமும் இல்லாமல் ஓர் வெற்றுத்தாளைப் போல ஒரு தியானத்தில் லயித்திருப்பாள். இந்த உணர்வினை யாரோடும் பங்கிட்டுக் கொள்ள பிரியப்படமால் ஏகாந்தத்தை நாடுவாள்.
“நீ எந்த இயர் மா படிக்கிற” பின்னாலிருந்து ஓர் குரல் கேட்கவும் யாரது தனக்கும் மழைக்கும் நடுவில் வந்தது என்ற சிறு சலிப்போடு தான் திரும்பினாள் ஹரிணி.
கனிவான முகமும், ஆளுமை நிறைந்த கம்பீரத் தோற்றமுமாய் அந்தப் பெண்மணியைப் பார்த்தவுடன் அவள் முகம் தானாக கனலி கண்ட கமலியென மலர்ந்தது. அவரைப் பார்த்ததும் சட்டென பிடித்துப் போனது இளையவளுக்கு.
“பர்ஸ்ட் இயர் எம்பிபிஎஸ் படிக்கிறேன் மா” இயல்பாக அம்மா என்று அழைத்திருந்தாள்.
அவளது சாத்வீகமான மலர்ந்த முகம் அந்தப் பெண்மணியின் கருத்தில் முதலில் பதிய அவளின் பதிலில் அவரது விழிகள் பளிச்சிட்டன. அவள் வெறுமனே முதல் ஆண்டு என்று கூறியிருந்தால் அவர் அடுத்தக் கேள்வியாக எந்த கோர்ஸ் என்று கேட்க வேண்டியிருந்திருக்கும்.
அந்தக் கல்லூரியில் பல் மருத்துவம், நர்சிங், ஃபார்மசி, பிசியோதெரபி பிரிவுகளும் இருந்தன.
சமயோசிதமாக அவள் தனது கோர்ஸ் சேர்த்து சொன்ன அவளது பிரசன்ஸ் ஆஃப் மைன்டை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டார்.
“கிளாஸ் எல்லாம் எப்படிமா போகுது”
“பாடம் கொஞ்சம் சிரமமா இருக்கு. இருந்தாலும் ப்ராக்டிகல் எல்லாம் நல்லா இருக்குது மா”
“பாரு உன் பேர் கேட்க மறந்துட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கேன்”