மெல்ல அண்ணார்ந்து பார்க்க தன்னை விட ஒரு அடியேனும் உயரமாய் சிவந்த நிறத்தில் மழுமழுவென மைதாமாவு முகம் ஒன்று சிரித்துக் கொண்டிருந்ததைக் கண்டாள்.
“வாவ் பிரின்ஸ். இஸ் தட் யு” ஹேமமாலினி வாயைப் பிளக்க அருகில் இருந்த டேபிளில் இருந்தவர்களும் திரும்பி பார்க்க அங்கு ஒரு சிறு கூட்டம் கூடிப் போயிற்று.
‘ஹர்ஷவர்தன்’ என்று அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் மாணவியர் மட்டுமல்லாது மாணவர்களும் அவனோடு சிநேகமாக பேச விழைந்தனர். அவன் ராஜகுமாரன் என்பது மட்டும் காரணமில்லை. இயல்பாகவே அனைவரையும் வசீகரிக்க கூடிய தோற்றமும் பேச்சும் கொண்டவன் ஹர்ஷா.
அனைவரோடும் சிரித்தபடியே பேசிக்கொண்டிருந்தவன் விழிகள் தாமாக ஹரிணி மேல் தாவ அவளோ கீழே விழுந்த தனது ஸ்கேல்பலை குனித்து எடுத்து அவனை சிறிதும் கண்டுகொள்ளாமல் ஹேமந்த் கையில் இருந்த புத்தகத்தை பிடுங்கி தானே படித்துக் கொண்டும் டிசக்ஷன் செய்து கொண்டும் இருந்தாள்.
அவனை ஒரு முறை கூட திரும்பிப் பார்க்கவே இல்லை அவள்.
இது வரை அவனிடம் யாரும் இப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டதில்லை.
“திமிர் பிடித்தவள்” என மனதில் நினைத்தவன் ஒரு கணம் திகைத்தான்.
“அவள் திமிர் பிடித்தவள்” அவனது பாட்டியும் பெரியம்மாக்களும் அவனது அன்னையை அப்படித் தானே சொல்லுவர்.
“ச்சே ச்சே அவளும் அம்மாவும் ஒண்ணா என்ன” மனதிற்குள் தன் எண்ணத்திற்கு கடிவாளம் இட்டான்.
“வாட்ஸ் ஹர் நேம்” அருகில் நின்ற ஹேமந்த்திடம் ஹரிணியை சுட்டிக் காட்டி மென்குரலில் வினவினான் ஹர்ஷா.
“ஹரிணி” ஹேமந்த் சொல்லவும் நேற்று தன் அன்னை அரங்கத்தின் வாயிலில் ஒரு பெண்ணை சுட்டிக் காட்டியது நினைவு வந்தது.
“அவ பேர் ஹரிணியாம். உன் கிளாஸ் தான். ரொம்ப நல்ல பொண்ணு” அம்மா சொன்னதும் நினைவில் இருந்தது.
“ஹரிணி ..ஹரி நீ இல்ல ஹரி நான்” அவன் மனம் சுணக்கம் கொண்டது. அக்கணமே அவளை வெறுத்தது. அவளது அலட்சியத்தை விட தன் அன்னையிடம் சுலபமாய் நல்ல பெண் என்று பாராட்டு பெற்று விட்டது தான் அவனது வெறுப்பிற்கு காரணம்.
இப்போது ஹர்ஷா ஓர் அலட்சியத்துடன் அவளை ஏறிட்டான்.
முடிவிலியை நோக்கி ...
{kunena_discuss:1137}