‘நாம இப்படி ஒரு ஆக்சிடென்ட் பண்ணிட்டோம்னு தெரிஞ்சா பொண்ணு வீட்டிலேயும் என்ன சொல்வாங்கன்னு தெரியாது. ஏதாவது அபசகுனம்னு நினைக்க போறாங்க. அப்புறம் கல்யாணத்திலே எதாவது பிரச்சனை வரப்போகுது ஒழுங்கா வாடா ’ இது அவனது அத்தை
இதில் இன்னொரு வேதனை இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அந்த இருளில் அங்கே வந்த மற்ற வாகனங்களும் நிற்கவில்லை. யாரும் எதையும் கண்டுக்கொள்ளவுமில்லை எல்லாருக்கும் தங்கள் வேலைகளே முக்கியம் என்பது போல பறந்துகொண்டிருந்தனர்.
பார்த்தியா? எவனாவது நிக்கறானா பார்த்தியா? எல்லாருக்கும் அவங்க வேலைதான் முக்கியம். கிளம்புங்க பேசாம. நாம்தான் இடிசோம்னு யாருக்கும் தெரிய போறதில்லை. அது யாருக்கும் தெரியறதுக்கு முன்னாலே கிளம்பறதுதான் நல்லது.’ இது இன்னொரு சொந்தகாரர்.
அவரவருக்கு தோன்றியதை அவரவர்கள் சொல்ல கடைசியில் அங்கிருந்து கிளம்புவதே சரி என ஒட்டு மொத்தமாக முடிவானது. அங்கே இரக்கம் மொத்தமாக செத்து போயிருந்தது.
‘விவேக்குக்கு போன் பண்ணியாவது சொல்லிட்டு வந்திடறேன்..’ இவன் தயங்க
‘டேய்... பைத்தியமா உனக்கு. கிளம்புடா’ பாய்ந்தார் அப்பா. ‘இங்கே பாரு. காரை சரியா ஒட்டாதது அந்த டிரைவரோட தப்பு. இதிலே நம்ம மேலே எந்த தப்பும் இல்லை. நீ மனசை குழப்பிக்காம கிளம்பு’ சொல்லிவிட்டு வேனில் ஏறி இருந்தார் அப்பா.
ஹரிணி காருக்கு உள்ளேயே அமர்ந்திருந்தாள். எல்லாவற்றையும் மௌன சாட்சியாக பார்த்திருந்தாள். அவள் நினைத்திருந்தால் நிச்சியமாக அவருக்கு உதவி இருக்கலாம் செய்யவில்லை அவள். அவளை மருமகளாக ஏற்றுக்கொள்ள ஸ்ரீனிவாசன் மறுத்ததே அவள் மனதில் ஓடிக்கொண்டிருக்க இறுக்கமாக, செயலற்றவளாக எதையும் செய்ய விரும்பாதவளாக அமர்ந்திருந்தாள் அவள்.. அந்த நிகழ்வின் போது ஹரிணி சுதர்ஷனுடன் இருந்தது இதுவரை தெரியாது விவேக்குக்கு.
ஸ்ரீனிவாசனின் டிரைவருக்கு நடப்பவை ஓரளவுக்கு புரிந்தது. இவர்களை நம்பி புண்ணியம் இல்லை என உணர்ந்து, எழுந்து ஏதாவது செய்துவிட அவர் செய்த முயற்சி தோல்வியில் முடிந்து அவரும் மயங்கி சாய்ந்தார்.
மற்றவர்கள் எல்லாரும் வேனில் ஏறி வேன் கிளம்பி இருக்க கிளம்ப மனமில்லை சுத்ர்ஷனுக்கு. ஏதோ யோசனையுடனே ஸ்ரீனிவாசனின் காரின் அருகில் வந்தான் அவன். அப்போது ஒலித்தது அவனது கைப்பேசி. எதிர்முனையில் அவனது வருங்கால மனைவி.
‘எங்கே இருக்கீங்க???’ சற்றே கிசுகிசுப்பான குரலில் ‘நான் உங்களுக்காக எவ்வளவு நேரமா வெயிட் பண்றேன்’
‘ஆங்...வரேன்மா.. இதோ வந்திட்டே இருக்கேன். இங்கே நடுவிலே ஒரு சின்ன பிரச்சனை’
‘அய்யோ... என்ன பிரச்சனை? இங்கேயும் ஏதோ சகுனம் சரியில்லை அப்படி இப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க. எனக்கு நம்ம கல்யாணம் நடக்குமோ நடக்காதோன்னு பயமா இருக்கு. சீக்கிரம் வந்திடுங்களேன் ப்ளீஸ்..’ கெஞ்சலும் சிணுங்கலுமாய் அவள் கொஞ்ச
‘பொண்ணு வீட்டிலேயும் என்ன சொல்வாங்கன்னு தெரியாது ஏதாவது அபசகுனம்னு நினைக்க போறாங்க சற்று முன் அத்தை சொன்னதும் அவன் மனதில் ஆட
‘நமக்கு எதுக்கு சார் வம்பு வாங்க கிளம்பலாம்’ அவனது கார் டிரைவரும் அவர் பங்குக்கு சொல்ல வந்து அமர்ந்திருந்தான் காரினுள்ளே. அடுத்த சில நொடிகளில் ஸ்ரீனிவாசனின் காரை கடந்து நகர்ந்தது அவன் கார்.
அங்கே இவன் திருமணம் கோலாகலமாக நடக்க இங்கே ஸ்ரீநிவாசனுக்கு எல்லாம் முடிந்திருந்தது. அவரது டிரைவர் பிழைத்திருந்தார்.
உடைந்து, நொறுங்கி களைத்து தளர்ந்திருந்த விவேக்கை ஓட்டுனர் மூலமாக எட்டியது இந்த உண்மைகள். நம்பவே முடியவில்லை அவனால். சுதர்ஷனா??? சுதர்ஷனா இப்படி செய்தான்???
கலைந்த கேசமும், பல நாள் தாடியும் ,கசங்கிய உடையும் துவண்டு போன நடையுமாய் ஒரு நாள் சுதர்ஷன் வீட்டுக்கு வந்தான் விவேக்.. இன்னும் புது மாப்பிள்ளை மெருகு குறையாமல் இவன்!!!
‘உண்மையாடா? எங்க டிரைவர் சொன்னது எல்லாம் உண்மையாடா??? நடுங்கும் குரலில் கேட்டான் விவேக்.
‘இல்லடா... தப்பு எல்லாம் எங்க வேன் டிரைவர் மேலதான். நான் அவனை பிடிச்சு உள்ளே தள்ளிடறேன்.’
‘அப்போ அவர் சொன்னது எல்லாம் உண்மைதான் இல்லையா? உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருந்தா எங்க அப்பா பிழைச்சிருப்பார் தர்ஷன்’ விவேக்கின் விழிகள் நிரம்பி வழிந்தன.
‘அப்போ எனக்கு வேறே வழி தெரியலை. நான் கல்யாணத்துக்கு போயிட்டு இருந்தேன்’
‘ஒரு உயிரை விட உனக்கு உன் கல்யாணம் முக்கியமாடா??? ச்சே... மனுஷனாடா நீ.... ஒரு மாசம் கழிச்சு கல்யாணம் பண்ணா என்னடா குறைஞ்சு போகும்’ உச்சத்தில் எகிறியது விவேக்கின் குரல்.
‘இல்லடா.. இல்லடா நான் அந்த டிரைவரை... சும்மா விட மாட்டேன்..’