‘வே......ண்.......டாம்.. எனக்கு வேறே ஏதும் வே...ண்....டாம். எனக்கு எங்க அப்பாவை மட்டும் திருப்பி குடு.. திருப்பி குடுடா.. திருப்பி குடு. உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருந்தா எங்க அப்பா பிழைச்சிருப்பார்டா... பிழைச்சிருப்பார்டா... .’ இவன் சட்டையை பிடித்து உலுக்கி பைத்தியம் பிடித்தவனை போல் விவேக் கத்தியதும், அதன் பின் அவனே தளர்ந்து
‘நான் என்ன செய்வேன். இனிமே நான் என்ன செய்வேன் என புலம்பியபடியே வீட்டை விட்டு வெளியேறியதும் இன்னமும் கண் முன்னே நிற்கிறது.
அதன் பின் இவன் பலமுறை அழைத்தும் பேசவில்லை விவேக். யார் மீதும் எந்த வழக்கும் வேண்டாமென மறுத்திருந்தான் அவன். எதுவும் அவனது அப்பாவை திருப்பி கொடுக்க போவதில்லை என்பதை அறிந்தவன்தானே அவன்.
அதன் பிறகு விவேக்கை சுதர்ஷன் சந்தித்தது விமானத்தில்தான். எல்லாவற்றுக்கும் மௌன சாட்சியாக இருக்கும் காலம் விவேக்குக்கு மிக அழகாக சந்தர்ப்பம் அமைத்துகொடுத்தது. ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லையே அவன்!!!.
‘நான் அவன் நிலையில் இருந்திருந்தால் அன்று விமானத்தை தரை இறக்கி இருப்பேனா???’ தன்னை தானே கேட்டுக்கொண்டான் சுதர்ஷன்
‘நூறு சதவிகதம் செய்திருக்க மாட்டேன்’ என்பதுதான் அவன் மனசாட்சி அவனுக்கு கொடுத்த பதிலாக இருந்தது.
‘விமானத்தை தரை இறக்கி, அதே நேரத்தில் அவருக்கான முதலுதவி ஏற்பாடுகளையும் சரியாக செய்து, ஸ்ரீனிவாசன் வளர்த்த வளர்ப்பு என்றைக்கும் தப்பாக போகாது என்பதை மிக அழகாக நிரூபித்து விட்டானே விவேக். மேன் மக்கள் எப்போதும் மேன் மக்களே!!!’ சுதர்ஷனின் கண்கள் தாண்டி கண்ணீர் வழிந்தது.
அங்கே கட்டிலில் அமர்ந்திருந்த அப்பாவுக்கு விவேக் செய்த உதவி இன்னமும் தெரியாது. மெல்ல அவர் அருகில் வந்தான் மகன்.
‘அப்பா உடம்பு எப்படிப்பா இருக்கு..’
‘இப்போ பரவாயில்லைபா.. அவர் மெல்ல சொல்ல
‘அப்பா அன்னைக்கு ப்ளேன்லே வரும்போது உங்களுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை. அப்போ ப்ளேனை மறுபடியும் லேண்ட் பண்ணி நமக்கு ஹெல்ப் பண்ணது யார் தெரியுமாபா???’ இவன் கேட்க அப்பா புரியாமல் பார்க்க இவன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டான்.
‘விவேக்பா..’ என்றான் சுதர்ஷன்
விவேக்கா???’
உங்களுக்கு ஞாபகம் இருக்காப்பா? என் கல்யாணத்துக்கு போறப்போ ஒரு ஆக்சிடென்ட் நடந்தது’ அவன் சொல்லும் போதே அப்பாவின் முகத்தில் மாற்றம்.
‘நாளைக்கு காலையிலே கல்யாணத்தை வெச்சுகிட்டு ஹாஸ்பிட்டல் அதுக்கு அப்புறம் போலீஸ்னு அலைய முடியாதுனு நாம எல்லாரும் கிளம்பி போயிட்டோம். அந்த விபத்திலே இறந்து போன டாக்டர் ஸ்ரீனிவாசனோட பையன்தான்பா இந்த விவேக். உங்களை இப்போ காப்பத்தினதும் இவன்தான். நாம செய்யாததை அவன் செஞ்சு காட்டிட்டான்பா. இப்போ நான் அவனுக்கு துரோகம் பண்ண பாவியா நிக்கிறேன்’ அப்படியே அப்பாவின் அருகில் மடிந்து அமர்ந்து குலுங்கி குலுங்கி அழத்துவங்கினான் சுதர்ஷன்.
வாயிலிருந்த உணவு உள்ளிறங்கவில்லை அப்பாவுக்கு. திடீரென்று எழுந்த குற்ற உணர்வில் அப்படியே சிலையாகி அமர்ந்திருந்தார் அவர்.
சில நிமிடங்களில் சுதாரித்து எழுந்தான் சுதர்ஷன். ‘சுயநலத்தின் பெயரால் நட்பை அழித்துவிட்டேன். நம்பிக்கையை அழித்துவிட்டேன் இதற்கு பரிகாரமே இல்லை!!!. நான் செய்த பாவத்திற்கு பரிகாரமே இல்ல!!. காலம் முழுதும் இதே குற்ற உணர்வு என்னை வாட்டி வதைக்கும்’ ஒரு பெருமூச்சுடனே கையிலிருந்த கைப்பேசியில் இருந்த புகைப்படத்தை மறுபடியும் ஒரு முறை பார்த்தான்.
‘இவரை பற்றி விவேக்குக்கு தெரியுமா??? தெரியாதா???. தெரிந்தால் மிகவும் மகிழ்ந்து போவானே!!!’ யோசித்தவனுக்கு, ஹரிணி இதை பற்றி சொல்லி இருக்க மாட்டாள் எனதான் தோன்றியது. அவனுக்குதான் ஹரிணியை பற்றி நன்றாக தெரியுமே.
‘ஒரு வேளை ஹரிணியின் அப்பாவை பார்த்தால் விவேக்கின் காயங்கள் கொஞ்சம் ஆறுமோ???’ சின்னதாய் ஒரு கேள்வி உதயம்
‘ஆம்!!! அது கூட சரிதான். சென்னைக்கு சென்று இவரை தேடி, எப்படியாவது ஹரிணியிடம் பேசி அவன் முன்னால் இவரை கொண்டு நிறுத்திவிட வேண்டியதுதான். இதனால் அவன் முகத்தில் ஒரு துளி புன்னகை மலர்ந்தால் கூட போதும் என் குற்ற உணர்வு கொஞ்சம் குறையும்’ யோசிக்கலானான் சுதர்ஷன்.
‘மும்பையில் அண்ணன் இருக்கிறான். அம்மாவும் இங்கே வந்தாகி விட்டது. இவர்கள் அப்பாவை பார்த்துக்கொள்வார்கள். நான் உடனே சென்னைக்கு கிளம்புகிறேன்’ முடிவுடன் நகர்ந்தான் அவன்.
அதே நேரத்தில் அங்கே சென்னையில்
எப்போதும் போல் நிர்வாக பணிகளை கவனிக்க மருத்துவமனைக்கு வந்திருந்தான் விவேக்கின் தம்பி ஷிவா. அவன் வந்த சில நிமிடங்களிலேயே அந்த செய்தி அவனை எட்டியது.
‘நிஜமாவா???” அவன் வியப்பு மேலோங்க கேட்க
‘ஆமாம் சார்.. அவர் பார்க்க அப்படியே உங்க பெரியப்பா மாதிரியே இருக்கார்’ வந்தது பதில்.
ஆர்வமும் மகிழ்ச்சியுமாக விழுந்தடித்துக்கொண்டு ஓடினான் அந்த அறைக்குள். தாமோதரனை நம்பவே முடியாமல் பார்த்திருந்தான் சில நிமிடங்கள்.