அவர் பின்னாடியே அழுகையும் ஆத்திரமுமாகச் சென்றவள், என்ன சொன்னீங்க! அவளுக்குப் பிறந்தவனை மட்டும் பேசும்போது உங்கபிள்ளைனு சொல்றீங்க நம்ம மாதேஷை மட்டும் என் பிள்ளைனு சொல்றீங்க என்றவள், என்ன... என்னையும் அவளை போல் அடுத்தவன் புருசனுக்கு பிள்ளை பெத்தவள் என்று சொல்றீங்களா...? என்று மஞ்சுளா ஆத்திரத்தில் பேசக்கூடாத வார்த்தைகளை சொல்லிமுடித்த மறுநிமிடம் வேலாயுதத்தின் கை ஓங்கி ஓர் அடியை மஞ்சுளாவின் கன்னத்தில் இறக்கியது..
ருத்ரதாண்டவ தோற்றத்துடன் கண்கள் இரண்டும் சிவக்க ஓர் விரலை உயர்த்தி கூறினார், “கோபத்தில் பேசினாலும் சொல்ற வார்த்தையை உணர்ந்து பேசணும்” என்று கர்ஜித்த வேலாயுதம் தனது அறையின் வாசலில், அவர்அடித்ததால் விதிர் விதிர்த்து நின்ற மஞ்சுளாவின் முகத்தில், கதவை அறைவது போல் ஓங்கி அறைந்து சாத்தினார்.
சாப்பாட்டு மேஜையில் தட்டு கீழே விழும் சத்தத்திலும் மருமகனின் கோபமான பேச்சிலும் மகளை தேடி வேகமாக வந்த மனோன்மணிக்கு அதிர்ந்த தோற்றத்தில் கன்னத்தில் கைவைத்தபடி நின்ற மகளை பார்த்ததும் மஞ்சுளா என்று தோள் தொட்டு உலுக்கிய அம்மாவை கட்டிக்கொண்டு கதறிவிட்டாள் மஞ்சுளா.
நான் செஞ்ச தப்பால என் காலம் முழுக்க நிம்மதியில்லாமல் ஆக்கிவிட்டாரே இந்த ஆண்டவன் என்று புலம்பினாள் மஞ்சுளா. தன் மகளின் முதுகை அருகில் இருந்து ஆதரவாய் தடவியபடி, ராஜாபோல மகனை வச்சுகிட்டு நீ ஏன் கலங்கணும் மஞ்சுளா? அவ என்னதான் உன் புருஷனை மயக்கி வச்சுகிட்டாலும் அவ இரண்டாவதுதான். உனக்குத்தான் உன் புருஷன் மேல் முழு உரிமையும். எங்க போயிடப்போகிறார் உன் புருஷன் என்றார் மனோன்மணி.
சென்னையில்.....
அழகுநிலா வேலையின் சேர்ந்து இன்றுடன் இரண்டு மாதம் முடிந்து விட்டது. அவள் முதல்நாள் உள்ளே வரும் போது பயந்தாள் என்று அவள் ப்ராஜெக்ட் டீமில் இருப்பவர்களிடம் சொன்னால் என் காதில் பூ சுத்தப் பார்கிறாயா? என்ற கேள்வியைத்தான் கேட்பார்கள்.
அவள் ஆபீஸில் இருக்கும் இடம் உற்சாகமயமாக இருந்தது. தன்னுடைய பேச்சாலும் எதார்த்தமான செய்கையாலும் அதற்குள் ஓர் நட்பு வட்டாரத்தையே உருவாக்கியிருந்தாள்.
இவவளவு நாள் கட்டுப்பாடான சூழலில் வளர்ந்தவள். ஆதலால் இங்கு தடையில்லாமல் கிடைக்கும் சுதந்திரத்தை தன் நண்பர்களுடன் மாலுக்குப் போவது, படம் பார்ப்பது என்று ஜாலியாக அவள் வாழ்வு சென்று கொண்டிருந்தது.
என்னதான் ஆண் பெண் வேறுபாடு பார்க்காமல் தன் உடன் வேலை பார்பவகளிடம் நட்பு பாராட்டினாலும், உடையிலும் தன்னுடைய ஒப்பனையிலும் சிட்டிகேர்ள் தோற்றத்துக்கு மாறியிருந்தாலும் தனது கண்ணியம் சிறிதும் குறையாத வகையிலேயே அவளது மாற்றம் இருந்தது.
இன்று சாயங்காலம் சுமதியின் பிறந்தநாளுக்கு, விசு, பக்கத்தில் இருக்கும் ஹோட்டலின் தனது நண்பர்களுக்கு டின்னர் அரேஞ் செய்திருந்தான் .
அவன் வேறு இடத்தில் வேலைபார்த்தாலும் நேரம் கிடைக்கும் போது சந்தித்து கொண்டு தான் இருந்தனர்.
ஹோட்டலுக்குள் நுழையும் போது அழகுநிலா சுமதியிடம் “அடியே கஞ்சூஸ் இன்னைக்கு உன் பிறந்த நாள் தானே! அப்போ, நீதானே எங்களுக்கு துட்டு செலவு பண்ணி பார்டி கொடுக்க வேண்டும்” அது என்ன விசு செலவு செய்வது, இதை நான் ஒத்துகொள்ள மாட்டேன் என்று கூறினாள்.
அதற்கு சுமதி, நானே கஷ்டப்பட்டு எனக்கு ஒரு அடிமையை, “இன்றைய காதலன் அண்ட் நாளைய கணவன்” என்ற பேரில் விசுவை சிக்கவைத்திருப்பது எதுக்குன்னு நினைக்கிற, இப்படி எனக்காகச் செலவு செய்வதற்குத்தான் என்றாள் .
அவள் தன்னை அடிமை என்று கூறியது கூட வெகுமதியாக தன்னை கூறியது போல் அவளை பார்த்து காதலாய் சிரித்த விசுவை பார்த்து....
அட சீ! நீயெல்லாம் எனக்கு பிரண்டுன்னு சொல்லிகொள்ளாதே விசு ,அவ உன்னை டேமேஜ் பண்றா! நீ என்னமோ உனக்கு பாராட்டு பத்திரம் வாசித்தது போல் இப்படி பாசமா அவளை பார்த்து சிரிக்கற ,சகிக்கல என்றவள்.
என்ன பன்ன காலேஜ் படிக்கும் போதிருந்து உன் மானத்தை காப்பதே என் வேலையாகப் போய்விட்டது என்று விசுவை பார்த்து சொன்னவள்,
சுமதியிடம் , என்ன சொன்ன? என் பிரன்ட் விசுவ என்ன சொன்ன? உனக்கு செலவளிக்க சிக்குன அடிமைனா சொன்ன, ஒரு அப்ரானிப் பையனுக்கு சப்போட் பண்ணி பேச ஆள் இல்லைன்னு நினைச்சயா? நான் இருக்றேன். இன்னைக்கு எப்படி இந்த பில்லை நீ அவன் தலையில் கட்டுகிறாயோ அதே போல் அடுத்தமாதம் வருகிற அவன் பெர்த்டேக்கும் இன்னும் நாலுமாதம் பிறகு வருகிற என் பெர்த்டேக்கும் உன்னையே பில் பே பண்ண வைக்கல நான் அழகுநிலா கிடயாதுடீ! என்றாள்.
அதற்கு உடனே, ஏன்டீ உனக்கு இந்த பொறாமை. வேணும்னா நீயும் என்னை மாதிரி ஓர் அடிமையை ஏற்பாடு பண்ணிக்கோ!, நீ ஒண்ணும் மெனக்கெட்டு அப்படியொரு அடிமையை தேடி போக வேண்டாம் இதோ உன் பக்கத்தில் வரும் ரமேஷ் எப்படா எனக்கு அந்த அடிமை சான்ஸ் கிடைக்குமென்று இருக்கிறார், என்றாள்.