‘ஒண்ணும் ஆகாது.. ரிலாக்ஸ்...’ ஒரு தாயின் பரிவு அவன் குரலில்.
அவளை சோபாவில் அமர வைத்துவிட்டு கிச்சனை நோக்கி ஓடினான் விவேக். நிற்காத கண்ணீருடன் திரும்பியவளின் பார்வையில் விழுந்தன அவை.. அந்த சோபாவின் அருகிலிருந்த மேஜையின் மீதிருந்த பூ ஜாடியில் இருந்த ரோஜாப்பூக்கள்.
அவள் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து, அவனுக்கு ரோஜாப்பூக்கள் பிடிக்காது என தெரிந்த தினத்திலிருந்து, தினமும் வீட்டுக்குள் வரும் ரோஜாப்பூக்கள். அவளே வரவழைப்பாள். இன்று அந்த ரோஜாப்பூக்களின் வாசமே அவளுக்குள் நுழைந்து உலுக்குவதை போல் ஒரு பிரமை.
‘ஏன்??? ஏன் அவனை வருத்தப்படுத்தி பார்ப்பதில் எனகென்ன ஆனந்தம். ஏன் அப்படி செய்தேன்???’ அவளுக்கே பதில் தெரியவில்லை..
இதுவரை முகமே பார்த்திராத என் குழந்தை மீது எனக்கித்தனை பாசமிருக்குமென்றால் அவனுக்கு அவன் தந்தை மீது எத்தனை பாசமிருந்திருக்கும். எப்படி துடித்திருப்பான் தந்தையை இழந்து. அப்படி என்ன அகங்காரம் எனக்கு?? அவன் மனதை எப்படி எல்லாம் கீறி வேடிக்கை பார்த்தேன் நான்??? ஆனால் இன்று அவன்???’ நான் அவன் நிலையில் இருந்திருந்தால் கண்டிப்பாய் இப்படி உதவி இருக்கமாட்டேன்.
அடி வயிற்றில் சுரீரென்று ஒரு வலி புறப்பட இரு மடங்காகிறது அவள் கண்ணீர். அவசரமாக வயிற்றை வருடிக்கொடுக்கிறது அவள் கரம்.
‘என்னடா பாப்பா செய்யுது உனக்கு???.’ குரல் உடைய கேட்டாள் குழந்தையை. ‘கடவுளே நான் செய்த தவறுக்கு எனக்கு தண்டனை கொடு. என் குழந்தைக்கு வேண்டாம்.
முடிந்துவிட்டதா??? எல்லாமே முடிந்துவிட்டதா??? வயிற்றுக்குள் ஏதேதோ மாற்றம் நிகழ்வதுபோல் தோன்ற உயிர் குலுங்கியது ரஞ்சனிக்கு.
கையில் பழச்சாறுடன் ஓடி வந்தான் விவேக். அவனுக்குள் இப்படி ஒரு தாயுள்ளம் இருப்பதை இத்தனை நாள் கண்டதில்லை இவள்.
‘கொஞ்சம் குடிம்மா இதை. நாம அப்படியே கிளம்பிடலாம்’ அதை வாங்கிக்கொள்ளக்கூட இயலவில்லை அவளால்.
‘அண்ணா..’ என்றாள் முதல் முறையாக. ‘ரொம்ப சாரிண்ணா.. என்னை மன்னிச்சிடுங்க..’ சொன்னவள் அப்படியே மயங்கி சரிந்திருந்தாள்.
அவள் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் கீழே விழுந்து சிதறிய கைப்பேசி அங்கேயே ஏதோ ஒரு மூலையில் கிடந்தது.
மாலை ஆறு மணி
‘ஜூஸ் குடிக்கறீங்களாபா???’ மருத்துவமனையில் உறக்கத்திலிருந்து விழித்த தாமோதரனை பார்த்து கேட்டான் விவேக்.
‘ஜூஸா??? நான் அதெல்லாம் ரொம்ப குடிக்கறதில்லபா. எப்பாவது ஏதாவது கல்யாணத்திலே மிச்சமிருந்தாதான்.’ அவர் சொல்ல குழப்பத்தில் சுருங்கின அவன் கண்கள்.
‘புரியலபா.. கல்யாணத்திலே மிச்சமிருந்தாவா???’
‘என் வேலை கல்யாணத்திலே சமையல் பண்றதுதான்’ அவர் சொல்ல என்ன தோன்றியதோ சட்டென அவர் அருகில் வந்து அமர்ந்துக்கொண்டான் விவேக்.
‘இனிமே நீங்க அதெல்லாம் செய்ய வேண்டாம். என் கூடவே இருந்திருங்க. நான் பார்த்துக்கறேன் உங்களை. இந்தாங்க முதல்லே ஜூஸ் குடிங்க’ அவர் கரம் பற்றிக்கொண்டு சொன்னவன், பழச்சாறை பருக வைத்தான்
அதன் பின் அவர் கையை அவன் மெல்ல அழுத்திகொடுக்க, சுரசுரவென இருந்த அந்த கரங்கள் அவனை என்னவோ செய்தன.
‘ஏன்பா கையெல்லாம் இப்படி இருக்கு???’
‘அடுப்பில வேலை செஞ்சு பாத்திரம் தேய்ச்சு இதெல்லாம் பண்ணா அப்படிதான் இருக்கும்.’ மெல்ல சிரித்தார் அவர் .’ஆனா இதெல்லாம செய்யறேன்னு எனக்கு எப்பவும் வருத்தம் இருந்ததில்லை’
இதுவரைக்கும் எப்படியோ. இனிமே நீங்க இதெல்லாம் செய்ய வேண்டாம் என் கூடவே வந்திடுங்க. நான் உங்களை பார்த்துக்கறேன்’ சொன்னவன் மெல்ல கேட்டான் ‘நீங்க என்கூட வந்திடுவீங்கதானே???
‘உன் கூடவா??? நான் எப்படிப்பா உன் கூட வருவேன்??? நான் வேலைக்கு போகணுமே’
‘அதெல்லாம் நீங்க எங்கேயும் போக வேண்டாம். வயசு கொஞ்சமாவா ஆகுது. இனிமே ரெஸ்ட் எடுங்க..’ அவன் உறுதியாக சொன்னான் அவன்.
சற்றே ஆச்சரியாமாய்தான் இருந்தது தாமோதரனுக்கு. ‘என் மீதே இத்தனை அன்பென்றால் அவன் அவனது தந்தையிடம் எத்தனை பாசம் வைத்திருப்பான்???” சிறிது நேரம் அவனையே பார்த்தவர் கேட்டார்
‘நீ பைலெட்டாபா??? எந்த ஏர்லைன்ஸ்லே..’
அவன் அவர்களது விமான நிறுவனத்தின் பெயரை சொல்ல கொஞ்சம் திகைத்து போனார் தாமோதரன். ஹரிணியும் அதிலேதானே இருக்கிறாள். ஒரு வேளை இவனை அவளுக்கு தெரிந்திருக்குமோ என யோசித்தவருக்கு சட்டென இன்னொரு நினைவும் தட்டுப்பட்டது.
விவேக் ஸ்ரீனிவாசன்!!! ஒரு முறை மனதிற்குள் சொல்லி பார்த்துக்கொண்டார். சில வருடங்களுக்கு முன்னால் ஹரிணிகென மாப்பிள்ளை தேடும் போது இவனை பற்றிய பேச்சு வந்ததோ???