‘சிரிக்கிறானா??? விவேக் சிரிக்கிறானா??? அவன் உள்ளம் கொஞ்சம் பூரித்துபோனது. அந்த சிரிப்பொலியை தடை செய்ய விரும்பாமல் அது குறையும் வரை காத்திருந்துவிட்டு கதவை தட்டினான் சுதர்ஷன். வந்து கதவை திறந்த விவேக்கின் முகம் அப்படியே கருத்துப்போனது.
‘இவன் எங்கே வந்தானாம் இங்கே???’ உயிர் வரை தீ பற்றி எரிய, உள்ளம் கொந்தளிக்க எதுவும் பேசாமல் திரும்பி நடந்தான் விவேக். அவன் பின்னாலேயே உள்ளே வந்தான் சுதர்ஷன்
‘அவனை இங்கிருந்து போக சொல்லு ஷிவா..’ மனதில் எழும்பிய அத்தனை அழுத்தத்தின் வெளிப்பாடாய் அந்த அறைக்குள் இருந்த ஷிவாவிடம் உச்சக்கட்ட தொனியில் வெடித்தது விவேக்கின் குரல்.
‘யாரு அண்ணா இது???’ ஷிவா அதிர்ந்து திகைத்து கேட்க, தாமோதரனுமே சற்று அதிர்ந்து பார்க்க இது எதுவுமே சுதர்ஷனின் கருத்தில் பதியவில்லை. அவன் பார்வை தாமோதரனின் மேலேயே நிலைதுக்கிடந்தது.
‘இவர் வந்துவிட்டாரா??? இவர் விவேக்கிடம் வந்துவிட்டாரா???’
‘போக சொல்லு ஷிவா..’ இன்னொரு இடி முழங்கியது அங்கே.
‘போயிடறேன். நான் போயிடறேன்...’ அவசரமாக சொன்னான் சுதர்ஷன் .‘நான் வந்த வேலை தன்னாலேயே முடிஞ்சிடுச்சு. மனசு கொஞ்சம் சந்தோஷமா இருக்கு.’
மனதை, அதிலுள்ள கட்டுக்கடங்காத கோபத்தை மேலுழும்பி வெடித்துவிடாமல் அடக்கிகொண்டு கைகளுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு அமர்ந்தான் விவேக்.
‘ஷிவா..’ மெல்ல அழைத்தான் சுதர்ஷன். ‘நீங்க அவன் ப்ரதர்தானே???’
ம்...’
நான் ஒரு காலத்திலே விவேக்கோட ஃபரெண்ட் ‘ சுதர்ஷன் சொல்ல
ஃபரெண்ட் ‘என்ற வார்த்தையில் உச்சி முதல் பாதம் வரை கொதித்தது விவேக்குக்கு. தரையை காலால் ஓங்கி ஒரு முறை மிதித்து விட்டு விவேக் எழுந்துக்கொள்ள அந்த சத்தத்தில் அறையே அதிர்ந்தது.
ஒரு முறை சுதர்ஷனை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு பேசாமல் சென்று ஜன்னலின் அருகில் சென்று நின்றுக்கொண்டான் அவன். கொழுந்துவிட்டு எரியும் உள்ளத்தின் வலியினால் அவன் கண்களில் தன்னால் கண்ணீர் சேர்ந்தது.
‘அவனோட அப்பா உயிருக்கு போராடிட்டு இருந்தப்போ நான் அவரை காப்பத்தலை ஷிவா சரியா சொல்லணும்னா நான்தான் அவனோட அப்பாவை கொன்ன கொலைக்காரன். ஆனா இவன் என் அப்பா உயிரை காப்பாத்திட்டான் ஷிவா’ அவன் சொல்ல ஷிவா, தாமோதரன் இருவருமே அதிர்ந்து உறைந்திருந்தனர்.
‘தினம், தினம் குற்ற உணர்ச்சியில் துடிச்சிட்டுத்தான் கிடக்கேன். நான் செஞ்ச பாவத்துக்கு ஆண்டவனும் என்னை சும்மா விடலை. சரியா கூலி கொடுத்திருக்கான். என் பையன் இருந்தும் எனக்கு அவன் சொந்தமில்லாம போயிட்டான்..’ அவன் சொல்ல
சட்டென திரும்பி சுதர்ஷனின் முகம் பார்த்தான் விவேக். சலனமே இல்லாத ஒரு வெற்றுப்பார்வை விவேக்கினிடத்தில்.
‘நான் மன்னிப்பு எல்லாம் கேட்க வரலை. அதிலே எந்த அர்த்தமும் இல்லைன்னு தெரியும். அது என்னமோ நீ ஒரு தடவை சந்தோஷமா சிரிக்கறதை நான் பார்க்கணும்னு நினைச்சேன். அதை இன்னைக்கு பார்த்துட்டேன். அது போதும்’ விவேக்கை பார்த்து சுதர்ஷன் சொல்லிக்கொண்டிருக்க
தலையை இடம் வலமாக அசைத்துக்கொண்ட விவேக். எதுவுமே பேசாமல், அந்த அறையை விட்டு வெளியேறினான்.
அந்த மருத்துவமனையின் தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தடியில் சென்று கைப்பேசியில் இருந்த அப்பாவை பார்த்தபடியே அமர்ந்துக்கொண்டான் விவேக்.
‘என்னடா கண்ணா. கஷ்டமா இருக்கா??? எனக்கு உன்னை நினைச்சா பெருமையா இருக்கு அவன் அப்பாவையே காப்பாத்தி கொடுத்திருக்கியே நீ’ கைப்பேசியில் இருந்த அவரது புன்னகை அவனுக்கு சொல்வதைப்போல தோன்றியது.
‘என்ன தைரியம்பா அவனுக்கு. எல்லாத்தையும் பண்ணிட்டு மறுபடியும் என் முன்னாடியே வந்து நிக்கறானே!!!’ அப்பாவிடம் புலம்பினான் விவேக்.
‘சரி விடுடா. விடு... விடு..’ இதுதான் அப்பாவின் பதிலாக இருக்கும். பல முறை அப்பாவிடம் இந்த குணத்தை பார்த்திருக்கிறான் விவேக்.
‘அது எப்படிப்பா உங்களுக்கு தப்பு செஞ்சவங்களை அத்தனை ஈசியா மன்னிக்கறீங்க?’ கேட்டும் இருக்கிறான்.
‘அவன் செஞ்சதையே நாமும் செஞ்சா நமக்கும் அவனுக்கும் என்னடா வித்தியாசம். அவனை மன்னிச்சு பாரு உன் மனசுக்கு எவ்வளவு நிம்மதி கிடைக்குது பாரு’ சொல்லியும் இருக்கிறார் அவர்.
‘முடியாதுபா இவனை மட்டும் என்னாலே மன்னிக்க முடியாது. இவன் நண்பனா இருந்திட்டே எனக்கு துரோகம் பண்ணவன்பா..’ இவன் மனதிற்குள் மருகிக்கொண்டிருந்த நேரத்தில்....