ஆம்!!! வந்ததே. வந்தபோது இவன் மறுத்திருந்தானே!!!
அதற்குள் ஒலித்தது அவன் கைப்பேசி. அழைத்தது ஷிவா .
‘அண்ணா கொஞ்சம் இங்கே வர்றீங்களா???’ என்றான் அவன். ரஞ்சனி அனுமதிக்க பட்டிருந்த அறையிலிருந்து அழைத்தான் அவன். இரண்டு நிமிடங்களில் அந்த அறையின் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் விவேக்
‘எப்படிமா இருக்கே???’ ரஞ்சனியை கேட்டான் புன்னகையுடன்.
கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் கரங்கள் நன்றி பெருக்கில் குவிந்தன. அவன் அவசரகதியில் அவளை இங்கே அழைத்து வராதிருந்திருந்தால் அவள் வயிற்றில் இருக்கும் முத்து இன்று அவளிடமே தங்கி இருக்குமா??? நிச்சியமாக இல்லை என புரிந்தது அவளுக்கு.
ஏதேதோ பரிசோதனைகள், மருந்துகள் ஊசிகள் எல்லாவற்றுக்கும் பிறகு குழந்தை நலமென தெரிய வந்திருக்கிறது இவளுக்கு. இந்த சில மணி நேர போராட்டங்களே அவளை புரட்டி இருந்தன.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு உறுதி பிறந்திருந்தது அவள் மனதில்.’இனி எந்த நிலையிலும் யார் மனதையும் புண்படுத்துவதில்லை
‘ரொம்ப தேங்க்ஸ்ண்ணா..’ என்றாள் அவள். அவளது அண்ணா என்ற அழைப்பில் நிறைவான ஒரு புன்னகை பிறந்தது சிவாவின் இதழ்களில்.
‘நான் உங்களை ரொம்ப வருத்தப்பட வெச்சிருக்கேன். காரணமே இல்லாம உங்க மேலே கோபப்பட்டிருக்கேன். அதெல்லாம் ரொம்ப தப்புன்னு இப்போ புரிஞ்சிடுச்சு. மன்னிச்சிடுங்கண்ணா. உங்க நிலையிலே நான் இருந்திருந்தா எப்படியும் போகட்டும்னு விட்டிருப்பேன், இப்படி எல்லாம் ஹெல்ப் பண்ணி இருக்க மாட்டேன். யூ ஆர் கிரேட்..’ அவள் சொல்ல
‘‘நான் ஸ்ரீனிவாசன் மகனடி பெண்ணே. யாரையும் அப்படி எல்லாம் விட்டுச்செல்ல முடியாது என்னால்..’ சொல்லிக்கொள்ளவில்லை அவன். அவளது வார்த்தைகளுக்கு பதிலாக ஒரு சின்ன புன்னகை மட்டுமே மலர்ந்தது அவன் இதழ்களில்.
‘நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்கண்ணா.’ இது ஷிவா.
‘உனக்கு ஒண்ணு தெரியுமா ரொம்ப நாளைக்கு அப்பறம் அண்ணா இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. அவருக்கு அப்பா கிடைச்சிட்டார்ங்கிற சந்தோஷம். அவரை தன்னோட கூட்டிட்டு போய் வெச்சுக்க போறாராம்’ அவன் சொல்லிக்கொண்டிருந்தான் ரஞ்சனியினிடத்தில்.
அதே நேரத்தில் அங்கே புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்தாள் ஹரிணி. தனது கைப்பேசியை அவள் உயிர்பிக்க அப்போது சட்டென அவள் திரைக்கு வந்தது அந்த செய்தி. ரஞ்சனி காலையில் அனுப்பி இருந்த அந்த செய்தி.
‘உன் தந்தை இங்கேதான் இருக்கிறார். இந்த செய்தியை பார்த்துதும் என்னை அழைக்கவும்’
ஒரு நிமிடம் பரபரத்துப்போனாள் ஹரிணி. அவசரமாக அவளது எண்ணை தேடி அழுத்தின இவள் விரல்கள். அது அணைக்கப்பட்டிருந்தது. அது வீட்டின் ஒரு மூலையில் சிதறிக்கிடந்ததை எங்கே அறிந்தாள் ஹரிணி.
அடுத்தடுத்த முயற்சிகளும் தோல்வி. இப்போது அவள் தேடி எடுத்தது ஷிவாவின் எண்ணை. எப்போதோ ரஞ்சனியிடம் அவள் வாங்கிய எண் இப்போது கைக்கொடுத்தது.
‘நான் ரஞ்சனி ஃபரெண்ட் ஹரிணி பேசறேன். அவ நம்பர் கிடைக்கலை எனக்கு. அவகிட்டே கொஞ்சம் பேசணும்..’
‘இதோ ஒரு நிமிஷம் இருங்க கொடுக்கிறேன் அவகிட்டே.’ சட்டென சொல்லிவிட்டிருந்தான் ஷிவா. ரஞ்சனி அனுப்பி வைத்த குறுஞ்செய்தியை பற்றி எல்லாம் எங்கே அறிந்தான் அவன்.
‘உன் ஃப்ரெண்ட் ஹரிணி பேசறா..’ ரஞ்சனியிடம் ஷிவா சொன்னது தெளிவாக காதில் விழத்தான் செய்தது ஹரிணிக்கு.
‘நான் அப்புறம் வரேன் ஷிவா. டேக் கேர் ரஞ்சனி ’ சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் விவேக்.
ஹரிணியின் பெயரை கேட்டவுடன் அங்கிருந்து விலகிவிடவே தோன்றியது விவேக்குக்கு. அவள் ஏதாவது கேட்க, இவள் ஏதாவது பேச இது எதற்கு தேவை இல்லாத சலசலப்பு என்ற எண்ணம் அவனுக்கு.
அவனது குரலும் கேட்கத்தான் செய்தது ஹரிணிக்கு. ‘இது விவேக்கா??? சட்டென தலைக்குள் மணி அடித்தது ஹரிணிக்கு.
ஹரிணி எதற்காக அழைத்திருப்பாள் என்று ஓரளவு ஊகிக்க முடிந்திருந்தது ரஞ்சனியால். ‘இப்போது என்ன சொல்வதாம் அவளிடம்??? நிஜமாகவே புரியவில்லை ரஞ்சனிக்கு
‘ரொம்ப நாளைக்கு அப்பறம் அண்ணா இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க’ சொன்னானே ஷிவா. இப்போது எல்லாவற்றையும் ஹரிணியிடம் சொன்னால் அவள் வந்து இங்கே எல்லாவற்றையும் நொறுக்கிவிடுவாளே’ குழப்பம் மேலிட்டது அவளுக்கு.
அதே நேரத்தில் ஹரிணியிடம் பேசினால் உண்மைகளை சொல்லாமல் இவளால் இருக்கவும் முடியாது. சில நொடிகளுக்குள் ஒரு முடிவுக்கு வந்து ஷிவாவிடம் சைகையில் சொன்னாள் ரஞ்சனி