வைதேகியும் ஸ்ரீரங்கம் எல்லையை கடந்து செல்லும் போது ஒரு முறை திரும்பிப் பார்த்தார், என்னவோ இனி அந்த ஊருக்கே தான் வரப்போவதில்லை என்பது போன்ற எண்ணம், இனி தங்களின் வாழ்க்கை தஞ்சையில்தான் என நினைத்து நீண்ட பெருமூச்சுவிட்டபடியே சரவணனை பார்க்க அவனோ டெம்போவில் ஏற்றிய சாமான்களில் சோபா செட்டும் இருந்தது, விடிய விடிய உறங்காமல் வீட்டை காலி செய்து பொருட்களை வண்டியில் ஏற்றிய காரணத்தால் அலுப்புடன் சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருக்க, அதைக்கண்டு மென்மையாக புன்னகை புரிந்தார் வைதேகி. வண்டியும் தஞ்சையை நோக்கி விரைந்தது. சிறிது நேரத்தில் தஞ்சை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பலகையைக் கண்டதும் வைதேகி தன் மகனைப் பார்த்து
”சரவணா சரவணா தஞ்சை வந்துடுச்சிப்பா எழுந்திரு” என எழுப்ப அவனோ
”ம்ம்ம் போம்மா” என்றான் தூக்க கலக்கத்தில்
”அட எழுப்பா ஊர் வந்துடுச்சி, அட்ரஸ் உனக்குதானே தெரியும் எழுந்து டிரைவர்க்கு வழி சொல்லுப்பா, என் கண்ணுல்ல என் ராஜா இல்லை எழுந்துருடா கண்ணா“ என கொஞ்ச சரவணனும் கொட்டாவி விட்டபடியே எழுந்து சோம்பல் முறித்தபடியே தாயைக் கண்டு மென்மையாகச் சிரித்தவன் அடுத்து டிரைவரிடம்
”அண்ணா டிரைவர் அண்ணா” என சத்தமாக அழைத்தான் அவரும்
”சொல்லுப்பா”
”புது வீட்டு அட்ரஸ் சொல்லட்டுமா அண்ணா”
”சொல்லுப்பா” என கேட்க இவனும் முகவரி சொல்ல டிரைவரும் புது வீட்டை நோக்கி விரைந்தார், ஆங்காங்கு இருந்த ஒரு சில மக்களிடம் முகவரியை விசாரித்தபடியே ஒருவழியாக சரியான வீட்டை அடைந்தது டெம்போ. வீடு வரவும் வைதேகியும் சரவணனும் வண்டியை விட்டு இறங்கி வீட்டின் முன் நின்றார்கள்.