”இந்தா இதை கொண்டு போய் அக்கம் பக்கம் வீட்ல இருக்கறவங்களுக்கு கொடு”
”நானா”
”ஆமாம்”
”ஆனா அம்மா எனக்கு கூச்சமா இருக்கு, நீயே இதை செய்யக்கூடாதா”
”இல்லைப்பா உடம்பு சோர்வா இருக்கு, அதான் பார்க்கிறேன் நான் போனாக்கா அவங்க கதை பேச உட்கார வைச்சிடுவாங்க, எனக்கு இப்பவே தூக்கம் தூக்கமா இருக்குப்பா” என சொல்ல உடனே சரவணன் துடித்துப் போனான்
”சரிம்மா விடு இதை நான் பார்த்துக்கறேன், எதுக்காக உடம்பு முடியாத நேரத்தில இத்தனை வேலைகளையும் செய்து வைச்ச வா வா வந்து படு வா நானே எல்லாருக்கும் பால் கொடுத்துட்டு வரேன்” என சொல்லி தாயை அழைத்துக் கொண்டு படுக்கையறையில் விட்டுவிட்டு வெளியேறினான்.
டிரைவரிடம் ஒரு டம்பளர் பாலை தந்தவன்
”அண்ணா அம்மாவுக்கு உடம்பு சோர்வா இருக்காம், அவங்க படுக்கறதுக்கு இப்போதைக்கு ஒரு பாயும் தலையணையையும் தந்திடுங்கண்ணா, அப்புறமா நாம கட்டிலை இறக்கிடலாம்” என சொல்ல அவரும் சரியென்றார். சரவணனும் வலது பக்கம் இருந்த வீட்டிற்கு சென்று தான் யார், தன் தாய் யார், எதற்காக இங்கு வந்தோம் என சொல்லி பால் டம்ளர் நீட்ட அவர்களும் மகிழ்ச்சியாக அதை எடுத்துக் கொண்டார்கள். பால் டம்ளர் திரும்பி வாங்குவதற்காக காத்திருந்த நேரத்தில் அவனை பற்றிய கேள்விகள் கேட்க அவனும் தான் படித்தது, இதற்கு பிறகு என்ன செய்யப் போகிறோம், என்ன வேலை கிடைக்கும் தஞ்சையை பற்றின விசயங்கள் என விசாரித்து தெரிந்துக் கொண்டிருந்தான். அவன் பேச பேச அவர்களும் அவனுக்கு தங்களுக்கு தெரிந்தவற்றை சொன்னார்கள் அதோடு அங்கிருந்து கிளம்பி அவன் வீட்டிற்கு இடது பக்கம் இருந்த பக்கத்து வீட்டிற்கு சென்றான்.