”வீடு நல்லாதான் இருக்கு, ரெண்டு பேருக்கு ஏத்த மாதிரி தனி வீடாதான் கிடைச்சிருக்கு, பரவாயில்லைம்மா வீட்டு புரோக்கர் நல்ல இடமாதான் நமக்கு காட்டியிருக்காரு”
”அவரு வீட்டு புரோக்கர் இல்லை சரவணா என்கூட வேலை செய்த டீச்சர், அவரும் இந்த ஊர்லதான் இருக்காரு, அவர்கிட்ட உதவி கேட்டேன் இது அவரோட வீடாம், இங்கயே தங்கிக்குங்க, மாசாமாசம் நீங்க வாடகை கொடுங்கன்னு என்கிட்ட சொன்னாரு”
”அப்படியாம்மா சரி சரி நீ வீட்டை திறம்மா, நான் சாமான்களை இறக்கி வைக்கிறேன்”
”பொறு சரவணா முதல்ல புதுவீட்டை சுத்தம் செய்யனும், பால் காய்ச்சனும், அப்புறமா சாமான்கள் இறக்கலாம்” என சொல்ல சரவணனும் மடமடவென வேலையில் இறங்கினான். சிறிய வீடு என்பதால் அதை பெருக்கி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி கழுவ அரை மணி நேரம் ஆனது. அடுத்து பால் காயச்சுவதற்கு தேவையான பொருட்களை கிச்சனில் வைத்துவிட்டு தாயை தேடினான். அதற்குள் வைதேகி அக்கம் பக்கம் வீட்டினருடன் நட்பு பாராட்டிக் கொண்டிருந்தார், அவர் டீச்சர் என்பதால் அக்கம் பக்கம் வீட்டுக்காரர்களும் மரியாதையுடன் பேசினார்கள், அதைப் பார்த்தபடி வந்த சரவணனோ
”அம்மா வாம்மா நேரமாகுது நல்ல நேரம் முடியப்போகுது” என குரல் தர வைதேகியும் பேசிக் கொண்டிருந்தவரிடம் விடைபெற்றுக் கொண்டு வந்தார்
”என்னப்பா வீட்டை கழுவிட்டியா”
”ஆச்சிம்மா”
”பால் காய்ச்ச தேவையானதை வைச்சிட்டியா”
”ஆச்சிம்மா”
”பூஜை ரூம்ல சாமி படம் வைச்சிட்டியா”