சிறுகதை - இறுதி வார்த்தை - தாரா சங்கர் பந்த்யோபாத்தியாய் (சு.கிருஷ்ணமூர்த்தி)
பூரவசக் தாலூகாவில் பரத்பூர் கிராமம் பெரிய சொத்து. அங்கே மரங்களின் இலைகள் முறம் மாதிரி இருக்கும், கிளைகள் உலக்கை மாதிரி இருக்கும். மண், அரைத்த சந்தனம் மாதிரி. அதை உடலில் தடவிக்கொண்டால் உடல் குளிர்ந்து விடும். விதைகளைத் தெளித்துவிட்டால் போதும், வெகு விரைவில் பயிர் செழித்து வளர்ந்துவிடும். பரத்பூரில் என்னதான் கிடையாது? மண்ணில் தங்கம் என்பார்களே, அது வெறும் பேச்சு அல்ல. உண்மையில் முன்பெல்லாம் அங்கே ஆற்றங்கரை மணலிலிருந்து தங்கம் எடுப்பதுண்டு. மண்ணுக்குக் கீழே தங்கம் இருந்தது. கிராமத்து மக்களோ முட்டாள் கூட்டம். விவசாயம் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்; அடித்தால் கோபம் வராது; "நீ அடிச்சாப் பரவாயில்லை, நீ என்ன வேத்து மனுசனா," என்பார்கள். கரையில்லாத அகலக் கட்டைத் துணி கட்டுவார்கள்; நெற்றியில் சந்தனத்தால் நாமம், கழுத்தில் துளசிமணி மாலை, கறுப்பு நிறம். இதிலிருந்தே அவர்கள் முட்டாள்கள் என்று தெரிகிறது. எல்லாரும் விவசாயிகள்; ஜமீந்தாரின் ஆட்கள் அவர்களைக் "குடியானவப் பசங்க" என்பார்கள். முன்காலத்தில் வயலை உழுவார்கள், பயிரிடுவார்கள், தூங்குவார்கள். இப்போது காலம் மாறிவிட்டது; கலி முற்றிவிட்டது. ஆகையால் இப்போது அரை வயிறு சாப்பிடுகிறார்கள், நோயால் அவஸ்தைப்படுகிறார்கள், எப்படியோ சிரமப்பட்டு விவசாயம் செய்கிறார்கள்; சிலர் கடவுளிடம் முறையிடுகிறார்கள், சிலர் முறையிடுவதில்லை. அதாவது சிலர் அழுகிறார்கள், வேறு சிலர் பல்லைக் கடித்துக் கொள்கிறார்கள்.
பத்மா நதிக்கு மறுகரையில் வசிக்கும் சாஹுக்களின் குடும்பம் தான் இப்போது பரத்பூரின் ஜமீந்தார். இதற்குமுன் கிராமம் மியான் குடும்பத்தின் வசத்திலிருந்தது. அப்போது சாஹுக்கள் இந்த பக்கம் வந்து தொழில் தொடங்கினார்கள். மியான் குடும்பத்தினரிடையே பூசல் ஏற்பட்டபோது அவர்கள் சாஹுக்களிடம் கடன் வாங்கினார்கள். கடன் ஆயிரம் மடங்காக வளர்ந்தால் கடன்காரர்கள் என்ன செய்வார்கள? அத்துடன், நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது கிராம மக்களின் தலைவன் சாஹுக்களுக்கு ஆதரவாக சாட்சியம் சொன்னான்.
அந்தப் பழைய கதை கிடக்கட்டும். இப்போது மக்கள் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு... அந்தக் கதையும் கிடக்கட்டும். பழைய குப்பையைக் கிளறிப் பிரயோசனமில்லை. எல்லா விவரங்களையும் சொல்வதானால் பெரிய புராணமாகி விடும். இந்தக் காலத்து நடப்பைச் சொல்வதுதான் சரி. இப்போது சாஹுக்கள்தான் ஜமீந்தார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆஃபீஸ், ஒவ்வொரு ஆஃபீசிலும் ஒரு நாயப் (அதாவது மானேஜர்), தலைமை ஆஃபீசில் பெரிய நாயப். இதைத்தவிர, சாஹுக்கள் பத்மாவின் மறுகரையிலிருந்த தங்கள் ஊரிலிருந்து