கிழவன் வெளியே வந்து கைகூப்பி, "பஞ்சாயத்தாருக்கு வணக்கம்!" என்றான்.
இதற்குள் ஒரு விபத்து நேர்ந்துவிட்டது. சாஹுக்களின் ஆட்கள் வந்து அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். சாஹுக்களின் தலைமை நாயப் சாரு சீல், துணிந்த கட்டை. அவன் யாருக்கும் பயப்பட மாட்டான். பைத்தியக்காரக் கிழவனைப் பிடித்து அடைத்து வைக்கும்படி அவன் உள்ளூர் நாயபுக்கு உத்தரவிட்டான். கிழவனை மட்டுமல்ல, அவனுடைய சீடர்கள் ரத்தன்லால் உள்பட எல்லாரையும்.
கிழவன் புன்சிரிப்புடன் ஜமீன் ஆட்களிடம் "சரி, வாங்க என்றான். ரத்தன்லாலிடமும் மற்ற சீடர்களிடமும் சொன்னான், "வாங்க குழந்தைகளா!"
கிழவி சிரித்தவாறே முன்வந்து "நான்?" என்று கேட்டாள்.
"ஆமா நீயுந்தான்!" என்று சாஹு ஆட்கள் சொன்னார்கள்.
"கொஞ்சம் இருப்பா! கிழவனோட கோவணம், என்துணி, தண்ணி குடிக்கற லோட்டா எல்லாம் எடுத்துக்கிட்டு வந்துடறேன். அந்த லோட்டாவிலே தண்ணி குடிக்காட்டி என் தாகம் தீராது," என்று கிழவி சொன்னாள்.
கிழவன் புன்சிரிப்புடன் தலையசைத்தான்.
என்னதான் இருந்தாலும் பெண்பிள்ளைதானே! லோட்டாவிடம் உள்ள பாசத்தை விடமுடியவில்லை அவளால்.
***
சாஹுக்கள் கிழவனை அடைத்துவைத்தாலும் அவனை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார்கள். அந்த விஷயத்தில் அவர்கள் ஒரு குறையும் வைக்கவில்லை. அடைத்து வைக்கப்பட்ட நிலையிலும் கிழவனின் மலர்ச்சி குறையவில்லை. அவன் கடவுளை