நிலையை ஒத்திருந்தது. அவர்களுக்குக் கவலை ஏற்பட்டது.
கிழவன் லால்மோகன் பாண்டேதான் விவசாயிகளின் தலைவன். குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி; பற்கள் விழுந்துவிட்டன; மிகவும் மெதுவாகப் பேசுவான், இதமாகச் சிரிப்பான். கிழவன் குழம்பிப்போய்த் தலையைத் தடவிக் கொண்டான். பரத்பூர் குடிமக்கள் அங்கு வந்து அவனைச் சூழ்ந்து கொண்டு உட்கார்ந்தார்கள். கிழவன் மரியாதையோடு அவர்களைக் கும்பிட்டான்; தாயின் மடியில் தவழும் குழந்தை தன் அப்பா, சித்தப்பா, அக்கா, அண்ணனைப் பார்த்துச் சிரிக்குமே, அந்த மாதிரி சிரித்துக் கொண்டு அவர்களிடம் "வாங்க, பஞ்சாயத்தாரே," என்றான்.
எல்லாரும் உட்கார்ந்தனர். பிறகு "தலைவரே!" என்ற ஒரேயொரு வார்த்தையைச் சொன்னார்கள். அவர்கள் சொல்ல விரும்பியதையெல்லாம் அந்த ஒரு வார்த்தையிலேயே சொல்லிவிட்டார்கள். தலைவனுக்கும் எல்லாம் புரிந்துவிட்டது. கிழவன் இன்பத்திலும் சிரிப்பான், துன்பத்திலும் சிரிப்பான், சிந்திக்கும்போதும் சிரிப்பான். அவன் சிந்தித்துக்கொண்டே சிரிக்கத் தொடங்கினான்.
கௌர்பூரைச் சேர்ந்த ஒருவன், "சாஹுங்கதான் நம்ம நில உரிமையை ஒப்புத்துக்கலியே! நாம ஏன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கக் கூடாது? சாஹுங்களும் ஜமீந்தார், சாயிங்களும் ஜமீந்தார். சாயிங்க நிலத்திலே நம்ம உரிமையை ஒத்துக் கிட்டாங்கன்னா, அவங்களுக்கு ஆதரவா சாட்சி சொல்லுங்க தலைவரே," என்று சொன்னான்.
கிழவன் தலையை ஆட்டிக் கொண்டு சொன்னான், "ஊஹூம், அது பாவம்!"
அப்படீன்னா நாமும் அடிதடிலே இறங்குவோம்."
"ஊஹூம்..."
"ஏன் பயமாயிருக்கா?" ஓர் இளைஞன் ஏளனமாகக் கேட்டான். கிழவன் சிரித்தான், அந்தச் சிரிப்பில் இளைஞன் குறுகிப்போனான். "பயமில்லேப்பா, அது பாவம்," என்று சொன்னான் கிழவன்.