அடியாட்களைக் கொண்டு வந்து ஒவ்வொரு கிராமத்திலும் வைத்துப் பக்கா ஏற்பாடு செய்திருந்தார்கள். மேலும் சாஹுக்களின் உறவினர் பலர் ஜமீந்தாரியில் பல இடங்களில் கடைகள் வைத்து நன்றாகத் தொழில் செய்து வந்தார்கள். பலர் தொழிற்சாலைகளும் அமைத்திருந்தார்கள். கிராமத்து மக்கள் அவற்றிலும் உழைத்தார்கள். இந்தத் தொழிலாளிகளிலும் சிலர் பல்லைக் கடித்துக் கொண்டார்கள். சிலர் அழுதார்கள். பல்லைக் கடித்துக் கொண்டோ, அழுதோ எப்படியோ காலம் கழிந்து கொண்டிருந்தது நல்லதும் கெட்டதுமாக. கிராம மக்கள் மரங்கள் மேல் உரிமை கொண்டாடி ஜமீந்தாரின் ஊழியர்களுடன் சச்சரவு செய்தார்கள். நில உரிமை விஷயமாகத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஜமீந்தாரின் அடியாட்களுடைய பராமரிப்புச் செலவைக் கொடுக்க மறுத்தார்கள். உப்பு, துணி, எண்ணெய் இவற்றின் விலையில் பேரம் பேசிக் கடைக்காரர்களுடன் வாக்குவாதம் செய்தார்கள். தொழிலாளர்கள் கூலிக்காக முதலாளிகளுடன் தகராறு செய்தார்கள். இவ்வாறு சண்டை சச்சரவுகளோடு காலம் கழிந்து கொண்டிருந்தது. கண்கள் முற்றிலும் மூடப்பட்ட செக்குமாடுகள் கொம்புகளை ஆட்டிக் கொண்டு செக்கு இழுப்துபோல் எல்லாம் நடந்து கொண்டிருந்தது. செக்கு ஆடி எண்ணெய் வந்து கொண்டிருந்தது, அதை எடுத்துக் கொண்டான் வணிகன்; பிண்ணாக்குக் கிடைத்தது மாடுகளின் பங்குக்கு.
திடீரென்று பூகம்பம் நேர்ந்தாற்போல் எல்லாம் தலை கீழாகிவிட்து. பயங்கரமான மாற்றம்! சாஹுக்களுக்கும் ஹல்திபாரி ஜமீந்தார்களான சாயி குடும்பத்தினருக்குமிடையே நிலவிஷயமாகத் தகராறு ஏற்பட்டுவிட்டது. அவ்வளவுதான், முன்னறிவிப்போ எச்சரிக்கையோ இல்லாமல் திடீரென்று ஒரு நாள் சாயிக்களின் அடியாட்கள் காடு, வயல்களைத் தாண்டிக் கொண்டு தடிகள் ஈட்டிகளுடன் பரத்பூருக்குப் பக்கத்துக் கிராமமான தர்மபூரின்மேல் படையெடுத்தார்கள். அவர்கள் அந்த ஊர் ஜமீன் ஆபீசுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அடித்துப் போட்டு ஆஃபீசைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுடைய நடவடிக்கைகளைப் பார்த்துப் பரத்பூருக்கும் கவலை ஏற்பட்டது. சாயிக்களின் ஆட்கள் தங்கள் தடிகளுக்கு எண்ணெய் தடவி மேலும் அடிதடிக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். ஆகையால் அவர்கள் பரத்பூரிலும் நுழைந்து தாக்குவார்கள் என்பது குறித்து ஒருவருக்கும் சந்தேகமில்லை. எங்கும் களேபரமாகிவிட்டது. பரத்பூர் ஜமீன் ஆஃபீஸ்களிலும் போராட்ட ஆயத்தங்கள் தொடங்கின.
கிராமத்து மக்கள் திடுக்கிட்டார்கள். இரண்டு எருதுகள் சண்டை போட்டால் அவற்றின் காலடியிலுள்ள நாணலுக்குத் தான் சேதம் அதிகம். மக்களின் நிலை அந்த நாணலின்