"அப்ப என்ன செய்யப் போறே? என்ன செஞ்சாப் பாவம் வராது? சொல்லு!"
கொஞ்சம் பொறுத்துக்க. என் மனசைக் கேட்டுக்கறேன், மனசு பகவானைக் கேக்கட்டும், அப்பத்தான்..."
ரத்தன்லால் சொன்னான், "என்ன செய்யணுங்கறதை சீக்கிரம் நிச்சயம் பண்ணு, தலைவரே! நீ சொல்றபடி நான் செய்யறேன்."
கிழவன் சிரித்தான். ரத்தனிடம் அவனுக்கு ரொம்ப நம்பிக்கை. மிகவும் நல்ல பையன் அவன். அதே மாதிரி துணிவும் அதிகம் அவனுக்கு.
***
"நாயப் பாபு, வணக்கங்க," என்று சொல்லிக்கொண்டே கிழவன் ஜமீன் ஆபீசுக்குள் நுழைந்தான்.
"யாரு? லால்மோகனா? வா வா," என்றான் நாயப்.
"ஆமா வந்தேன்.."
"சும்மா வந்தேன், போனேன்னு சொல்லாதே! எல்லாரும் கச்ச கட்டிக்கிட்டு எறங்கிடுங்க கோதாவிலே! அந்த ராஸ்கல் சாயிக்களை அடிச்சு நொறுக்கிடணம்! ஒரேயடியா வெட்டிப் போடணும்!"
கிழவன் சிரித்தான், "என்ன சொல்றீங்க, நாயப் பாபு?"
"ஏன்?"
"வெட்டிப்போட்டா ரத்தம் சிந்தாதா? ஜனங்க செத்துப் போக மாட்டாங்களா? அதெல்லாம் பாவமில்லையா?" கிழவனின் கண்களிலிருந்து நீர் பெருகத் தொடங்கியது.