புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
ஸ்ரீரங்கத்தில் இருந்து சரவணன் மற்றும் அவனது தாய் வைதேகி இருவரும் தஞ்சையை நோக்கிப் பயணப்பட்டார்கள். வைதேகி பள்ளி ஆசிரியராக பணிபுரிவதால் பணி மாற்றம் காரணமாக இப்போது தஞ்சைக்கு செல்கிறார் அதனால் வீட்டை காலி செய்து பொருட்களை டெம்போவில் ஏற்றிக் கொண்டு அதே டெம்போவில் இவர்களும் ஏறிக் கொண்டார்கள்.
சரவணனும் 2 டிகிரி முடித்துவிட்டான், அதற்கேற்ப வேலையை தேடினான் இன்னும் வேலை கிடைத்தபாடில்லை. வைதேகிக்கும் அவரின் கணவருக்கும் பிரிவு ஏற்பட்டு விவாகரத்து வரை செல்லாமலேயே தனித்தனியாக வாழ ஆரம்பித்தார்கள், அதில் சரவணன் தாயிடம் வந்துவிட அவளது கணவரோ மறுமணம் செய்துக் கொண்டு தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அவர் சென்றபின்பு வைதேகி தன் மகனை செல்லமாக வளர்த்தார்.
அவன் வளர்ந்து பெரியாளாகினாலும் வைதேகியைப் பொருத்தவரை அவன் குழந்தைதான், தாயிடம் இருக்கும் போதும் சரவணன் குழந்தை போலவே நடந்துக் கொண்டான் காரணம் ஒரு நொடி கூட தந்தையின் இழப்பு தாயை கவலையடைய வைக்க கூடாது, தந்தை இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் கூட வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான் அதற்காக காலம் முழுவதும் குழந்தையாகவே தாயிடம் இருக்கலாம் என முடிவெடுத்தான்.
அவனுக்கு நிரந்தரமாக வேலை கிடைத்ததும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணமும் வைதேகிக்கு உண்டு, எங்கே தனக்கென ஒரு மனைவி வந்தால் தன் தாயை அவள் தாய் போல நினைப்பாளோ மாட்டாளோ அதனால் திருமணமே வேண்டாம் இன்னும் நான் சிறுபிள்ளைதான் என சொல்லி தப்பித்து ஓடுவான் சரவணன், அதனால் வைதேகியும் திருமண பேச்சை தள்ளி வைத்தார் அதற்குள் பணிமாற்றம் வரவும் அந்த வேலையில் இறங்கினார்.
பல வருடங்களாக ஸ்ரீரங்கத்தில் இருந்துவிட்டு இப்போது தஞ்சைக்கு செல்வதில் சரவணனுக்கு ஈடுபாடில்லை ஆனாலும் வேறுவழியில்லாத காரணத்தால் ஒருமனதாக சம்மதித்தான், தஞ்சைக்கு சென்றாலாவது ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அவனுக்கு, வைதேகியும் தனது காலம் முடிவதற்குள் தன் மகனுக்கு செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்து முடித்திட வேண்டும் என ஆசைக் கொண்டார்.