போல சரவணனை அதட்ட அவனோ
”அம்மா இப்ப நான் குளிச்சா சாமான்களை இறக்கறப்ப திரும்பவும் நான் அழுக்காயிடுவேன்மா, இப்படியே இருக்கேனே நம்ம சாமிதானே ஒண்ணும் கோச்சிக்காது நீ வாம்மா சாமி கும்பிடலாம்” என அடம்பிடித்தபடியே தாயை அழைத்துக் கொண்டு பூஜையறைக்குச் சென்றான்.
வைதேகியும் சரவணனின் பேச்சைக் கேட்டு நொந்துப் போனாலும் அவன் சொல்வதும் சரிதானே என்ற எண்ணத்தில் பூஜையில் இறங்கினார். புதுவீட்டில் முதல் பூஜை சிறப்பாக முடிந்தது. வைதேகியும் கண்கள் மூடி
”கடவுளே புது வீட்டுக்கு வந்திருக்கோம், புது ஊரு வேற இங்க யாராலயும் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுப்பா, என் பையனுக்கு இங்க ஒரு நல்ல எதிர்காலத்தை அமைச்சிக் கொடுப்பா” என வேண்டிக் கொள்ள சரவணனும் தன் பங்கிற்கு மனதில் வேண்டிக் கொண்டான்
”கடவுளே எனக்கு அம்மாதான் எல்லாமே, அவங்க என்கூடவே இருக்கனும், அவங்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக்கூடாதுப்பா, அவங்களை பத்திரமா பார்த்துக்க நீ என்ன கேட்டாலும் நான் அதை தருவேன் சரியா” என கடவுளுக்கே பால் கொடுத்து வேண்டிக் கொண்டிருந்தான் சரவணன்.
பூஜை முடிந்ததும் வைதேகி காய்ச்சிய பாலை அக்கம் பக்கம் வீட்டினருக்கு தருவதற்காக டம்ளரில் வரிசையாக ஊற்றி அதை ட்ரேயில் வைத்து
”சரவணா கண்ணா சரவணா இங்க வாப்பா” என அன்பாக அழைக்க அவனோ சாமான்களை இறக்கிக் கொண்டே
”இதோ வரேன்மா” என சொல்லிவிட்டு டெம்போவில் இருந்து குதித்து நேராக வீட்டிற்குள் சென்றான்.
அவன் வரவும் அவன் கையில் ட்ரேயை தந்து