(Reading time: 16 - 31 minutes)
இறுதி வார்த்தை - தாரா சங்கர் பந்த்யோபாத்தியாய் (சு.கிருஷ்ணமூர்த்தி)

"இது ரொம்ப சாதாரண விசயமாச்சே? இது ஏன் நாயப் பாபுவுக்குப் புரியலே? ஏன் கிழவா?"

  

"அது தானே கிழவி!"

  

"இப்போ என்ன செய்யப் போறே?"

  

"நானா?" கிழவன் வெகுநேரம் யோசித்துவிட்டுச் சிரித்தான். "நான் தீர்மானம் செஞ்சுட்டேன்."

  

"என்ன?"

  

"நான் சாகப்போறேன்"

  

"சாகப்போறியா?"

  

"ஆமா, சாகப் போறேன். நான் செத்துப்போனா அவங்க வருத்தப்படுவாங்க. கடவுள் அவங்களுக்கு அறிவு கொடுப்பார். அப்போ நம்ம பேச்சு அவங்களுக்குப் புரியும்."

  

கிழவி சற்றுநேரம் யோசித்தாள். யோசித்துப் பார்த்ததில் மகிழ்ச்சி ஏற்பட்டது அவளுக்கு. அவள் சிரித்துவிட்டுப் பல தடவைகள் தலையை அசைத்துக்கொண்டே சொன்னாள், "ஆமா, நீ சொல்றது சரிதான்."

  

"சரிதானே?" என்று கேட்டு அவள் பக்கம் திரும்பிச் சிரித்தான் கிழவன்.

  

"ஆமா. நீ செத்துப்போ. செத்துப் போய் அவங்களுக்குப் புத்தி சொல்லு."

  

வெளியிலிருந்த ரத்தன்லால் கூப்பிட்டான், "தலைவரே!"

  

"வாப்பா, வா!" கிழவன் மலர்ந்த முகத்துடன் சொன்னான். ரத்தன்லால் சிரித்த முகத்துடன் உள்ளே வந்து, "தலைவரே, எல்லாரும் வந்து நின்னுக்கிட்டிருக்காங்க. நாங்க என்ன செய்யணும் சொல்லு" என்று சொன்னான், தீச்சுடர் போல் பிரகாசித்தான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.