"என்ன சிரிக்கிறே?"
"ஒங்க பேச்சைக் கேட்டுச் சிரிப்பு வருதுங்க... நாங்க தடியும் எடுக்க மாட்டோம், ஈட்டியும் எறிய மாட்டோம்."
"பின்ன எப்படி எதுப்பீங்க?"
"அவங்க தாக்க வந்தாங்கன்னா நாங்க அவங்களுக்கு முதுகைக் காட்டி "தடியிலே அடிங்க"ன்னு சொல்லுவோம், எங்க நெஞ்சைக் காட்டி "ஈட்டியாலே குத்துங்க"ன்னு சொல்லுவோம். எங்க ரத்தம் மண்ணிலே கொட்டும், மண்ணு செவக்கும், நாங்க செத்துப் போவோம். அப்போது அவங்களுக்குப் புத்தி வரும், அவங்க நெஞ்சு வலிக்கும், அவங்க கண்ணுலே தண்ணி வரும். அப்போ கடவுள் அவங்களுக்கு அறிவைக் குடுப்பார். அவங்க வெக்கப்பட்டுக்கிட்டுத் திரும்பிப் போயிடுவாங்க..."
ஹோஹோவென்று சிரித்தான் நாயப். "இதுதான் உன் அறிவா?"
கிழவன் ஓர் அதிசயப் பிறவி, அவன் சற்றும் நிலை குலையவில்லை. அவனுடைய பொக்கை வாயில் சிரிப்பு மலர்ந்தது. குழந்தையின் கள்ளங் கபடமற்ற சிரிப்பு. "இந்த வழி பலிக்கும், நிச்சயம் பலிக்கும்! என் மனசு கடவுளைக் கேட்டது. கடவுள்தான் இப்படிச் சொன்னார். ஒங்க மனசு கடவுளை ஒண்ணும் கேக்கறதில்லே. அது கேட்டா நீங்க நான் சொல்றதைப் புரிஞ்சுக்கிட்டிருப்பீங்க..."
***
தேவனுக்கேற்ற தேவி! பைத்தியக்காரக் கிழவனுக்கேற்ற பைத்தியக்காரப் பெண்டாட்டி!
எல்லாவற்றையும் கேட்டுக் கிழவிக்கும் கவலை ஏற்பட்டது. கிழவனைப் போலவே, நாயபுக்காகக் கவலை!