“ம்ம்ம்"
இருவரும் தங்கள் காரை நோக்கி நடக்கத் துவங்கினர். கல்லூரியை இறுதியாய் ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொண்டான் அருண்.
“ஏங்க..நான் ஒன்னு கேக்கட்டுமா?”
“என்ன புதுசா பெர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு.. தாராளமா கேளு"
“நீங்க அனிதாவ கல்யாணம் பண்ணிருந்தா இன்னும் சந்தோசமா இருந்திருப்பிங்களா?” நித்யா கேட்டாள். கேள்வியில் உண்மையான அக்கறை கலந்திருந்தது.
“இதுக்கு என்னால பதில் சொல்ல முடியாது. இருந்திருக்கலாம் இல்லாமையும் போயிருக்கலாம். ஆனா ஒன்னு மட்டும் என்னால சொல்ல முடியும். எனக்கு அதைவிட பலமடங்கு சந்தோஷம் உன்னோட இருக்கிற ஒவ்வொரு நாளும். நீ மட்டும் என் வாழ்க்கைல வராம போயிருந்த இன்னிக்கு நானும் எங்கயாவது குடிச்சுட்டு உருப்படாம சுத்திட்டு தான் இருந்திருப்பேன்னு நினைக்கிறேன். எந்த பொண்ணால இப்படி புரிஞ்சு நடந்துக்க முடியும் சொல்லு. அதுவும் நம்ம கல்யாணம் நடக்கும் போது என்கிட்ட என்ன இருந்தது . ஒரு டிகிரி, அனிதா விட்டுட்டுப் போன காயம் அவ்ளோதான். ஒரு வேலை கூட இல்லாம திரிஞ்சேன். நீ மட்டும் இல்லாம போயிருந்த என்ன ஆகியிருப்பேன்னு நினைக்கவே பயமாயிருக்கு. உனக்கு இதுக்கெல்லாம் எப்போவாவது பெரிய தேங்க்ஸ் சொல்லனும்னு அடிக்கடி நினைப்பேன். இப்போ சொல்றேன் நித்யா. தேங்க்ஸ் எ லாட் அண்ட் ஐ லவ் யூ ஸோ மச் "
“ஐயோ போதும்..இப்படி எல்லாம் பேசாதிங்க.. நீங்க என்ன எப்படி சந்தோசமா வச்சிருக்கிங்கன்னு எனக்கு உங்கள மாதிரி சொல்லத் தெரியாது. எனக்கு கிடைக்கிற அந்த சந்தோசத்தில பாதி நான் உங்களுக்குத் திருப்பி தந்தாவே பெரிய விஷயம் தான் எனக்கு"அவன் கையோடு தன் கையைக் கோர்த்துக்கொண்டாள்.
“ஆனா முதல் காதல் ஒரு பெரிய பாடம் தெரியுமா? அது சக்சஸ் ஆனா சந்தோஷம். ஆனா அதுல தோத்தவங்க தான் பின்னாடி இன்னொருத்தர் கூட ஒரு பர்பெக்ட் வாழ்க்கை வாழ முடியும்னு நான் நம்புறேன்" அவள் கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.
“ஹ்ம்ம்..உண்மை தான். அனிதாவோட ஹஸ்பன்ட் எப்படி?”
“ரொம்ப லக்கி அவ. இவ மேலே உயிரே வச்சிருக்காராம்"
“ம்ம்ம்... அவங்க தான் உண்மைலேயே ரொம்ப லக்கி. பொண்ணுங்களுக்கு பர்ஸ்ட் லவ் உடையுறதே ஒரு பெரிய தாங்கமுடியாத வலி தான். அதையும் மீறி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கும் போது புருஷன் கொஞ்சம் சரி இல்லேனாலும் வாழ்க்கையே இருண்டு போன மாதிரி ஆகிடும்"
“அனிதா நல்ல பொண்ணு. அதனால அவளுக்கும் எல்லாமே நல்லா தான் நடந்திருக்கு"
“இன்னும் லவ் பண்றீங்க போல" கிண்டலாகக் கேட்டு சிரித்தாள்.
“ஏன் பண்ணக்கூடாதா?” இவனும் சிரித்தான்.
“அடி விழும் நல்லா"
“அடி பாக்கலாம்"
“வீட்டுக்கு வாங்க.."
இருவரும் சிரித்தார்கள். இன்னும் நெருங்கி நடந்தார்கள் கைகள் கோர்த்துக்கொண்டே.
அதே சமயம்,
“என்ன.. எவனோ ஒருத்தன் கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்த? பழைய பாய் பிரெண்டா? காலேஜ்ல என்னென்ன பண்ணினோம்னு நெனச்சு சிரிச்சுட்டு இருந்திங்களா?” கேட்டுவிட்டு மென்றுகொண்டிருந்த பாக்கை காரிலிருந்து வெளியே துப்பினான்.
“ஏங்க இவ்ளோ ச்சீப்பா பேசுறிங்க? அது அருண், அவன் பக்கத்துல இருந்தது அவனோட வொய்ப்" வெறுப்பை உமிழ்ந்தாள் அனிதா.
“ஓ.. பொண்டாட்டிய பக்கத்துல வச்சுகிட்டே..ஹஹா..அவளுக்கும் ஷேர் பண்றது புடிக்கும் போல" சொல்லிவிட்டு பலமாகச் சிரித்தான்.
“உங்களோட இந்த புத்தியால தான், உங்கள என் ஹஸ்பன்ட்னு கூட அவங்க கிட்ட சொல்ல விரும்பல"
“நீ அப்படி உண்மையாவே நினைச்சா தானே சொல்லுவ. தாலி கட்டினது மட்டும் தானே நான். இன்னும் மனசுல அவன் கூட தானே இருக்க. அவன் படம் எல்லாம் தனியாப் போய் பாத்துட்டு வரியே. எனக்குத் தெரியாதா என்ன? வேணும்னா அவன வீட்டுக்கு வரசொல்லு அடிக்கடி. நான் வேணா நைட் வெளியே தங்கிக்கிறேன்"
அதற்கு மேல் அவளுக்கேதும் பேசத் தோன்றவில்லை. இது ஒன்றும் அவ்வளவு புதிது இல்லை. ஏதோ ஒரு நாள் மனம் திறந்து தன் பழைய காதலைச் சொல்லிவிட ,அன்றிலிருந்து இவளின் அன்றாட வாழ்வு நரகமாகிவிட்டது. நஞ்சு தடவிய வார்த்தைகள், குத்திக்காட்டி காயப்படுத்தும் வக்கிரம் என ஒரு கொடூரனாக அவள் கணவன் மாறிவிட்டான். நாட்கள் போகப்போக மனம் மறத்துப்போனது. பழகிக்கொண்டாள்.
அதற்குமேலும் அவன் பேச்சைக் கேட்க வேண்டாமென வெளியே பார்க்கத் தொடங்கினாள். ஒரு இளங்காதல் ஜோடி பைக்கில் இவர்களை முந்திச்சென்றனர். அவன் பைக்கை வேகமாக முறுக்க, அவள் அவனை இன்னும் இறுக்கமாகக் கட்டிகொண்டாள். அவர்கள் முகத்தில் தெரிந்த அளவில்லா காதலும் மகிழ்ச்சியும் இவளுக்குள் ஏதோ செய்தது. புன்னகைத்தாள். இயர்போனில் தனக்குப்பிடித்த 'முன்பே வா' பாடலைக் கேட்கத் தொடங்கினாள். கார் நெடுஞ்சாலையில் வேகமாய்ச் சென்று மறைந்தது.
This is entry #92 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}