அவன் சாயாவைப் பெண் பார்க்க வந்ததிலிருந்தே அவள் மேல் காதலில் விழுந்திருந்தான். அரக்கு நிறப் பட்டுடுத்தி மிதமான ஒப்பனையுடன் அமைதியே உருவமாக வந்து நின்ற மங்கையை யாருக்குப் பிடிக்காது? மயங்கினான் இந்த மானிடன். அதன்பின் திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்து எத்தனையோ வகைகளில் முயன்றுபார்த்துவிட்டான், கன்னியவளின் தரிசனம் கிட்டாதா என்று. ஆனால் நங்கையோ இன்று தான் அவனுக்கு காட்சியளித்தாள், நான்கு மாதங்களுக்குப் பின்.
தான் இதுவரை அவளுடன் பகிர்ந்து கொள்ளாதவைகளை எல்லாம் பகிரத் துடித்த அவனது பொங்கிவந்த ஆவலில் வெந்நீர் ஊற்றியது அவளது இந்தக் கதறல்.
“ஒன்னும் இல்லம்மா. நான் உன் கதிர். இங்கே பார்” என சிறு பிள்ளைக்கு எடுத்துச் சொல்வதுபோல கூறிக்கொண்டே குனிந்திருந்த அவளது சிகை கோதினான்.
மேலும் பயந்து அவனது கையைத் தட்டிவிட்டு பின்சென்று சுவரோடு ஒன்றிப்போனாள் கதிரவனின் மனம் கவர்ந்தவள். என்ன செய்வதென்று புரியாமல் விக்கித்து நின்றான் கதிர்.
குழப்பத்துடனும், தன் துணைவியின் நடவடிக்கையைப் பற்றிய கவலையுடனும் கதிர் இருக்க, தன் வாழ்வையே புரட்டிபோட்ட அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்து கண்ணீரில் கரைந்தாள் சாயா. மொத்தத்தில் இருவரும் கதைகள் பல பேசிக் களித்திருக்க வேண்டிய இரவு எதிர்மறையாக மாறிப்போனது.
இரு வாரங்களுக்குப் பின், இருவரும் விமானத்தில் இருந்தனர். இவர்கள் செல்வது, கதிர் பணிபுரியும் அந்த மும்பை மாநகரை நோக்கி. அந்த தினத்திற்குப் பிறகு இன்று வரை இருவரும் பேசியதே இல்லை என்று சொல்லலாம். பேசாமடந்தையாகிப் போனாள் அவள்.
கதிர் பேச முயற்சித்தும் பயனில்லை. அவனைக் கண்டாலே பயந்து நடுங்குபவளிடம் என்னவென்று கேட்பான் அவன்?
தங்களுக்குள் நடப்பதை தாய் தந்தையே ஆனாலும் பிறரிடம் விவாதிக்க விரும்பாததினால், தானே சாயாவிடமிருந்து அவளது மனதினைப் பற்றி அறிந்துகொள்ள முடிவு செய்தான் அவன். அவளது போக்கு அவனுக்கு பலவிதமான கற்பனைகளை விளைவித்தது. அவற்றில் ஒன்று கூட அவனது மனதை சாந்தப்படுத்துவதாக இல்லை.
மும்பை வந்து சேர்ந்த பின்பு, தனக்குள்ளேயே ஒரு கூட்டை அமைத்து வாழ ஆரம்பித்தாள் சாயா. ஒரே வீட்டில் வாழும் அந்நியர்களாகிப் போயினர் இருவரும். இதனால் கதிரின் பொறுமை நாளுக்கு நாள் குறைந்து வந்தது. அது முழுவதும் குறையும் நாள் என்ன நடக்குமோ என்று கவலைப்பட்டான் கதிரவன்.
கதிரின் கோபக்கனலைக் கண்டவர் மட்டுமே அறிவர் அவன் சுட்டெரிப்பதில் உண்மையில் சூரியனே என்று. தனது அந்த முகத்தை தங்கள் இருவருக்கும் சுமூகமானதாக இல்லாத இந்த சூழ்நிலையில் அவள் பார்த்தால் தாங்குவாளா என எண்ணியது மனம். தன்னைவிட அடுத்தவரைப் பற்றி நினைப்பதே உண்மை அன்பு. அத்தகைய அன்பு கதிரின் மனதில் விளைந்து செழித்திருந்தது.
ஒரு நாள் பணியிடத்தில் எழுந்த பிரச்சனையை எவ்வளவு முயன்றும் தீர்க்க முடியாத கோபத்திலும், வேலைக் களைப்பிலும் சோர்ந்துபோய் வந்தான் கதிரவன். வீட்டினுள் நுழைந்தவன் கண்ணில் பட்டது, ஜன்னலின் அருகில் நின்று தொடுவானத்தை வெறித்துக்கொண்டு நின்றிருந்த சாயா.
“ச்சே! வீட்டுக்கு வந்தால் காபி குடியுங்கள் என்று சொல்லி வைத்துக்கொடுக்கக்கூட ஆளில்லை. ஏன் தான் கலியாணம் செய்தேனோ” என்று திட்ட ஆரம்பித்தான் கதிர்.
திட்டும் சத்தம் கேட்டும் அமைதியாக நின்றிருந்த சாயாவைக் கண்டு மேலும் சினம் எழுந்தது அவனுக்கு. எத்தனை நாட்கள் பொறுத்திருப்பது? வெறுமையும் வெறுப்பும் ஒன்றை ஒன்று மிஞ்ச, அவன் மனதில் இருந்ததெல்லாம் வந்து விழுந்தன.
சாயா தாங்கமுடியாமல் அழ ஆரம்பிக்க, “நீ எதுக்கு அழனும்? உலகத்துல நீ ஒருத்தி தான் இருக்கேன்னு உன்னைக் கட்டுனேன் பாரு, அதுக்கு நான்தான் அழனும்” என்றான் கதிர்.
இதனைக் கேட்டு மேலும் கேவினாள் சாயா. “இதுக்குத் தான் என்னை மாதிரி பொண்ணு வேண்டாம் என்று சொன்னேன். நான் வேண்டாம். நான் வேண்டாம்” என்று பிதற்ற ஆரம்பித்தாள்.
“வேண்டாம் வேண்டாம் என்று மட்டும் சொல்லு. ஆனால் தப்பித் தவறி கூட ஏன் வேண்டாம் என்று சொல்லிவிடாதே! அப்போதான் இருக்குறவன் எல்லாரையும் பைத்தியமாக்க முடியும்”
“சொல்றேன். நான் உங்களை விட்டுப் போவதற்கு முன் அதை சொல்லிட்டே போறேன்” என்று கூற ஆரம்பித்தாள்.
ஒன்பது மாதங்களுக்கு முன்,
சாயா கல்லூரியில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்த சமயமது. இறுதிப் பரிட்சை எழுதிமுடித்து, தோழர் தோழியர் அனைவரும் சேர்ந்து ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தனர். அவர்களில் ஒருவனது நண்பன் வினோத். ஊட்டியில் தான் தேடிவந்தவர் இல்லாத காரணத்தால் இவர்கள் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையிலேயே உடன் தங்கினான். அதில் வந்தது வினை.
அவர்கள் அங்கு சென்ற மூன்றாம் நாள், காய்ச்சல் எடுக்க, அனைவரையும் அன்று சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களுக்குக் கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டு, மாத்திரைகளை விழுங்கிவிட்டுப் படுத்திருந்தாள் சாயா.